ஒரு முத்தம்.....!
ஒரு முத்தம்.....!
மாதவன் தனது சொந்த வீட்டிலிருந்து அறுபது கிலோமீட்டர் தூரமுள்ள ஒரு ஊரில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் தங்க வேண்டிய சூழல்
அங்கு சென்று ஐந்து வருடங்கள் ஆகிறது
இடை இடையே அம்மாவை சென்று பார்த்துவர தவறுவதில்லை மற்றபடி இரண்டுநாளைக்கு ஒரு தரமாவது அம்மாவிடம் போனில் நேரா நேரத்துக்கு சாப்பிட்டீங்களா, சுகர் ,பிரசர்க்கு மாத்திரை எடுத்துட்டீங்களா என்று நலம் விசாரிக்க தவறுவதில்ல, அம்மா தம்பி குடும்பத்துடன் சொந்தவீட்டில் இருக்கிறார்கள், இரண்டு நாள் முன்னாடி
எப்பொழுதும்போல் மாதவன் அம்மாவிடம் பேச, அம்மா நாளை மறுநாள் நம்ப அருணுக்கு பிறந்தநாள் உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பா வேண்டும் என்று சொல்ல, மாதவா என்னால அவ்வளவு தூரம் வரமுடியாது நான் போன்ல கூப்பிட்டு ஆசிர்வாதம் பண்ணுறேன் என்று சொல்லி வைத்தார்கள்.
அடுத்த நாள் அதிகாலை 2.30மணியிருக்கும் மாதவனுக்கு தனது சொந்த வீட்டிலிருந்து போனில் பக்கத்து வீட்டுக்காரர் தனது தம்பியின் போனில் இருந்து பேசினார் மாதவா அம்மாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியலை நீ சீக்கிரம் கிளம்பி வா என சொல்லி வைத்து விட்டார். அவர் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே அழுகுரலும், பெண்களும் ஆண்களும் பரபரபரப்பாக பேசிக்கொண்டிருப்பதும் காதில் விழுந்தது, மாதவனு்கு ஏதோ அசம்பாவிதம் நடந்ததாக மனசில் பட்டது.
அதிகாலை அந்நேரம் கார்,பஸ் எதுவும் கிடைக்காது நீண்டதூர பயணம் என்றும் பாராமல் மகனையும் மனைவியையும் தனது டூவீலரில் அழைத்துக்கொண்டு கிளம்பினான், மனசில் ஏதேதோ குழப்பங்களும் கேள்விகளும், அம்மாவுக்கு மிகவும் உடம்பு முடியாமல் போய்விட்டதோ, என்னை பார்க்க விரும்புகிறார்களோ இல்லை இறந்துவிட்டார்களோ இல்லை இல்லை அப்படியெல்லாம் இருக்கக்கூடாது கடவுளே என வேண்டியபடியே வண்டியை செலுத்துகிறான், மனசு முழுவதும் அம்மாவையே நினைத்துக் கொண்டிருக்கிறது.
அம்மாவுக்கும் மாதவன் மேல் மிகுந்த பாசம், மாதவனுக்கும் மனைவியின் உடல் நிலை சரியானதும் தனது தொழில் ஸ்திரமானதும் அம்மாவை தன்னுடன் கொண்டு வந்து வைத்து எந்த சிரமமும் இல்லாமல் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் ,அவர்களுக்கு தேவைப்பட்டதை எல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என பலவாறு கற்பனை செய்து வைத்திருந்தான். தனது இரண்டாவது குழந்தை பிரசவத்திலேயே இறந்ததும் அந்த அதிர்ச்சியில் மனைவியின் மனநிலை பாதிப்படைந்ததும் அதற்கு மருத்துவம் இரண்டு மூன்று வருடங்களாக தொடர்ந்ததும் , அதன் பொருட்டு தனது நல்ல வேலையை கூட விடுத்து மாதவன் மனைவியின் உடல் நலனை கவனிப்பதற்காகவும்,உடனிருந்து பார்த்துக்கொள்வதற்காகவும் சிறிதாக தொழில் தொடங்கி நடத்தி வந்தான்.அதனால் அம்மாவை உடன் கொண்டு வந்து வைத்துக்கொள்ள முடியவில்லை அதுவுமில்லாமல் அந்த சமயத்தில் தம்பிக்கும் திருமணம் நடைபெறவில்லை மாதவன் இங்கு வந்து இரண்டு மூன்று வருடம் கடந்த பின்னரே தம்பியின் திருமணம் நடந்தது. தம்பிக்கு எல்லாமே அம்மாதான் செய்யவேண்டும் அதுவும் ஒரு காரணம். மாதவனுக்கு இது வரை அதற்கான குடுப்பினை கிட்டவில்லை.
