Siva Kamal

Drama

4.7  

Siva Kamal

Drama

வானவில்

வானவில்

5 mins
504


நல்ல நட்ட நடு மத்தியான சித்திரை வெயிலில் டவுன் பஸ்ஸில் சென்றவர்களுக்கு அந்த அனுபவம் புரியும். மரணக் கொட்டுவாயில் போட்டது போல இருக்கும், அய்யோ சுடுதே என கத்தக் கூட முடியாது


தமிழக பஸ்ஸில் தான் கணக்கே இல்லியே.எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.இந்த சூழ்நிலை மனிதர்களுக்குள் ஒருவித கசப்பை ஏற்படுத்தியது.


“ தள்ளி உட்காரும் , அய்யா ! "


" தள்ளி உட்காராமல் இப்பொ என்ன உமது தலையிலா உட்கார்ந்திருக்கிறேன் ? "


" தள்ளி உட்காரச்சொன்னால் எதுக்குயா கத்துர ? இவ்வளவு ரோசம் உள்ளவர் சொந்த காரில் போகணும் "


" ஏன் உன் அப்பவூட்டு காசா , நீர் சொந்த காரில் போகிறதுதானே ? "


" உஸ் ; அப்பப்பப்பா ! " " என்ன புழுக்கம் ; என்ன வேக்காடு ! "


“ இந்த பஸ் இப்போதைக்கு நகராது . "


" ஷ் ராமா , பகவானே "


(பஸ்ஸின் உள்ளே இருந்தவர்கள் வெந்து மடிந்து கொண்டிருந்தனர்.மரங்களில் இலை கூட அசையவில்லை.

பஸ் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் இருந்தன . பிரயாணிகள் முணுமுணுத்தார்கள் . கொட்டாவி விட்டார்கள் .


'என்னடா பஸ் நடத்துரீங்க' என்று தங்களையே நொந்து கொண்டார்கள் . சில பிரயாணிகள் தைரியமாகக் கண்டக்டரையும் , டிரைவரையும் , பஸ் கம்பெனியையும் தங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளில் சபித்துக் கொண்டிருந்தனர்)


சம்பந்தமே இல்லாதது போல, மரத்தின் நிழலடியில் கண்டக்டர்களும் டிரைவர்களும் ஏதோ ஒரு அரசியல் பேச்சில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தனர் .பஸ் புறப்படும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது .


ஒருவழியாக வந்து சேர்ந்தார் கண்டக்டர் . கடவுளைக் கண்டது போலிருந்தது . சிலர் கொலைப் பார்வை பார்த்தனர் கண்டக்டரை .


படியில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை, " இறங்குவோய் ! " என்றார் கண்டக்டர் .


(மன்னன் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா ?)அவர்கள் இறங்குவதைப் பார்க்கப் பரிதாபகரமாக இருந்தது. இறங்கியவர்களைப் பார்த்துக் கண்டக்டர் ," ஏறுவோய் " என்றார் ! அவர்கள் மறுபடியும் ஏறிக்கொண்டார்கள் .


கண்டக்டர் முகத்தில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை . கடுகடுப்பு மறைந்தபாடில்லை . அப்புறம் அவர் பிரயாணிகளை ஒழுங்குபடுத்தி ' அடுக்கினார் ' . அடுக்கியதை எல்லாம் எண்ணினார் ; திரும்பவும் எண்ணிவிட்டு டிரைவரை நோக்கிக் குரல் கொடுத்தார் . ' சீட் ஐம்பத்தி அஞ்சி ; நம்பர் நூத்தி ரெண்டு . பாலப்பாளையம் ஒரு இறக்கம் . ரைட்'


உட்கார்ந்திருந்த பிரயாணிகளில் ஒரு தடியான ஆசாமி , பாவம் ! கேஸ் பூஸ் ' என்று மூச்சு வாங்கி இளைத்துக் கொண்டிருந்தார் ; ஆஸ்துமா காரணமாகவோ , அல்லது திட்டம் இல்லாமல் தின்று கொழுத்து விட்டதனாலோ , யாருக்குத் தெரியும்?


ஒரு போலிஸ்காரர் , துப்பாக்கியைத் தோளில் சாத்திக்கொண்டு, பெரிய சட்டி வடிவமுள்ள, அடுத்த ஜென்மத்தில் தான் சிரிப்பு வரும் போலிருந்த இறுகிப் போயிருந்த தன் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்.


இன்னொருவர் பல் டாக்டர் , வாரம் ஒரு தடவை அந்த ஊருக்கு வந்து போவார் . ஒரு காலத்தில் அவர் முகம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும்!! இப்பொழுது அவருக்கு வரும் நோயாளிகளின் ஊத்தை நிறைந்த பற்களைப் பார்த்துப் பார்த்து , துர்வாடையையும் அனுபவித்து அவருடைய முகத்தில் அருவருப்புத் தங்கி ,அதுவே நிரந்தரமாகிவிட்டது .


