மீண்டும் காதலுக்குள்
மீண்டும் காதலுக்குள்
காதல்! என்னவெல்லாம் செய்யும்?
எங்கேயும் போகாமல் என்னுடனே இருந்துவிடச்சொல்லி கெஞ்சும், சரி போ என்று கைகளை விடுவிக்கும், போகச் சொல்லிவிட்டேனே போகாமல் திரும்பி என்னிடமே வந்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா என்று எதிர்பார்க்கும், புரிந்துகொள் என்று இறைஞ்சும், ஒன்றும் உனக்குப் புரியவேண்டாம் போய்த்தொலை என்று சண்டைபிடிக்கும், அன்பின் உச்சியில் கட்டிப்புரளும், புறக்கணிப்பின் தீயில் நெட்டித்தள்ளும்,
''உன்னைத்தான் ஆதுரமாக விரும்புகிறேன்,
உன்னைத்தான் அறவே வெறுக்கிறேன்,
நீதான் பிள்ளையாய் அழுகிறாய்
நீதான் பிசாசாய் அழச்செய்கிறாய்
உன்னிடம்தான் அடிபணிகிறேன்
உன்னிடம்தான் ஆதிக்கம் செய்கிறேன்
நீதான் தாயாய் ஏந்துகிறாய்
நீதான் அநாதை ஆக்குகிறாய்
எதுவும் வேண்டாம் நிம்மதியாக இருப்போம் என்று எல்லாவற்றையும் உன்னையும் உதறி வெளிவந்த பிறகு கடைசியில் காரணமற்று துளிர்க்கும் ஒரு பொட்டு கண்ணீரே உயிரை நனைக்கிறது, நனைந்து குளிர்கிறது, குளிர்ந்து நடுங்குகிறது. உன் வெம்மை தேடி காற்றில் கை அலைகையில் மீண்டும் காதலுக்குள் பிடித்து இழுத்துப் போடுகிறாய்.''