கடலின் குரல்
கடலின் குரல்
முக்கடலை பார்க்கையில் தான்
முதன்முதலாய் கடலின் குரல்
என் காதுகளில் கேட்டது
பின் உவரியின் மணற்பரப்பில்
சங்கு பொறுக்குகையிலும்
தொலைந்த புகாரை கண்களால் தேடுகையிலும்
கடல் ஒரு மென் குரலில்
என்னை அழைப்பதை உணர்ந்தேன்
கடலின் பெரும்பரப்பிலிருந்து
வெகு வெகு தொலைவில்
சுருங்கி அடங்கியிருக்கிறது
என் சிறு வீடு
ஆனாலும் கடலின் குரல்
ஒரு மெல்லிய அதிர்வாய்
என்னுள் உள் ஆழத்தில்
கேட்டு கொண்டே இருந்தது
என் கடமையில் இருந்து விடுபட்டு
ஓர் நாள் தீடீரென்று
கடலின் குரலை தேடி
பயணம் தொடங்கினேன்
உலக நடப்பிலிருந்து
முற்றும் விலகிய அந்த
ஒரு வாரம் முழுக்க நான்
கடல் ஓரத்தில் அலைந்து கொண்டிருந்தேன்
முதல்நாள்
ஆளில்லா ஒரு கடற்கரையில்
நான் கடலின் குரலை
தேடி கொண்டிருந்தேன்
எல்லையில்லாமல் எல்லாவற்றிலும்
கவிழ்ந்து பரவியிருந்த இருளை
கண்ட அன்றைய நாள்
நான் இருளின் குரலை
தெரிந்து கொண்டேன்
இரண்டாம் நாள்
சூரியன் மேலெழும்பிய
விடிகாலை கடலில் அதன்
குரலை தேடி கொண்டிருந்தேன்
அன்பை போல் களங்கமில்லாத
வானத்தின் சௌந்தர்யத்தை
கண்ட அன்றைய நாள்
நான் வானின் குரலை
தெரிந்து கொண்டேன்
மூன்றாம் நாள்
முதிர்ந்த ஒரு மீனவனின் படகில்
நான் கடலின் குரலை தேடி
போய் கொண்டிருந்தேன்
கொடுத்தாலும் எடுத்தாலும் காதலோடு
கடலிடம் பேசிய மீனவனை
கண்ட அன்றைய நாள் நான்
மீனவனின் குரலை தெரிந்து கொண்டேன்
நான்காம் நாள்
ஒரு மலைஉச்சியிலிருந்து
நான் கடலின் குரலை
தேடி கொண்டிருந்தேன்
காலங்கள் ஒளிந்து உறைந்த
மலையிடுக்குகளையும் பாறைகளையும்
கண்ட அன்றைய நாள்
நான் ஒரு மலையின்
குரலை தெரிந்து கொண்டேன்
ஐந்தாம் நாள்
பிண ஊர்வலம் சென்ற
கடற்கரை சாலையின் ஊடே
நான் கடலின் குரலை
தேடி கொண்டிருந்தேன்
நிலையில்லா வாழ்க்கையின்
நிலையை நன்கு உணர்த்திய
மரணத்தை கண்ட அன்று
நான் வாழ்வின்
குரலை தெரிந்து கொண்டேன்
ஆறாம் நாள்
மழை தூறும் மாலை கடலில்
நான் கடலின் குரலை
தேடி கொண்டிருந்தேன்
மெல்லிய இசையாய் மனதில்
ஈரம் கசிய செய்த மழையை
கண்ட அன்றைய நாள்
நான் மழையின்
குரலை தெரிந்து கொண்டேன்
ஏழாம் நாள்
நான் எதையும் தேடவில்லை
நிர்ச்சலனமின்றி என் மனம்
அடங்கி உள் ஒடுங்கியிருந்தது
இப்போதும் எல்லையில்லா பெருங்கடல்
முன் சுருங்கி அமர்ந்திருந்தேன்
அப்போதும் கடலின் குரல்
என்னை கூப்பிட்டு கொண்டுயிருந்தது
ஆனால் நான் தெரிந்து கொண்டேன்
கடலுக்கு என்று தனி
குரல் எதுவுமில்லை
அது பல குரல்களின்
பெரும் சங்கமம்
இத்தனை தேடலுக்கு பிறகு
அதில் என் குரலும் கலந்துவிட்டது
கடலின் தோழியின் குரலாய்......