எந்தப் பதக்கம் ஈடாகும்?
எந்தப் பதக்கம் ஈடாகும்?
மீசையும் அரும்பியது…
மனதினில் ஆசையும் நிரம்பியது…
நெஞ்சில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு…
கல்லூரிக்குள் கால் வைத்தேன்!
அல்லும் பகலும் அயராது உழைத்தேன்!
நாட்கள் வேகமாய் நகர்ந்தது…
படித்து முடித்து பட்டமும் பெற்றேன்!
எத்தனையோ கனவுகள் எண்ணத்தில் உதிக்க…
வண்ணத்துப்பூச்சியாய் மனம் சிறகை விரிக்க.….
கற்பனைக் குதிரை எங்கோ எனை இழுத்து சென்றது!
காலமெல்லாம் கால்வயிற்றுக் கஞ்சியோடு
கரை சேர்த்தவர்களை….
கைநிறைய சம்பாதித்து….
வயிறு நிறைய உணவளித்து……
மனம் குளிர வாழ்வித்திட ஆவல் கொண்டது!
நம்பிக்கையோடு ஏறி இறங்கினேன் படிப்படியாய்…
கால் வலித்தது…. மனம் தளரவில்லை!
செருப்புக் கூட தேய்ந்தே போனது…
நம்பிக்கைத் தேயவில்லை!
பலன்…. மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போனது தான்!
எத்தனை எத்தனை இளைஞர்கள்?
என்னைப் போன்று…… மனம் வலித்தது!
ஏழை இளைஞனுக்கு இங்கே எல்லாம் எட்டாக் கனிதான்!
வாழ்க்கைக் கூட எட்டிக்காய்தான்!
படிப்புக்கு விலை…. வேலைக்கு விலை!
வாழ்க்கைப் பாதை மாறியது!
வெளிநாட்டு ஆசை மாற்றியது…
வாழ்வில் ஜெயித்து விடலாம் என்றே…
ஆகாயத்தில் பறந்து அயல்நாடு சென்றேன்!
உழைத்தேன் வெறியோடு…..
சோர்வு எனைத்தொற்றிய போதெல்லாம்…
சோற்றுக்கு அலைந்தது நினைவில் நிற்கும்!
தளர்வு என்னை தாக்கிய போதெல்லாம்….
விலைக்கு போன என் தாயின் தாலி தட்டி எழுப்பும்!
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வீடு திரும்பினேன்!
வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட…
வாங்கிய கடனை அடைக்க….
தங்கையை கரை சேர்க்க…
தாரளமாய் ஒரு வீடு கட்ட….
திருமணம் முடிக்க……
நான் பெற்ற பிள்ளைக்கு ஏதோ கொஞ்சம் சொத்து சேர்க்க!
இப்படியே ஒவ்வொரு முறையும் பளுவை தூக்கி
பளுவை இறக்கித்தான் வைக்கிறேன்!
எனினும்….
தூக்கிச் சுமக்க வேண்டிய பளு குறைந்த பாடில்லை!
கரங்கள் சோர்ந்து விட்டது….
உடலும் தளர்ந்து விட்டது…
ஓய்வை தேடுகின்றது!
சற்றே திரும்பிப் பார்க்கிறேன்…
கடந்து போன காலங்கள்…
இழந்து விட்ட இளமை…
இறந்து போன பெற்றோர்…
தொலைத்துவிட்ட மகிழ்ச்சி….
துறந்துவிட்ட பிள்ளைப் பாசம்…
எத்தனை இழப்புகள்? வாழ்வில்.....
எத்தனை வலிகள் மனதில்....
முடிவில் கண்களில் கண்ணீர்
ஆறாய்ப் பெருக்கெடுக்க…
மனம் கேட்டது! வாழ்க்கைப் பந்தயத்தில்….
நீ தூக்கிய இந்த பளுவிற்கு….
எந்தப் பதக்கம் ஈடாகும்?