நமக்கெல்லாம் 32பல் தான இருக்கும், ஆனால் டாக்டருக்கு பக்கத்தில் இருந்தவனுக்கு இருக்கும் ஒரு 72பல். அவனுக்கு ஒவ்வொரு பல் இருக்க வேண்டிய இடத்திலும் இரண்டு பற்களும் , சில இடங்களில் மும்மூன்று பற்களும் முளைத்திருந்தன . டாக்டர் அவனையே வைத்த கண்கள் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் .


கிழவிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் . அதில் ஒரு கிழவி மட்டும் தூங்கிக்கொண்டிருந்தாள். அதில் ஒரு கிழவி தன் பொக்கைவாய் நிறைய கருப்பட்டிப் புகையிலையைக் குதப்பிக் கொண்டு ஒரு கண்ணை மூடியும் இன்னொரு கண்ணைப் பாதி மூடியும் தூங்கிக்கொண்டிருந்தாள் . அவளது வாயில் புகையிலை எச்சில் ததும்பி நின்று கீழே உதிர முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருந்தது .


பக்கத்தில் இருந்த கிழவி அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் . அது விழுந்தால் தன் மீதுதான் விழும் என்ற பயம் அவளுக்கு .


பாலப்பாளையம் இறக்கத்தில் பஸ் வந்து ஓர் அசைப்பு அசைந்து நின்றது .


தூங்கிக் கொண்டிருந்த பிரயாணிகள் எல்லோரும் தங்கள் தலைகளை உடம்போடு ஓர் அசைப்பு அசைத்து மெதுவாகக் கண்களைத் திறந்தும் திறக்க இஷ்டப்படாமலும் இருந்தார்கள் .


இரண்டாவது கிழவி மெதுவாக எழுந்து பனைநார்ப் பெட்டியில் இருந்த தன் சாமான்களோடு இறங்கினாள் .


இந்தச் சமயம் திடீரென மென்மையான குளிர்ந்த காற்று பஸ்ஸினுள் ஊடுருவிப் புகுந்து பிரயாணிகளைத் தடவிச் சென்றது;


ஏறக்குறைய அதேசமயம் யௌவனம் மிகுந்த பெண்ணின் கலகலவென்ற சிரிப்பொலி எல்லோர் காதுகளிலும் புகுந்தது;


பளிர்னுமின்னல் அடிச்சாப்பலே இருந்தது. அந்த மாதிரி நிறமே நான் பார்த்ததில்ல. கொன்றைப்பூ பூத்து ரெண்டு நாள் ஆனப்புறம் அந்த மஞ்சள் வெள்ளையாப் போயிடுமே. அதுவும் காலை வெயில்லே அதைப் பாத்தா எப்படி இருக்கும்? அந்த நிறம் அவள். நடந்து வருவது போல இல்லை.மிதந்து வரமாதிரி இருந்தது.தன் கருநீள கூந்தலில் தேன் இழைகளை ஓடவிட்டு பொலிவுற்று இருந்தாள்


கண்ணு, முக்கு. கைவிரல், கால்விரல் மனுஷப் பிறவி இவ்வளவு அழகா இருக்கமுடியுமா? எல்லோருக்கும் ஒரு சந்தேகம் நிழலாடிச்சு. ஏதோ மோகினியா இருக்குமோன்னு கூட அதிசியமாயிருந்திச்சு. பூ அழகாயிருந்தா அது சகஜம். இயற்கை அழகாயிருந்தா அது வாடிக்கை. ஆனா மனுசப் பிறவி இப்படி அழகா, இந்த கிராமத்திலா நம்பவே முடியல யாருக்கும். கொஞ்ச நேரம் எவருக்கும் ஒண்னும் புரியல. மண்டையிலே அறஞ்சாப்பலதான் இருந்தது.


அந்த கிராமத்திற்கே சம்பந்தமில்லாத அந்தப் பெண் , இடுப்பில் குழந்தையுடன் உள்ளே வந்தாள் .


போலீஸ்காரரைக் கண்டதும் அந்தக் குழந்தை சிரித்தது . போலீஸ்காரர் விழித்துப் பார்த்தார் . அவர் முகத்தில் இருந்த கோணல் மறைந்து குதூகலம் படர ஆரம்பித்தது .'தங்கத்துக்கு சிரிப்ப பாரு ! ' போக்கிரிப் பயலே ! ' என்று போலீஸ்காரர் கொஞ்சினார்


கருகரு முடியும் கொழுகொழுவென்ற பால் கன்னங்களும் கெண்டை மீன் கண்களும் , மிருதுவான கைகளில் அணிந்திருந்த வளையலால் அம்மாவின் கன்னத்தை உரசியபடி, சிரித்த செந்தாமரை போன்ற முகமும் கொண்டு தன் அழகான கழுத்தைத் திருப்பி எல்லோரையும் சுற்றிப் பார்த்தது குழந்தை . மென்மையான குளிர்ந்த காற்றும் நறுமணமும் பஸ்ஸினுள் ஊடுருவிப் புகுந்து சென்றது .


