அடவிப்பயணி
அடவிப்பயணி
பயணிக்கத் துணிந்து விட்ட நேரம்
பாதையெல்லாம் குருதி படிமங்கள்
அதை மழையால் கழுவிக் கொண்டிருந்தது
அந்த பொட்டல் பாதையின் படிகள்
சிட்டுக் குருவியின் சப்தம் மந்தமாகிறது
களிறின் பிளிறல் காதைக் கிழிக்கிறது
கிலி பிடித்த கிளியோ பறந்தது வீட்டிற்கு
உலவும் நிலவும் ஊர் காண வரவில்லை
பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவில்லை
பந்தம் அற்று பந்தத்தோடு பயணம்
தீ பந்தத்தோடு
தீயும் மையும் கொண்டு
தீ மெய்யும் தீமையும் காணும் பயணம்
காடே உறங்கிற்று காட்டாறைத் தவிர
ஆந்தையும் அலறிற்று
ஆகாசம் பூத்து குலுங்கிட
இருட்டில் முகம் மறைத்து காத்திருக்கும் கன்னியைப்போல
நிலவோ கார் முகிலினுள்ளே
முடிந்த பாதையில் தொடர்ந்த பயணம்
புதிய பாதையோ இருட்டிலே வண்ணம்
தங்கத்தால் மின்னிய குளம் கண்டேன் அங்கு
பொன்னாலும் வைரத்தாலும் பூமி பூத்தது அன்று
அகிலமே அமைதியை இரசித்தபோது
அமைதியும் நானும் அகிலத்தை இரசித்தோமே
பூமியின் அழகினிலே வெட்கித்தான் நிலவும்
கார் முகிலினுள்ளே தன்னை ஒழித்துத்தான் கொண்டதுவோ
நான் கண்ட இவ்வழகை யார் தான் காணுவாரோ
யார் கண்ட போதும் அது நான் கண்டது போல் ஆகுமோ
இரவில் சிரித்த பூமியைக் கண்டேனே நானும்
அதன் கட்டுக்கடங்கா களிப்பில் உண்டான கண்ணீரில் நனைந்தேனே நானும்
மேகமும் வந்திறங்கி என்னோடு பூமகளின் களிப்பில் நனைந்துதான் போனதுவே
முடியாத பாதையில் முடிந்ததுவே என் பயணமும் ஆனந்தமாய்...