STORYMIRROR

Dr.Padmini Kumar

Thriller

5  

Dr.Padmini Kumar

Thriller

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 3

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 3

3 mins
495

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா! (தொடர் மர்ம நாவல்)

அத்தியாயம் 3

                நடுக்காட்டில் நடந்த மாயம்!

           மாடர்ன் பங்களாவைக் கட்டும்போது அதில் மின்சார இணைப்புகளைச் சேர்க்க சில எலக்ட்ரீசியன்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார் கட்டிட கான்ட்ராக்டர். அப்படி வேலைக்கு வந்த எலக்ட்ரீசியன்களில் ஒருவன் தான் தாமஸ். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்திய குடும்பங்கள் பல தங்கள் வறுமையைப் போக்க கிறிஸ்தவர்களாக மாறினார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வாறு கிறிஸ்தவர்களாக மாறிய இந்திய குடும்பத்தின் வழிவந்தவன் தான் இந்த தாமஸ். அவன் தந்தை ஆங்கிலேயர்களின் படையில் சிப்பாயாக வேலை செய்யும்போது திப்பு சுல்தானுடன் நடந்த போரில் மாய்ந்தவர். அதன்பின் அவன் தாயும் நோய்வாய்ப்பட்டு இறக்க அனாதையாக தேவாலய பாதிரியாரிடம் அடைக்கலம் ஆனான்.

              அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் படையில் வேலை செய்யும் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்காக நிறுவப்பட்டதே லாரன்ஸ் ஸ்கூல். பாதிரியார் தாமசை அந்தப் பள்ளியில் படிக்க அனுப்பி வைத்தார். தாமஸின் நுனி நாக்கில் ஆங்கிலம் தவழ்வதைக் கண்டு அனைவர்க்கும் ஆச்சரியம் தான். ஆனால் பள்ளிப்படிப்பை முடிக்காமல் ஹாஸ்டலை விட்டு விட்டு ஓடி வந்த தாமஸ் ஒரு எலக்ட்ரீசியன் இடம் வேலைக்குச் சேர்ந்து தான் ஒரு எலக்ட்ரீசியன் ஆக வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கிக் கொண்டான்.

               மாடன் பங்களாவின் கட்டுமான பணி நிறைவு பெற்றாலும் பராமரிப்பு பணிக்காக சிலரை ஆங்கில அரசாங்கம் நியமித்தது. தாமஸின் ஆங்கில பேச்சுத் திறனால் கவரப்பட்ட அரசாங்க அதிகாரிகள் அவனை நிரந்தர எலக்ட்ரீசியனாக நியமித்தனர். துரை ஜான்பாலும் , துரைசானி எமிலியும் கூட அவன் ஆங்கில பேச்சுத் திறனால் கவரப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் தாமஸ் சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு நேரே மாடர்ன் பங்களாவிற்குப் போய் அங்கு நடக்கும் நடன விருந்துவிற்கான அலங்கார விளக்குகளை ஏற்றி வைத்து விட்டு தரைதளம் சென்று சமையலறைத்தொழிலாளர்கள் உடன் நடனம் முடியும் வரை காத்திருந்து,பி பின்னர் நடனம் முடிந்தபின் அலங்கார விளக்குகளை அணைத்து விட்டு வீடு திரும்புவான்.

