வாசித்தது போதும் வசிக்கலாம் வா...அன்பே..
வாசித்தது போதும் வசிக்கலாம் வா...அன்பே..
ஒரு மொட்டு மலர்வது போல்
நம் வாழ்வு புலர்ந்தது...
எடுப்பதும் கொடுப்பதும் கோர்ப்பதுமாய்
நகர்கிறது தினம்.
எனக்கு நீயும் உனக்கு நானும்
வரவாகிப் போனோம்
வரமுமாகிப் போனோம்..
இலையுதிர் காலத்தில்
ஒரு முன்பகலில்...
எல்லாம் உதிர்ந்து
மொட்டைமரமான பொழுதில்
வசந்தகாலமாய் வந்து
என் மரத்தில்
இலைகளையும், மொட்டுக்களையும்
அடர்த்தியாய் ஆக்கினவன் நீ...
சிறிது நேரம் இளைப்பாற நீ அமர்ந்த பொழுதில்,
கடைக்கண்ணால் உன்னை நோக்கினேன்..
ஒழுங்காய் இல்லாத தாடியும்
ஒடுங்கின முகமும்
அலட்சியமாய் இருந்த உன் முடியும்.......
பேசிய பொழுதுகளில்
நீ வித்தியாசமானவன் என உணர்த்தியது..
லட்சங்களில் உன்னை அடைக்க முடியாத,
மிகப் பெரிய லட்சியவாதியாய் தெரிந்தாய்..
எனக்குள் தேர்வானாய்.
நீ மென்மையானவன்..
மேன்மையானவன்...
மேதகு மாணவன்
என் உள்ளே நுழைந்து...உயிரைப் பிடுங்கி
ஒவ்வொரு முறையும் எடுத்து செல்கிறாய்...உன்னுடன்.
நம் முதல் சந்திப்பை பற்றி
ஆயிரம் முறை அலசி ஆராயவும்
அலுத்ததில்லை..
அப்போழுதெல்லாம்
நினைப்பேன் அந்தரங்கமாய்..,,,
கடைசியில் யார் முந்திக் கொள்வோமோ?
கடைசியில் வாழ்பவரிடம்
எப்படி முந்திக் கொண்டவர்
நம் இறப்பின் அனுபவம்
இப்படி பகிர்வோம்?
நான் உன்னிடம் கற்றதும் பெற்றதும்
முற்றத்தில் இறக்கி விட்டால்
சுற்றத்தார் கண் படுவர்
சினேகிதிகள் புறம் பேசுவர்...
அத்தனை இருக்கு....
அதனால் தான் உன்னையே
சுற்றமும் சினேகிதமுமாய் கொண்டேன் என் அன்பே..
வாசித்தது போதும் அன்பே
ரசித்து வசிக்கலாம் வா அருகே