சுதந்திர தாகம்
சுதந்திர தாகம்
பல கோடி யுகங்களாய்
பரிணமித்த வரலாறு...
உனக்குள்...
எனக்குள்...அடக்கம்...!
நீயும் நானும்
ஒரே வித்தில்
விளைந்த உயிர்...
தொடு உணர்ச்சி போதாமல்
சுவையைத் தேடி...பின்
சுவையோடு நுகர்தல் சேர்ந்து...
பார்வையும் பெற்று...
கேட்டறியும்
திறனும் கூடி...
சிந்தனையும்
தேர்ந்து...
ஒரறிவு தொடங்கி
ஆறறிவானோம்!
மாறுதலின் கால இடைவெளிகளில்
கிடைத்த அனுபவங்களும்
தேடல்களும்...பல்கிப்
பெருகின... பல்லுயிராய்...
தேடித் திரிந்து
தின்று அலைந்து
இன்பம் இதுவென்று
இன்புற்று இருந்து
மாண்டு போனதால்
தேடலும் முடிவற்றுப் போனதே !
எங்கு தேடியும் கிடைக்க வொண்ணா
இன்பம் தேடியே
மனம் அலை பாய...
தன்னுள் தேடும் வித்தை தெரிந்து
தனக்குள் மூழ்கி
தன்னிடம் சேர்ந்து
தணிந்ததோ...சுதந்திர தாகம் !