அம்மாவின் காதல். . .
அம்மாவின் காதல். . .
பக்கத்து வீட்டு பரத்
பார்த்துப் பார்த்து சிரிக்கிறான்!
பதினெட்டு வயது பாவை…!
எனக்குத் தெரியாதா?
காதல்தான்
இது காதல்தான்!
கல்லூரித் தோழன் க்ருஷ்
கண்டாலே இளிக்கிறான்
‘கள்ளமில்லா காதல் இது’
என்றெடுத்து உரைக்கிறான்
அசடு என்ற பெயரில்
அவனது திருமுகத்தில்
கசடுதான் வழிகிறது!
எனக்கொரு சந்தேகம்
என் அண்ணன் காதலித்திருப்பானா…
அவன் மனைவிக்குத் தெரியாமல்
அவனிடமே கேட்டேன்
அண்ணியிடம் சொல்லாதே
‘அமிர்தா’ என்பது
அவள் பெயர் என்று
அகமகிழ்ந்து கூறினான்.
அக்காவிடம் வந்து
ஆர்வமாய் கேட்டேன்
அக்கம் பக்கம் பார்த்தாள்..
அன்புக் கணவர்
அருகில் இல்லை என
அறுதியிட்டு உறுதி கூறிய பின்
அப்படி ஒருவன் இருந்தான் என்றும்
அவன் இருப்பது அமெரிக்காவில் என்றும்
‘அமர்’ என்பது அவன்
பெயர் என்றும் சொன்னாள்!
அப்பாவிடம் தயங்கிக் கேட்டேன்
‘அம்மாவுக்கே தெரியுமே!’ என
அதிர்ச்சிக் கொடுத்தார்!
‘லூஸி’ அவள் பெயர்
என் மேல் ‘லூஸாய்’ இருந்தாள்
‘மதம்’ என்னும் பெயரால் தன் காதல்
‘கதம்.. கதம்’ ஆனது என்றார்!
அடுத்து யார் அம்மாதான்..
அனைவரும் உறங்கிய
ஆழமான ஓர் இரவில்
அம்மாவை அணுகி
ஆர்வமாய் நான் கேட்டேன்!
‘ச்சீச்சீ’ என்று சிடுசிடுத்துச் சிரித்தாள்
‘போ.. போ..’ என்று கோபமாய் அகமகிந்தாள்
‘நச்’ என்று ஓர் குட்டுக் குட்டி
‘எனக்கா… காதலா…’ என
நாணத்தில் சினம் பூசி
நன்றாக எனை ஏசி
நமட்டுச் சிரிப்பில் ஆழ்ந்தாள்!