பசித்தீ
பசித்தீ
இரவெல்லாம் பசி வாட்ட...
வயிறு உலையாய் கொதிக்க....
சோர்வில் கண்கள் இருள...
மயக்கம் எங்கோ எனை இட்டுச் செல்ல....
கரங்களில் தட்டை ஏந்தி....
தெருக்கள் தோறும் அலைந்து.....
அம்மா! பசிக்குதம்மா ....
சோறு போடுங்கம்மா....
குரல் கேட்டவுடன் நாளைக்கு வா! அதட்டல்...
பசி நாளை வந்தால்....
நான் ஏன் கால்களால் வழி தடவி....
நிலவை துணைக்கு அழைத்துக்கொண்டுஇந்த நேரத்தில் இங்கு?
மனம் கணக்கிறது!
இறைவா!
ஏன் இந்த ஈனப் பிறவி?
என்ன பாவம் செய்தேன்?
ஒரு வேளைச்சோற்றுக்கு நாயாய்......
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க....
அடுத்த வீடு.....
அய்யா பசிக்குது சோறு போடுங்க...
போ.... போ.... எல்லாம் தீர்ந்து விட்டது!
மணக்க.... மணக்க....
மீன் குழம்பு வாசனை!
கடல் போன்ற விசாலமான வீடு!
வீட்டை விசாலமாய் கொடுத்த இறைவா!
மனதை ஏன் குறுகச் செய்தாய்!
மனம் குமுறுகிறது!
நாய்க்கு கிடைக்கும் பரிவு பாசம் எனைப்போன்று நாதியற்றோருக்கு இல்லையே!
தட்டுதடுமாறி ஒரு குவளை நீர் பருகி....
இறைவா! விடியும் பொழுதேனும் வெளிச்சம் கிடைக்க வேண்டும்!
வேண்டுதலோடு....
ஆலய வாசலில் தட்டை ஏந்தி காத்திருந்தேன்!
கோயில் உண்டியல் நிரம்பியதே தவிர....
என் குண்டிக்கு பருக்கைக்கு வழியில்லை!
பசியாத இறைவனுக்கு....
படையல்..... அன்னாபிஷேகம்.....
பாலாபிஷேகம்....
பழங்கள் அபிஷேகம்!
பசித்த மனிதனுக்கு.....?
நாளும்.... நாளும்.....
ஏங்கி.... ஏங்கி.....
தூக்கமின்றி....
ஏன் இந்த சோதனை?
பசித் தீ வயிற்றை மட்டுமல்ல என் உடலையும் பற்றி எரிக்கிறது!
தெருக்களில் எனைக் கண்டால் திருநாயிலும் கேவலம்!
பகட்டுக்கு கிடைக்கும் கருணை பாமரனுக்கு இல்லை!
பசித்த ஏழைக்கு இல்லை!
இறைவா!
வறுமை பிணி வாழ்வை தீண்டாதிருக்க வேண்டும்!
பசித் தீ வயிற்றை எரிக்காதிருக்க வேண்டும்!
பரமனே ஏழைகளைப் படையாதிருக்க வேண்டும்!
"வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்"!
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" !
"தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"!
எல்லாம் ஏட்டிற்கே மட்டுமே சொந்தம்!
ஏழைக்கு இன்றளவில் கண்ணீர் மட்டுமே சொந்தம்!