கட்டிபிடி வைத்தியம்
கட்டிபிடி வைத்தியம்
அவள் எதுவும் செய்யவில்லை ... ஆனால் பழி அவள் மேல்... கத்தி அழுது விட வேண்டும் போல இருந்தது... ஆனால் பயம்... என்னதான் செய்தாலும் தன்னை நம்ப மாட்டார்களே...
"அம்மா... தம்பி தா.. அத.... அத ஒடச்சான்... நா இப்போ தா வந்தே.... ", என அவள் விழியே மௌன மொழி பேசுவதை அந்த தாயுள்ளம் மட்டுமே அறிந்திருந்தது...
"ஆடங்காளி... பொம்பள புள்ளயா.... அடக்க ஒடுக்கமாக ஒரு இடத்துல ஓக்காராம... இப்புடி ஆடிகிட்டு திரியுறா... அத கண்டுக்காம என்ன டி செஞ்சுட்டு இருக்க...", என வெவ்வேறு மாடுலேஷனில், கால்மணி நேரமாக கேட்டு கொண்டிருக்கும் தன் அத்தையின் அர்ச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்து... தன் மகளுக்கும்.. அரண்ட விழியுடன் நிற்கும் மகனுக்கும், அறையினுள் செல்லுமாறு கண்ணை காட்டியவள் , "போதும் அத்த.... நீங்க பத்து வயசுல இருகைல இப்டி தானே இருந்துருப்பீங்க.... அவ கொழந்த... இப்போ விளையாடலன்னா அவ வேற எப்போ விளையாட போறா...", என சற்று சத்தமாகவே தாயவள் கத்தி விட... அவளின் அத்தை அப்படியே உறைந்து விட்டார்... மருமகளின் சத்தத்தால் அல்ல.... தனது குழந்தை பருவ கசந்த நினைவுகளால்..... அவர், அப்போது இருந்த தன் மனநிலையில் மூழ்கி விட... தனது அன்றைய ஏக்கங்கள் ஒவ்வொன்றாய் வந்து அவர் நினைவடுக்கில் சூழ்ந்து அவரை மௌனத்தில் ஆழ்த்தியது..
அத்தையின் மௌனத்தை பயன்படுத்திக் கொண்டு... தன் பிள்ளைகளை பார்க்க அங்கிருந்து நகர்ந்து அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தால் அந்த தாய்... அப்போது அங்கு நடந்த அந்த நிகழ்வால் தாயுள்ளம் குளிர்ந்தது...
அந்த பத்து வயது தேவதை... அவளின் குட்டி தம்பியிடம் கோபித்து கொண்டு கட்டிலின் காலடியில் முட்டி கொண்டு இருப்பது போல் அமர்ந்திருக்க... கட்டிலுக்கு மேல் ஏறி சென்ற அந்த குட்டி சிறுவன் அவன் அக்காவை சமாதானம் செய்வதற்காக சற்று அவளை நோக்கி குனிந்து அவள் தலையை தன்னோடு அனைத்து கொண்டான்..., அவன் எவ்வளவு தான் பேச்சுவார்த்தை நடத்தியும் அவளிடம் அசைவு இல்லை.... சற்று நேரத்தில் அவன் கீழிறங்கி வந்து அக்காவின் அருகில் அமர்ந்து அவளை மௌனமாக, அதே நேரம் இறுக்கமாக அனைத்து கொள்ள... சில நொடிகளில் பதிலுக்கு அவனை அனைத்து கொண்ட அந்த குட்டி தேவதை... தன் தம்பியின் ஒற்றை அணைப்பில் இவ்வளவு நேரம் நடந்ததை மறந்தாள்.