பருவங்கள்..பல..
பருவங்கள்..பல..
விளையாட்டே உலகமென்று
விளையாட்டை நோக்கியே
ஆசையும், ஆர்வமும் கொண்டு
ஓடுகின்ற சின்னஞ்சிறு பருவம் ..
நட்பேதான் வாழ்க்கையென்று
நண்பர்கள் புடை சூழ
தடையின்றி ஊர்சுற்றும்
கவலையில்லா விடலைப் பருவம்..
காதலிப்பது மட்டும்தான்
வாழ்க்கையின் நோக்கமென
ஒடியும் தேடியும் திரிந்து
காதலிக்கும் பதின்பருவம்..
ஆர்வமுடன் அலைந்து திரிந்து
வாழ்க்கையின் எதிர்கால
பயணத்திற்கு பாதையமைக்கும்
பண்பட்ட காளைப்பருவம்..
எப்படியோ முயன்று பொருளீட்ட
வேண்டுமென்று முனைப்போடு
சோர்வின்றி நில்லாமல் ஓய்வின்றி
இயங்கிடும் இளமைப் பருவம்...
இணைந்து பயணித்து
இன்பத்தின் உச்சம் தொட
இன்னுமிரு கரங்கள் தேடும்
மகிழ்வான வாலிபப்பருவம்..
வாழ்க்கைத் துணையோடிணைந்து
படைப்பாளியாகி குழந்தையை
படைத்து கொஞ்சி உறவாடி
மகிழ்ந்திடும் பெற்றோர் பருவம்..
உல்லாசமாய், உற்சாகமாய்,
உலகெங்கும் சுற்றி வந்து
வாழ்க்கையை அனுபவித்து மகிழ
விழைகின்ற பின்னிளம்பருவம்..
அமைதியான வாழ்க்கைக்காக
ஆலயங்கள் பலவும் சென்று
இறைவழிபாடு செய்து ஆன்மீகம்
தேடுகின்ற முதிர்ந்த பருவம்..
நோயின்றி நலமுடனும்
மருத்துவத்தின் துணையின்றியும்
வாழ்தலே நிம்மதியான வாழ்க்கை
என்றுணரும் முன்முதுமைப்பருவம்..
கடந்து வந்த பாதைகளில்
நடந்த தவறுகளையெல்லாம்
முழுவதுமாய் உணர்ந்து மனதினுள்
வருந்துகின்ற தெளிந்த பருவம்..
வாழ்நாளில் ஊர்போற்றும்
வகையினில் புகழோடு வாழ்ந்து,
வாழ்ந்தது போதுமென்று நிறைவாக
உணர்கின்ற முதுமைப்பருவம்.
தனது வாழ்வின் அர்த்தத்தை
முழுமையாய் புரிந்து மரணமும்
வாழ்வினொரு பகுதியென
உணர்ந்திடும் இறுதிப்பருவம்..
பிறந்து , தவழ்ந்து, நடந்து, ஓடியும் தாவியும் குதித்து,
இளமையை கடந்து , முதுமையை அடைந்து,
ஒட்டம் குறைந்து, நடை தளர்ந்து,
இறுதிநாள் வரையிலும் தொடர்கின்ற அனைத்து
பருவங்களும் தருகின்ற அனுபவங்கள் எல்லாமே
வாழ்வின் அற்புதங்கள் என்றுணர்ந்தால்
முதுமையில் வருகின்ற மரணமுமொரு அனுபவமே
என்கிற உன்னதமான உண்மை விளங்கிடும் ...
இரா.பெரியசாமி