குழந்தை ஆனந்தமாகக் கைதட்டிச் சிரித்தது. பஸ்ஸினுள் மூதேவிக் களை விலகி லட்சுமிகரம் வழிய ஆரம்பித்துவிட்டது. பிரயாணிகள் எல்லோருக்கும் குழந்தையையும் , தாயையும் பார்த்ததில் ஒரே உற்சாகம் , சொர்க்கத்தையே தன் கையில் ஏந்தி நின்ற இந்தப் பெண்மணியை எல்லாருக்கும் சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும் போல் இருந்தது .


ஒரு கிழவி குழந்தையை ' வாடி ராசாத்தி ' என்றாள். இன்னொரு கிழவி " என் செல்லக் கண்ணுல்லே " என்று அழைத்தாள் . குழந்தை சிரித்தபடியே தலையை ஆட்டி ஆட்சேபம் தெரிவித்தது .


டிக்கெட் கிழித்து கண்டக்டர் அந்தக் குழந்தையிடம் கொண்டு வந்து கொடுத்தார் .அதை வாங்கி அந்த குழந்தை உஃப் என்று ஊதி ஜன்னல் வழியே காற்றோடு பறக்கவிட்டது குழந்தை .


கண்டக்டர் பிரமிப்புத் தட்டியதுபோல் நடித்துவிட்டு, 'அடேய் சுட்டீ' என்று குழந்தையின் கன்னத்தில் செல்லமாக தட்டினார். மீண்டும் அம்மாவும் குழந்தையும் கலகலவென்று சிரித்தனர் .

.

பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தது . கிழவிகள் இருவரும் அந்தப் பெண்ணோடு பேசிக்கொண்டே வந்தார்கள் . மலர்ந்த முகத்தோடு அந்தப் பெண் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள் . பல் டாக்டரும் அந்தப் பெண்ணின் சிரித்த முகத்தையே பார்த்துக் கொண்டு வந்தார் .


என்ன அழகான பற்கள் ! என்ன ஆரோக்கியமான பிரகாசம் பொருந்திய பற்கள் ! இப்படிப் பற்களைப் பார்த்து எத்தனை நாள் ஆகின்றன ? அந்த டாக்டருக்கு தாம் பிறந்த பூமியின் ஞாபகங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தன . அவருடைய முகத்தின் பழைய அழகு வந்து குடி புகுந்தது .


நாலாவது மைலில் வந்து பஸ் நின்றது . பெண்ணும் குழந்தையும் இறங்கினார்கள் . கிழவிகள் இருவரும் குழந்தையின் கன்னத்தைத் தடவி , தடவிய தங்கள் கையை முத்தமிட்டார்கள் .


ஆமாம்,சிறிது நேர வானவில் போல அந்த குழந்தை அந்த பேருந்தை குளிர்சாதன பேருந்தாக மாற்றிவைத்தது


" போயிட்டு வாடா கண்ணு என எல்லோருமே மானசிகமாக அவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்கள் .



பஸ் மெதுவாக , சகிக்க முடியாத பெருத்த இரைச்சலுடன் நகர்ந்தது .


தடியான ஆசாமி சோம்பல் முறித்து எரிச்சலுடன் பெரிய நீண்ட கொட்டாவி ஒன்றை விட்டார் . மீண்டும் அவருக்கு இளப்பு ஆரம்பமாகிவிட்டது . அவரைத் தொடர்ந்து இன்னொருவர் துணைக் கொட்டாவி விட்டார் . போலீஸ்காரரும் , அந்தக் கிழவியும் தூங்க ஆரம்பித்தார்கள் .


டாக்டர் தம் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தவனைப் பார்த்துக்கொண்டே இருந்தார் . அவர் முகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக அருவருப்பு வளர்ந்துகொண்டே வந்தது .


" உஸ் ! அப்பப்பா ! என்ன வேக்காடு , என்ன வேக்காடு , கொஞ்சம் தள்ளி உட்காரும் , ஐயா ! எத்தனை தடவை சொல்லுவது?


" கண்டக்டர் அவர்களை நோக்கிக் கையை நீட்டி ஏதோ கோபமாகக் கத்தினார் . பஸ்ஸின் ஹாரன் சப்தத்தில் அது ஒருவர் காதிலும் விழவில்லை .


Rate this content
Log in

Similar tamil story from Drama