பெண்கள் இல்லாத உலகம்
பெண்கள் இல்லாத உலகம்
பெண்களில்லாத உலகம்
எப்படியிருந்திருக்கும்?
கண்களை மூடி
என் கற்பனைக்குதிரையின்
கடிவாளத்தை சற்று தளர்த்தி
தட்டி உசுப்பி ஓட விட...
மனதில் எழுந்த காட்சிகள்
தந்த மிரட்சியிலிருந்து மனது
முழுவதுமாய் மீண்டிட
நீண்ட நேரம் பிடித்தது..
பெண்களில்லாமல் போயிருந்தால்
ஆண்களின் வாழ்க்கை
அர்த்தமற்று போயிருக்கும்..
ஒவ்வொரு நாளும்
யுகங்களாக நீண்டிருக்கும்.
இன்பம், மகிழ்ச்சி, வெட்கம்,
நானம், பயிர்ப்பு, கோபம்,
காதல், கற்பு, ஊடல், கூடல்
எந்த உணர்வுக்கும் , எந்த உணர்ச்சிக்கும்
பெரியதாய் இடங்கள் கிடைத்திருக்காது..
அன்னைத்தமிழின் அகராதியில்
இவைகளைப் போன்ற சொற்களுக்கு
இடமும் தேவையுமிருந்திருக்காது..
இருந்திருந்தாலும், எங்கேயும்
அவைகள் பெரிதாய் பயன்பட்டிருக்காது..
அன்னைத்தமிழ் "அன்னை" இல்லாமல்
அனாதையாய் நின்றிருந்திருக்கும்......
அன்பினைப் பகிர்ந்து ஆசையோடு
அரவணைக்கும் உண்மையான
உயரிய உயிரான உறவுகள் இல்லாமல்
ஆண்களினம் அன்பினை
அறியாமல் அலைந்திருக்கும்..
நினைத்துப் பார்க்கவே
மனது பயந்து பதுங்குகிறது..
நமக்காக பிறந்து நம்மோடு
இணைந்து உயிரோடு
கலந்து போன மனைவியின் உறவு
இல்லாமல் ஒரு வாழ்க்கையா..?
மனைவியின் பரிசாக
வாழ்வில் அப்பாவின் மேல்
அளவின்றி அன்பினை கொட்டி,
மகள்களை பெற்றெடுக்காத
தந்தையரை ஏக்கத்தோடு
பார்க்க வைக்கும் அளவிற்கு
அப்பாவின் உள்ளத்தில்
உயிராக நிறைந்திருக்கும்
அழகிய அன்பான மகள்கள்.
இல்லாத வெற்றிட வாழ்க்கையா..??
காளைப்பருவத்தில்
கண்களுக்கு விருந்தாக
கவலைக்கு மருந்தாக
உணர்ச்சிகளுக்கு வடிகாலாக..
உணர்வுகளுக்கு உரமாக
சோர்ந்திடும் வேளையில்
சாய்ந்திடும் தோளாக
மனச்சோர்வினை போக்கி
தன்னம்பிக்கை தந்து
ஊக்கம் தரும் தோழிகள்...
தோழிகளினிடையே
தோன்றி உள்ளத்தை கவர்ந்து
இதயத்தில் குடியேறிய
அழகிய தேவதையான
அன்புக்காதலி
இல்லாத ஒரு வாழ்க்கையா..??
திரையுலகின் திரைகளில்
நிழல்களாக மட்டுமே
பார்த்திருந்தாலும்
மாயங்கள் ஏதேதோ செய்து
மனதுக்குள் மெள்ள புகுந்து
நினைவெல்லாம் நிறைந்திருந்து
ஆண்களின் கனவுகளில் தவறாது
தோன்றி கைகோர்த்து
கவர்ச்சி நடனம் ஆடுகிற
கனவுலக மோகினிகள்
திரையுலகின் நாயகிகள்
இல்லாத கனவுலக வாழ்க்கையா..??
சின்னஞ்சிறு அறியா வயதில்
பள்ளிக்குழந்தைப்பருவத்தில்
முதன்முதலாக ஒரு பெண்ணின்
அழகினை ரசிக்கும் படியாக
கவனத்தை ஈர்த்து மனதை கவர்ந்து
இளஞ்சிறுவனின் மனதுக்குள் நுழைந்து
ஆண்டுகள் பலவும் கடந்த பின்னும்
நினைவுகள் உள்ளே புதைந்து கிடக்கும்
முதல் வகுப்பு அழகிய ஆசிரியை..??
மனிதர்களில் ஏற்றத்தாழ்வு
எதுவும் பாராமல்..
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
வேற்றுமை பாராமல்
அனைவரும் ஒன்றே என்கிற
உயர்ந்த நோக்கோடு
அன்பும், பரிவும் கலந்த
உன்னதசேவை செய்திடும்
தேவதைகளான செவிலியர்கள்
இருந்திருக்க மாட்டார்களா??
இவர்கள் யாருமே இல்லாத உலகமா??
அது எப்படி இருந்திருக்கும்..
மிரட்டிய கற்பனையின் மீது
வெறுப்பும்,கோபமும்
சற்றே குறைந்த போது..
கற்பனை சற்று சறுக்கி கீழே போக
அறிவின் ஆளுமை சற்றே உயர்ந்திட
மனது மெதுவாய் சிந்திக்கத் தொடங்கிட
தெளிவு பிறக்கத் தொடங்கிய போது...
உண்மை விளங்கி உள்ளமும் தெளிந்தது..
ஆம்...
பெண்கள் இல்லாதிருந்திருந்தால்
என்னை பெற்றெடுக்க
என் கடவுள் என் தாய் இருந்திருப்பாளா..?
அவள் இல்லாமல் இருந்திருந்தால்
நானும் இருந்திருக்க மாட்டேனே...
பெருமூச்சு விட்டேன்..
மனது சற்றே இலகுவானது..
பெண்ணிலும் உயர்ந்த ஆணினமில்லை..
ஆணிலும் உயர்ந்த பெண்ணினமில்லை..
பெண்ணும் ஆணும் ஒன்றேயல்ல
ஆணும் பெண்ணும் வெவ்வேறுமல்ல..
என்பதை நான் நன்கு உணர்ந்திருந்தாலும்
என்மனம் பெண்களை உயரத்தில் வைப்பதால்
எனது பார்வையில் மென்மையான பெண்மையும்
உண்மையான தாய்மையும் போற்றுதலுக்குறியது..
இனிய மங்கையர் நாள் வாழ்த்துகள்..