மாதவன் வீட்டை அடையும் போதே அங்கே ஒரே கூட்டமாக இருந்தது , எல்லோரும் மாதவனையே பார்க்க மாதவனுக்கு விளங்கிவிட்டது , வண்டியை நிறுத்தியதும் இறங்கி அம்மா என்று அலறியவாரே இறங்கி ஓடுகிறான் தனது தாய் கூடத்தில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள், மாலைகள் போடப்பட்டு தலைமாட்டில் விளக்கு ஏற்றப்பட்டிருக்க தனது சகோதரிகளும் சகோதரனும் அழுதுகொண்டிருக்க மாதவனைக்கண்டதும் இன்னும் அவர்கள் துக்கம் அதிகமாக மாதவா என்று அவனை கட்டிக்கொண்டு அழுகிறார்கள், மாதவன் வாய்விட்டு அழுகிறான் துடிக்கிறான் அன்னையின் காலடியில் அமர்ந்து கால்களை பிடித்தபடி அம்மா....அம்மா என்று கதறுகிறான், நேற்றுக்கூட பேசினாயே அருணின் பிறந்தநாளுக்கு வாழ்த்துவதாக சொன்னாயே அதற்குள் என்ன அவசரம் அம்மா எங்களை விட்டு போக எப்படி மனசு வந்தது என கதறியபடியே மயங்கி சாய்கிறான், அருகில் இருப்பவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து ஒரு வாய் கொடுக்க மயக்கத்திலிருந்து விடுபட்டு
மீணடும் அழத்தொடங்குகிறான்.
அன்னையின் இறுதி சடங்குகளுக்கான சம்பிரதாயங்களும் காரியங்களும் நடக்க
அன்னை இறுதியாத்திரை கிளம்பத்தயாராக , மாதவா இப்படியே அழுதுட்டிருந்தா எப்படி அம்மா படுக்காம கொள்ளாம நொடிகளில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது, அவர்கள் கும்பிட்ட தெய்வம் அவர்களை கைவிடலை, இப்படிப்பட்ட சாவுக்கு கொடுத்து வச்சிருக்கணும், நல்ல சாவு, அவர்கள் ஆன்மா சொர்க்கத்துக்கு போகும் அவர்களை நல்லபடியா அனுப்பி வைப்பா எனச்சொல்ல மாதவன் தனது தாயைப்பார்க்கிறான் மெல்ல அவளருகே அமர்ந்து குனிந்து பாலூட்டி சீராட்டி தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய் இறுதியாத்திரை செல்லப்போகிறாள்.
இனி அவர்கள் முகத்தை காண முடியாது, தொட்டு ஆசிர்வதிக்கும் அவர் கைகளின் ஸ்பரிசம் கிடைக்காது, மாதவா என கூப்பிடும் அந்த அமுத மொழியை கேட்க முடியாது , அவள் கையால் ஒருவாய் சாதம் சாப்பிட முடியாது, கண்காணாத இடத்திற்கு செல்லப்போகிறாள், குழந்தையாய் இருந்த போது எத்தனை முறை என்னை அணைத்து முத்தமிட்டிருப்பாள்,உச்சி நுகர்ந்திருப்பாள் மாதவன் தாயை உச்சி நுகர்ந்து அவளின் நெற்றியில் ஒரு முத்தமிடுகிறான்,ஆம் இறுதி முத்தம் மண் முத்தமிடும் முன் தன் முத்தம், அப்படியே அம்மா என்று அலறியபடி அவளை கட்டியணைக்க, மாதவனை இரண்டுபேர் பிடித்து மாற்ற தாயவளின் இறுதி யாத்திரை புறப்படுகிறது. மாதவன் கொடுத்த அந்த ஒரு முத்தத்தின் ஈரம் மாதவன் நெஞ்சில் என்றும் இருக்கும். தாயாராக இருந்து ஆசிர்வதித்தவள் இனி கடவுளாய் இருந்து ஆசிர்வதிப்பாள்.