தமிழணங்கே!
தமிழணங்கே!
அழகே,
என் தாய் தன் முலைப் பாலோடு
உன்னைக் கலந்து புகட்டினாள்!
தேனினும் தெள்ளிய சுவையாய் உணர்ந்தேன்!
என்னோடு நீ கலந் தாய்!
உன் அழகை என்னுள் ரசித்தனர்!
உன்னைச் சொல்லி சொல்லி வளர்த்தனர்!
அள்ளி அள்ளிப் பருகினேன்!
பேசிப் பேசி பெருமிதம் கொண்டேன்!
அஞ்சுகமே,
உன் அழகை என் பிஞ்சு விரலால்
வரைந்து பூரிப்படைந்தேன்!
என் நாவோடு உன் பா குழைந்தது!
உன் மணத்தை ( சு)வாசிக்க
என் மனம் விழைந்தது!
உன் அசையைக் கண்டேன்..
என் நாடி நரம்புகள் இசைந்தது!
உன்னடிகளைக் கண்டேன்
என் தலை பணிந்தது!
உன் தளைகளைக் கண்டேன்
என் அகம் மகிழ்ந்து!
உன் நயம் கண்டேன்
என் தேகம் சிலிர்த்தது!
உன் சுவை அறிந்தேன்
அறுசுவையும் கசந்தது!
உன் வளங்களைக் கண்டேன்
என் விழி மிரண்டது !
உன் அழகு கண்டேன்
என் மொழி வளர்ந்தது!
காதல் மலர்ந்தது!
கவிதை பிறந்தது!
புதுவழி புலர்ந்தது!
ஆண்டுகள் பல ஆயிரம் தாண்டிடினும்
உன்னழகு வாசிக்க தூண்டிவிடும் !
உன் இளமை ரசிக்க தோன்றிவிடும்!
உனைப் படைத்தவன் யார்?
உனக்கு உருவம் கொடுத்தவன் யார்?
உனைக் கண்டு மயங்காதோர் யார்?
எண்ணி வியக்கிறேன்!
ஏங்கித் தவிக்கிறேன்!
உன் அழகை என் பிள்ளை அறிந்திடுமோ?
தாய்மடியை மறந்திடுமோ?
தாய்மொழியைத் துறந்திடுமோ?
தாகம் தணிய உனை அள்ளிப் பருகிடுமோ?
அந்நிய மோகம் கொண்டு
உனைவிட்டு விலகிடுமோ?
எண்ணி தவிக்கிறேன்!
ஏங்கி துடிக்கிறேன்!
அணங்கே! தமிழ் அணங்கே!
எத்தனை பிறவி நான் எய்திடினும்...
உன்னையே நான் சுவாசிக்க வேண்டும்!
உன் புகழையே நான் வாசிக்க வேண்டும்!
உன் மடியிலேயே மயங்கி கிடக்க வேண்டும்!
உன் விரலைப் பிடித்தே நடக்க வேண்டும்!
உன் இளமை நீங்காது இருக்க வேண்டும்!
உன் வளமை குன்றாது காக்க வேண்டும்!
வாழிய நீ! இவ்வையகம் உள்ளவரை...!