              இவ்வாறு தான் உண்டு தன் வேலை உண்டு என வந்து               போகும் வாலிப வயதுடைய தாமசை ஒரு நாள் ஏஞ்சலா பார்த்தாள். அவன் பேசும் ஆங்கிலம் அவன்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்திய மண்ணுக்கே உரிய கருத்த மீசை, களையான முகம் , வாட்டசாட்டமான உடல்வாகு இவற்றால் ஏஞ்சலா காதல் வயப்பட்டாள். உலகில் பருவ வயது என்பது இயல்பானது; இயற்கையானது. தன்னைக் கவனிக்கும் ஏஞ்சலாவை தாமஸால் தட்டிக் கழிக்க முடியவில்லை . இருவரும் கண்களால் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இருவரும் ஒருவர் மற்றவரைப் பார்க்க இயலாத நிலை ஏற்பட்டால் தவிப்புக்குள்ளானார்கள். காதல் தராதரம் பார்த்து வருவதில்லை. காதல் பறவைகளில் ஒன்று பிரிந்தால் மற்றதும் உயிர் வாழாது என்பார்கள். இக் காதல் பறவைகளின் கண்வழி புகுந்து மனதை ஊடுருவிச் சென்ற காதல் ஆழமானது. துரைசானியோ தன் மகளை மிகவும் நம்பினாள்; அதைவிட அதிக அளவில் நம்பிக்கை தாமசின் மீது கொண்டிருந்தாள். ஆனால் துரையோ....

              பொதுவாக மாதம் ஒரு முறை துரை ஜான்பாலும் உதவியாளர்களும் முதுமலை காட்டிற்கு வேட்டையாடச் செல்வது வழக்கம். அதுபோல் இம்முறை வேட்டைக்குப் புறப்படும் போது தாமஸையும் உடன் அழைத்து வருமாறு உதவியாளர்களிடம் சொன்னார். முதலில் ஆச்சரியப்பட்ட தாமஸ் தன் காதலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இது எனக்கருதி உடன் புறப்பட்டான்.

               காட்டின் நடுவே வழக்கமாக மான் வேட்டையாடும் இடம் வந்ததும் உதவியாளர்கள் துரைக்காக டென்ட் போட ஆரம்பித்தார்கள்.அப்போது துரை தாமசை அழைத்து தண்ணீர் எடுத்து வர அருவிப் பக்கம் போகச் சொன்னார். தாமஸ் தனியாகப் போகத் தயங்கினான்.ஏனென்றால் அந்த அருவியில் நீர் குடிக்க புலிகள் அந்த நேரத்தில்தான் வரும் என்பதை அனைவரும் அறிந்தது தான். தாமஸ் தனியாகப் போகத் தயங்குவதைப் பார்த்த துரை,"துணைக்கு நான் வருகிறேன். போகலாம் வா "என்று கூறி முன்னாள் நடக்க ஆரம்பித்தார். தாமஸூம் இது நல்ல சந்தர்ப்பம் என நினைத்து அவரைப் பின் தொடர்ந்தான்.

               துரையும் தாமஸூம் போன சிறிது நேரத்தில் துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது.அனைவரும் திடுக்கிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். அப்போது துரை தன் கையில் துப்பாக்கியுடன் திரும்பினார். தாமஸைக் காணவில்லை. உதவியாளர்கள் டென்டுக்குள் சென்றுவிட்ட துரையிடம் தயங்கித் தயங்கி,"தாமஸ் இன்னும் வரவில்லையே ஐயா" எனச் சொல்ல துரை,"அவன் இனி வரமாட்டான்."என்று கூறினார். அதைக் கேட்டதும் அனைவரும் பயத்துடன் அவரைப் பார்த்தனர்."நாங்கள் அருவிப்பக்கம் போனபோது புலி ஒன்று தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்ததும் என் துப்பாக்கியால் சுட்டேன். ஆனால் தாமஸ் புலியைப் பார்த்த பயத்தாலும் , துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாலும் நிலை தடுமாறி கீழே உருண்டு விழுந்ததால் அருவியால் அடித்துச் செல்லப்பட்டான். உங்களில் சிலர் உடனே சென்று வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துவிட்டு அவன் அவன் உடல் எந்த இடத்தில் ஒதுங்கியது எனத் தேடச் சொல்லுங்கள். உடலை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வாருங்கள். நான் மற்றவர்களுடன் பங்களாவிற்குத் திரும்புகிறேன்" என்று கூறி விட்டு கிளம்ப ஆயத்தமானார். பட்டப் பகலில் நட்ட நடுக்காட்டில் நடந்த மாயம் என்ன?

                       தொடரும் மர்மம்.......


Rate this content
Log in

Similar tamil story from Thriller