நான் படும் பாடு!
நான் படும் பாடு!
வெயிலுக்கு முன்னே
வேலை முடிக்க வேண்டும்
ஆத்தாளின் ஆதங்கம்
கோழி கூப்பிடு முன்னே
பயிருக்கு தண்ணீர் பாய்ச்சிடணும்
அப்பாவின் ஆர்வம்!
ஆறரை பஸ்ஸ விட்டால்
ஒரு மைல் நடந்து போகணும்
எட்டரை டவுன் பஸ்ஸ விட்டால்
பஸ் ஸ்டாப்பில் காத்துக் கிடக்கணும்!
என் கவலை!
பத்து பாத்திரம் துலக்கி
பக்குவமா தண்ணீர் புடிச்சி
அழுக்கு துணிகளை வெளுத்து
அத்தனையும் கொடியில காய வைத்து
ஆத்தாடி என் இடுப்பு நோக
அரைவாளி தண்ணிய ஊத்தி
அரைகுறையாக குளிச்சி மொழுகி
அடிவயிறு கபகபக்க
அடுப்படிக்கு அடிவைக்க
தூக்கு வாளியில் கஞ்சி ஊத்தி
வஞ்சியவள் சென்றிடவே
மிஞ்சிய கஞ்சியை
தம்பி வயிற்றில் ஊற்றிடவே
கஞ்சி வடிச்சா நேரமாகிடும்
அஞ்சி அடுப்பை அணைச்சி
அடிச்சு புடிச்சு பள்ளிக்கூடம் போனால்
நேத்து கொடுத்த வீட்டுப் பாடம் நினைவுக்கு வர
அசெம்பிளி பெல்...
அடிவயிற்றில் கலக்க
அடி உதையை வாங்கி
அரைகுறையாக பாடம் கேட்டு
மத்தியானம் சோத்து பெல்லு
எப்ப அடிக்கும்? கேட்டு சொல்லு
வயிறு கேட்கும் !
பசி உயிரு போகும் !
மத்தியான சோத்துக்கு
உச்சி வெயில் மண்டை பிளக்க
விடுதியில் சோறு தின்ன
2 1/2 கிமீ நடந்து செல்ல
ஒரு வாய் சோத்தை எடுத்து வைக்க
ஏன்டா லேட்டு ? வாத்தியார் குரல்
காதில் ஒலிக்க...
கொதிக்கிற சோத்தை
எரிகிற வயிற்றில் கொட்ட
அடிக்கிற வெயிலில் வேர்வை சொட்ட...
பாதம் எரிய
நெஞ்சிக் குழி படபடக்க
பதட்டத்தில் கால்கள் வெடவெடக்க
ஓடிப் போய் உட்கார்ந்து பாடம் கேட்டு
ஒருவழியா வீடு வந்து சேர்ந்தா
மணி ஆறு...
பணியே நீ ஆறு...
இனிமேல் நமக்கு சோறு
உண்டு முடித்து ஓய்வுக்கு சாய்ந்து
ஒரு நிமிடம் கண் மூடி
விழித்துப் பார்த்தால்
உறங்கப் போன சூரியன்
விழித்திருக்கும்!
வீட்டுப் பாடம் ?
அடடே!
முடித்து விட்டு விழி மூடியிருக்கலாம்?
பிடித்து விட்டு விழி
மூடியதன் விளைவு?
அறிவுப் பசிக்கும்
வயிற்றுப் பசிக்கும்
இடையில் தினம் தினம்
நான் படும் பாடு !