சாமார்த்தியம் வருமோ?
சாமார்த்தியம் வருமோ?
பால் மணம் மாறாத மனது!
பருவம் எய்தாத வயது!
பக்குவம் அடையாத உடம்பு!
கழுத்தில் மங்கல நாண்!
குழந்தை திருமணம்!
பால்ய மணம்!
பந்தம் விட்டுப் போகாது எண்ணம்!
நம்மைப் பார்த்துக் கொள்வாள் திண்ணம்!
மண்ணையள்ளி விளையாடும் குழந்தை .....
மனையைக் காக்கும் மடந்தை!
காத தூரம் கடந்து சென்று
கட்டு கட்டாய் விறகு பொறுக்கி
சர்க்கார் கிணத்துல இராட்டினம்
கட்டி வாளியால தண்ணி மொண்டு
பத்துப் பாத்திரம் துலக்கி
பத்துப் பனிரெண்டு பிள்ளைகள் பெற்று
அத்தனையும் வளர்த்து ஆளாக்கி
பக்கத்து வீட்டு புள்ளைக்கும் பாலூட்டி
வயிறு அடங்க
நெல்லுக் குத்திச் சோறாக்கி
கம்பு சோளம் இடித்துக் கூழாக்கி
கொழுந்தன் கூட்டாளி
நாத்தனார் நங்கை
மாமன் அத்தை
சின்ன மாமன் மாமி
பெரியமாமன் மாமி
அத்தனையும் சமாளித்து
கல்யாணம் காட்சி கண்டு
நல்லது கெட்டது பண்ணி
எள்ளு கொள்ளு பேரக்குழந்தைகளையும் வளர்த்து விட்டு
வீட்டுல பிள்ளைகளாய்
வளரும் ஆடு மாடு
பன்னி கோழிகளுக்கெல்லாம்
தீனி வைத்து
அத்தனையும் அள்ளிக் கொட்டி
குடிகார குப்பனோ?
கூத்தியாக் கள்ளனோ?
அத்தனையும் சமாளித்து
கண்ணீரில் அமிழ்ந்தே போனாலும்
கட்டையில போறவரைக்கும்காரி உமிழ்ந்து விட்டு
கட்டியவனை விட்டுச் செல்லாத
கட்டுக் குலையாத அந்த காலத்து
பெண்ணின் சாமர்த்தியம்
இந்த காலத்து பெண்களுக்கு வருமோ? சொல்....