விழிநீர் மொழி..
விழிநீர் மொழி..
உதடுகள் உச்சரிக்கும்
ஓராயிரம்
வார்த்தைகளை விடவும்..
விழிகள் மொழியும்
மௌனமான
மொழியினை விடவும்..
கண்களில் கசிந்து கன்னத்தில்
வழியும் கண்ணீர்
பேசிடும் கதைகளில்..
உள்ளத்து உணர்ச்சிகளின்
வேகமும் ஆழமும்
அழுத்தமாய் வெளிப்படும்..
உறவுகளின் பிரிவின் போது
ஓசையின்றி தொடர்
அருவியாய் கொட்டும்..
தாங்கொணா துக்கத்தில்
ஏங்கி ஏங்கி விழிகள் வீங்கி
விட்டு விட்டு சொட்டும்..
மனது உணர்ச்சி வசப்படும்
தருணங்களில்
ஊற்றாக பொங்கும்..
மகிழ்ச்சியின் மகுடத்தில்
மின்னிடும்
முத்துக்களாய் தெரியும்..
வாஞ்சையோடு நன்றி
சொல்ல இரு
விழித்துளிகள் போதும்..
பிரியமனமின்றி விடைபெறும்
இதயங்களில்
விம்மலோடு வழியும்..
எதிர்பாரா இன்பத்தின் பரவசத்தில்
சிரிப்போடும் அழுகையோடும்
கண்ணீரும் இணையும்..
நாடியோடு வாயையும் மூடிடும்
இருகைவிரல்களும், ஆனந்த விழிநீரில்
முழுவதுமாய் நனையும்..
உணர்ச்சிகளை மறைக்காமல்
ஒளிப்படக்காட்சியாய் வெளிக்காட்டும்..
வலிமையான விழி வழி நீர்..
சிலவேளைகளில் சிலசெய்திகளை
சிலருக்கு மட்டுமே புரியும்படி
மிகமிக மென்மையாகவும் பேசும்..