வியப்பு
வியப்பு
நிலமே பரு உடலாக
நீரே அதை இயக்கும் இரத்தமாக
அதை இயக்கும் ஆற்றலாக
காற்றே அதற்குப் பிராணவாயுவாக
ஆகாயமே அனைத்துக்கும் மூலமாக
இயங்குகின்ற விந்தை உடலை என்னவென்று சொல்வேன்...?!
அதில்
அறிவென்றும்
புத்தியென்றும்
கற்பனையென்றும்
அதினுட்ப இரசாயனத்தை
என்ன சொல்வேன்?!
தோல் பருப்பொருள் உணர
நாக்கு நீரின் சுவையை உணர
கண்கள் நெருப்பின் வெளிச்சம் உணர
மூக்கு காற்றின் மணம் உணர
செவிகள் ஆகாய ஒலியை உணர
மனம் எனும் மாயப்பெட்டகம்
தன்னையே உணர...
உயிர் எனும் தன்மை இவை
அனைத்தையும் உணர...
விந்தைகள் ...வியப்புகள்...
இந்த நுட்பத்தினை உணர...
அழுகின்ற பிள்ளையாய்
வாழ்க்கை தொடங்கி
அறிவு வளம் பெற
அனுபவம் வேர்விட
இளமை கைப் பிடித்து
முதுமையில் முற்றிட
இதோ பிறந்த ஒரு உயிர்
இறப்பில் முத்தமிட...
சுவடுகள் தெரியாமல்
மறைகின்ற வித்தையென்ன?!
தங்கிச் செல்லும் இடமாக
பூவுலகு தழைத்து இங்கு இருந்திட
நிரந்தரம் வாழ்க்கை என்று
நான் நினைப்பதுவும் வியப்பல்லவோ?!
வாழ்கின்ற கால அளவு
யாருக்கும் தெரியாத போதிலும்
வசை பாடியும்
கவலைகளில் மூழ்கியும்
கண்ணீரில் நீந்தியும்
குரோதங்களில் குளிர்காயும்
வாழ்க்கை கூட வினோதம் தானே?!
அன்பில் நிறைந்து
ஆனந்தம் மகிழ்ந்து
நொடிகளைக் கூட
வரம் என நினைத்து
வழங்கியவனுக்கு நன்றிகள் குவித்து
வாழ்ந்திடப் பழகும்
வாழ்க்கை திகழ்ந்தால்
மனிதா...நீ கூட விசித்திரம் தான் ...!
நன்றியுடன்...MK🎊🕊️
