தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 7)
தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 7)
இன்டர்வியூ முடிந்து ஏதோ கோட்டையை கைப்பற்றியது போல் திரும்பினான் கண்ணன். மிகச்சிறந்த உயர்ந்த அதிகாரியான டாக்டர். பத்ரிநாத்தை சந்தித்திருந்தான். அவர் கண்ணனுடைய வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை மிகவும் கவனமாகப் படித்தார். தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். நம் நாட்டிற்கு மேன்மேலும் கௌரவத்தை சேர்க்கும் விதமாக வளர வேண்டும் என ஆசீர்வதித்தார். பின்னர்-"விரைவில் தங்களுக்கு தகவல் தெரிவிப்போம்." என்று சொல்லி மிக மரியாதையுடன் கண்ணனை ரிட்டன் டிக்கெட் கொடுத்து விடை கொடுத்து அனுப்பினர். இப்பொழுது வேறு இன்ஸ்டிடியூட்டுக்கு அப்ளிகேஷன் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை... என்றாலும் யாருக்குத் தெரியும்... சில சமயங்களில் வளர்ந்து கொண்டு இருக்கும் சிறியது என நாம் நினைக்கும் சென்டர்களில் தான் அதிகமான வசதிகள், வேலை செய்வதற்கான அதிகப்படியான சுதந்திரம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கலாம். அத்தகைய சென்டர்களுக்கும் கௌரவத்தை சேர்க்க வேண்டும். இதனால் அத்தகைய சென்டர்கள் உற்சாகத்துடன் மென்மேலும் வளரலாம். ஆனால்... இன்டர்வியூக்கு பதில் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி தயார் செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏன் ?.. காத்திருந்ததில் பல நாட்கள் ஓடி விட்டன. ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் படிப்படியாக மாறி, கவலை,உளைச்சல் என கடைசியில் ஆச்சரியமாக... என்னதான் ஆயிற்று ! போஸ்ட் ஆபீஸ் போனால் தெரியுமா?... கொரியர் திரும்பிப் போய்விட்டதா என்ன ?.... ஒரு வேளை என் சம்மதித்ததை தெரிவிக்க நான் காத்திருப்பதே அவர்களுக்குப் புரியவில்லையா ? போன் செய்து விசாரிக்க முடிவு செய்தான் கண்ணன். பல முயற்சிகளுக்குப் பின் லைன் தகுந்த உயர் அதிகாரியை அடைந்து விசாரிக்க, அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்தது- "மன்னிக்கவும், தங்களின் திறமையை உபயோகித்து உயர்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கக்கூடிய வகையான சிறந்த பதவியை நாங்கள் தற்சமயம் ஏற்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் சில வருடங்கள் காத்திருந்தால் முயற்சி செய்யலாம்."
சில வருடங்கள் !.... இது தான் அவர்களின் மௌனத்திற்கான வழியா !.....கிடைத்த முதல் அனுபவத்தால் கண்ணன் துவண்டு விடவில்லை. மல்லிகா டம்ளர் நிறைய தண்ணீர் கொடுத்தாள் .அதை வாங்கி மடக் மடக்கென குடித்தான். விரைவில் தன் மனதை நிலைப்படுத்திக் கொண்டு, மற்ற ஹாஸ்பிடல், சென்டர், மருத்துவக் கல்லூரிகளுக்கு என அப்ளிகேஷன் அனுப்பும் வேகத்தில் மும்முரமானான். சின்னதானால் என்ன... பெரியதானால் என்ன... தன் லட்சியத்திற்கு துணை போகும் வேலை செய்யும் வசதிகளும், அதனால் கிடைக்கும் ஆத்மசந்தோஷமும் போதுமே !
_ தொடரும்...