அதே மொட்டைமாடியில்
அதே மொட்டைமாடியில்
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். கோடை வெயிலின் தாக்கத்தை விட கொரோனா வைரஸ் பெருந் தொற்றால் உலகமே வீட்டிற்குள் முடங்கிப் போடப்பட்ட காலம். சென்னையில் நான் எனது கணவர், இரண்டாவது மகன், மருமகள் இவர்களுடன் வாடகை பங்களாவில் வாழ்ந்து கொண்டிருந்தேன். சென்னையின் 100 டிகிரி வெயில் வெப்பத்திலிருந்து தப்பிக்க லாக்டவுன் அறிவிக்கப்போவதாக வதந்தி கிளம்பியதும் காலை பஸ்ஸில் கோயம்புத்தூர் நோக்கி பயணமாகிவிட்டேன். மாலை 6 மணிக்குள் ஒரு வழியாக மூத்த மகன் வீடு வந்து சேர்ந்து விட்டேன்.ஏதோ சாவு வீட்டில் இருந்து வந்தவள் போல் என்னை நேரே பாத்ரூமிற்குள் போகச் சொல்லி, குளித்துவிட்டு துணிகளையும் தண்ணீரில் அலசி உலர்த்தச் சொன்னார்கள். எனது சூட்கேஸை தொடவிடவில்லை. கொரோனா பயம் அந்த அளவிற்கு இருந்த நாட்கள் அவை.
2019 ஆம் ஆண்டில் தான் ஸ்டோரி மிரர்.காமில் ஹிந்தி கதை போட்டி அறிவிப்பு வெளியானதைத் தற்செயலாகப் பார்த்து அதில் இணைந்து கதை எழுதி அனுப்பினேன். என் கதை சிறந்த பத்து கதைகளில் ஒன்று என அறிவித்ததும் என் நண்பர்கள் அனைவரும் பாராட்டினார்கள். அதன் பின்னர் இன்றுவரை என் எழுத்துப் பணி ஸ்டோரி மிரர்.காமில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
2020 ஆம் ஆண்டிற்கு மீண்டும் போகலாம்......கோயம்புத்தூரில் மூத்த மகன், மருமகள்,பேத்தி இவர்களுடன் ராமநாதபுரத்தில் சாய் திலகம் அப்பார்ட்மெண்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்தேன். மாலையில் அனைவரும் மாடியில் அல்லது தரைத்தளத்தின் கார் பார்க்கிங்கில் ஒன்று கூடி அரட்டை அடிப்பதும் விளையாடுவதும் வாடிக்கையானது. நான் மாடியில் வாக்கிங்கிற்காக சென்றபோது நடந்த உரையாடலை எழுதி ' மொட்டை மாடியில் ஓர் உரையாடல்' என்ற தலைப்பில் ஸ்டோரி மிரர். காமில் பதிவு செய்தேன். அந்தப் பதிவை 12 K நபர்கள் படித்திருக்கின்றார்கள். எனக்கு பெருமை பிடிபடவில்லை! உற்சாகத்தில் பல கதைகளும் கவிதைகளும் என கிட்டத்தட்ட 150 பதிவுகளை நான் எழுதி இருக்கிறேன்.
2022 ஆம் ஆண்டில் 'ஆதர் ஆஃப் த இயர் 2022' என்ற இந்தியாவின் மாபெரும் இலக்கிய விருதை மும்பையில் நடந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் பெற்றபோது நான் அடைந்த பெருமைக்கு அளவே இல்லை. இத்துடன் முடிந்ததா....... இல்லையே....
2025 ஆம் ஆண்டில் மீண்டும் மும்பையில் நடந்த சாகித்ய அவார்டு வழங்கும் விழாவில் என்னுடைய தமிழ் எழுத்து இலக்கியபணிக்காக 'ஸ்டோரி மிரர் சாகித்ய அவார்ட்' எனக்கு வழங்கப்பட்டது.என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிக உயர்வான விருது என்பதால் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். நிலைமை மாறிவிட்டது....மகன் கோயம்புத்தூரில் அதே சாய்திலகம் அப்பார்ட்மெண்டில் மூன்று பெட்ரூம் வீட்டை விலைக்கு வாங்கி, சொந்தமாக்கி, கிரகப்பிரவேசம் செய்து தன் குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். சென்னையில் எங்கள் மூன்றாவது மகள் பெயரில் மாப்பிள்ளை ஒரு பிளாட்டை வாங்கி கிரகப்பிரவேசம் வைத்து அந்த பிளாட்டிலேயே ஒரு டபுள் பெட்ரூம் வீட்டில் என்னையும், கணவரையும் குடி அமர்த்தினார்கள். வாடகை வீடு என்ற நிலை மாறி சொந்த வீட்டில் வாழ ஆரம்பித்தோம். கணவர் தன் கடமைகள் முடிந்ததென கண்மூடி விட்டார்.மகன் வீட்டிற்கு வந்த நான் மொட்டை மாடிக்கு இன்று வாக்கிங்கிற்காக சென்றேன். மொட்டை மாடி அமைதியாக இருந்தது. கொரோனாவிற்கு பின் மீண்டும் மக்கள் டிவி முன்பு அமர்ந்து டிவி பார்ப்பது அல்லது மொபைலில் உட்கார்ந்து விடுவது என ஆரம்பித்து விட்டார்கள். இதனால் மொட்டை மாடியில் நடமாட்டம் குறைந்துவிட்டது. குழந்தைகள் கூட விளையாட வருவதில்லை.
ஆறு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த அந்தப் பையனை தற்சமயம் பார்த்தால் அவனுக்கும் என்னை அடையாளம் தெரியாது; எனக்கும் அவனை அடையாளம் தெரியாது. ஆறு வருடங்களில் அவன் நிச்சயம் 10, 11 வயது பாலகனாக மாறி இருப்பான். நான் மொட்டை மாடியில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்த வாட்டர் டேங்க்கின் மேல் மிக உயரமான இடம் என்பதால் அதில் ஏறி மூன்று பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அமர்ந்து ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவனைப் பார்த்தால் அந்தப் பையனின் ஜாடை போல் தெரிந்தது.ஆனால் அது அவனா என்று தெரியவில்லை. அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் கீழே இறங்கி போய்விட்டார்கள். மணி ஆறாக சூரியன் மேற்கே மலைத் தொடரின் பின்னே மறைய ஆரம்பித்தது. நானும் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு கீழே இறங்கி விட்டேன். காலம்தான் எவ்வளவு சீக்கிரம் மாறுகிறது... வாழ்க்கை நிலையும் மாறுகிறது!
