மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 8
மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 8
அத்தியாயம் 8
அர்த்த ஜாம பூஜை!
"இந்த பங்களாவில் இரண்டு ஆவிகள் வசிக்கின்றன.அதில் ஒன்று கன்னி கழியாத இளம் பெண்ணின் ஆவி; மற்றொன்று அவள் காதலித்த வாலிபனின் ஆவி. தங்கள் ஆசை நிறைவேறாமல் மரணம் அடைந்ததால் அவர்களின் ஆவிகள் பழிவாங்க இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன . ஸ்டீபனை இந்த ஆவிகள் பழிவாங்கும் முயற்சியில் பால்கனியில் இருந்து கீழே விழச்செய்து கொன்றனர். மிகவும் வயதான பெரியவர்கள் இம்மலை கிராமத்தில் இருந்தால் அவர்களிடம் இந்த பங்களாவில் ஏதேனும் துர்மரணம் நடந்ததா எனக் கேட்டுப்பாருங்கள் அப்போதுதான் நான் சொல்வது உண்மை எனப் புரியும்."இவ்வாறு மாந்திரீக மாமா தன் உறவினரிடம் தெரிவித்தார்.
மாந்திரீகர் சொன்னது உண்மைதான் என்று கூட்டத்திலிருந்த வயதான பெரியவர் ஒருவர் முன்வந்து ஏஞ்சலினா, தாமஸ் இவர்களைப் பற்றிக் கூறினார். அவர் கூறுவதைக் கேட்ட கேரள நண்பர் விபரத்தை மாமாவிடம் மலையாளத்தில் கூறினார். மாந்திரீகர் உடனே,"இன்னும் சில நாட்களில் இங்கே ஒரு கன்னிப் பெண்ணின் மரணம் சம்பவிக்கும். அதன்பின்னர்தான் இந்த ஆவிகள் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு இங்கிருந்து போய்விடும்."என்று கூற நண்பரும், மதன்லாலும் , மற்றவர்களும் இதற்குப் பரிகாரம் செய்ய முடியுமா எனக் கேட்டார்கள்.
மற்றொரு மரணம் ஏற்பட்டால் ஹோட்டல் தொடங்குவதைத் தடுத்து விடுமோ என மதன்லால் கவலைப்பட்டார். எனவே மாந்திரீகரிடம் என்ன செய்வது என்று கேட்டார். மாந்திரீக மாமாவும்," இதற்கு ஒரு வழி இருக்கிறது. நாளை நிறைந்த பௌர்ணமி நாள். பௌர்ணமியன்று ஆவிகள் உலவும் பொழுது ஒரு அர்த்த ஜாம பூஜை செய்து அவைகளை வெளியேற்ற முயற்சி செய்யலாம் ."என்று கூற நண்பரும் மதன்லாலும் மற்றவர்களும் உடனே அதற்கான பூஜைக்கான ஏற்பாட்டைச் செய்ய முடிவெடுத்தார்கள்.
மறுநாளே அர்த்த ஜாம பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிலருக்கு மட்டுமே பூஜையில் பங்கேற்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி மிக அமைதியாக பூஜை தொடங்கப்பட்டது. யாகம் என எதுவும் கிடையாது; பால்கனி அமைந்த தளத்தையே மாந்திரீகர் பூஜைக்குப் பயன்படுத்தினார். தளத்தின் நடுவில் அமர்ந்துகொண்டு சில கட்டங்களை மட்டும் வரைந்து ,அதன் மேல் பூஜைப் பொருட்களை ஒவ்வொன்றாக அடுக்கி, விளக்கு ஏற்றி வைத்து , கண்களை மூடி சிறிது நேரம் மௌனமாக தியானம் செய்தார். பணம் பறிப்பதற்காக பூஜை என சொல்லி மாந்திரீகர் ஏமாற்றுகிறாரோ என்று சந்தேகப்பட்டவர்கள் கூட தற்போது தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.
மாந்திரீகர் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அங்கே புகை போன்ற நிழல் உருவங்கள் தோன்ற ஆரம்பித்தது. மாந்திரீகரின் மந்திரங்கள் முடிந்ததும் கண்களைத் திறந்து பார்த்தார். புகை போன்ற நிழல் உருவங்கள் மறைந்தன. மாந்திரீகர் தன் உறவினரை அழைத்து மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்,"ஆவிகள் இரண்டும் தற்போது என் மந்திரத்தால் கட்டுக்குள் இருக்கும். இனி பயமில்லை. ஹோட்டல் தொடங்குவதை ஆரம்பியுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்."என்று கூற நண்பரும் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
நடு ஜாம பூஜை முடிக்கவும் சூரியன் உதிக்கவும் சரியாக இருந்தது. அனைவரும் அமைதியாக தெளிவான மனதுடன் கிளம்பிச் சென்றனர். மறுநாள் காலையில் வழக்கம் போல் வேலைகள் தொடர்ந்தன. பகல் இரவு வேளைகளில் பங்களாவை கண்காணிக்க இரண்டிரண்டு செக்யூரிட்டிகளை வேலைக்கு அமர்த்தினார் மதன்லால். அடித்தளம் வரையில் வேலை முடிவடையும் நேரத்தில்தான் பிரச்சனை ஆரம்பமாயிற்று. மதன்லால் கோபம் கொண்டு நேரே வக்கீலை தேடிப் போனார். அப்படி என்ன பிரச்சினை?
மர்மம் தொடரும்...........