ஞான ஓளி!(கவிதை)கோவைஎன். தீனதயாளன்
ஞான ஓளி!(கவிதை)கோவைஎன். தீனதயாளன்
வாழ்ந்தாகி விட்டது…!
வாழ்ந்தாகி விட்டது என்பதற்கான
அடையாளம் என்ன?
பொம்மைக்கு ஏங்கிய காலம்
போய் விட்டது
கல்விக்கு ஏங்கிய காலம்
கடந்து விட்டது
காதலிக்கு ஏங்கிய காலம்
கழிந்து விட்டது
பிழைப்புக்கு ஏங்கிய காலம்
பிறழ்ந்து விட்டது
மனைவிக்கு ஏங்கிய காலம்
மங்கி விட்டது
பிள்ளைக்கு ஏங்கிய காலம்
பின்தங்கி விட்டது
செல்வத்திற்கு ஏங்கிய காலம்
சென்று விட்டது
சொல்வதற்கு ஏங்கிய காலம்
சோர்ந்து விட்டது
கேட்பதற்கு ஏங்கிய காலம்
கெட்டு விட்டது
உண்மைக்கு ஏங்கிய காலம்
உதிர்ந்து விட்டது!
வாழ்வதற்கு ஏங்கிய காலம்
வற்றி விட்டது
மதிப்புக்கு ஏங்கிய காலம்
மறைந்து விட்டது
வாழ்ந்தாகி விட்டது…!
வாழ்ந்தாகி விட்டது என்பதற்கான
அடையாளம் என்ன?
இந்த க்ஷணம்..
ஒவ்வொரு வெறுப்பிலும்
மனசு லேசு ஆகுது!
இந்த க்ஷணம்..
ஒவ்வொரு புறக்கணிப்பிலும்
மகிழ்ச்சி துள்ளி ஆடுது.
இந்த க்ஷணம்..
ஒவ்வொரு உதாசீனத்திலும்
சந்தோஷம் கரை புரளுது
இந்த க்ஷணம்..
ஒவ்வொரு ஒதுக்குதலிலும்
பாசவலை அறு படுது
இந்த க்ஷணம்..
இபோதே இறந்தாலும்..
கொண்டு வந்தது ஒன்றுமில்லை
கொண்டு போவதும் ஒன்றுமில்லை
ஞானம் பிறக்குது – எனக்கு
ஞானம் பிறக்குது!