மலர்கள்
மலர்கள்
மலர்கள்
காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டு
காலனும் ஓடிப்போவானே எனக்
கவிமணி பாடினாரே என
காலை உலா செல்ல நடந்தேன்.
கண்கவர் வண்ண மலர்கள்
காற்றில் அசைந்திடக் கண்டேன்.
கொத்து கொத்தாக நந்தியாவட்டை,
கனக அரளியுடன் மற்றும் செவ்வரளியும்
கணக்கில் அடங்கா பொகைன்விலா பூக்களும்
கண் குளிர மனம் மகிழ வீடு திரும்பினேன்.
மாலை நேரம் வந்தது
மறந்திடாமல் உலா செல்ல
மனம் மகிழச் செய்த மலர்கள் அனைத்தும்
மண்ணில் வீழ்ந்து கிடந்தனவே!
மலர்களைக் கொய்யாதீர்கள் என
மனிதனுக்கு தான் கட்டளையோ?
மறந்தனரே இயற்கையை
மண்ணில் உதிரத்தானோ இம்மலர்கள்?
மனம் வருந்தி வீடு திரும்பினேன்.
உதிரிப் பூக்களின் இறுதி உரை
உறங்குவது போலும் சாக்காடு
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என
உரைத்தார் பொய்யாமொழிப் புலவர்
இரவில் இறந்து விடியல் உடன் பிறந்த நான்
காலை நடை பழக ஆரம்பித்தேன் அங்கே
புதிதாய் பிறந்த மலர்களும்
காற்றில் மணம் பரப்பி மனதை நிரப்ப
காலடியில் பட்ட உதிரிப் பூக்களையும்
உற்று சிறிது நேரம் நோக்கினேன்;
இறுதி நேரம் நோக்கினாலும் உதிரிப்பூக்கள்
உறுதியாக ஒலித்தன இம்மொழிகள்_
"கைவிரித்து வந்தேன்;கை விரித்தே சென்றேன் "
என்றான் உங்களின் ஓர் மாவீரன் .
இன்று இருப்பார் நாளை இல்லை எனும்
பெருமை உடைத்து உங்கள் உலகம்
எங்களையும் உங்களைப் போல் எண்ணினீரோ
மனித பதர்களே !
வண்ணம் கொண்டு பிறந்தோம் நாங்கள் ;
வண்டின் தேன் கொண்டுவந்தோம் நாங்கள்;
மனிதமனம் கவர் மணம் பரப்பி வந்தோம் நாங்கள்;
மகரந்தம் கொண்டோம் நாங்கள்
கொண்டு வந்த அனைத்தையும்
கொள்ளை அடிக்காமல் ,
தன்னலம் பாராமல்,
தக்கவரிடமே சேர்ப்பித்து
கணநேரம் வாழ்ந்தாலும் கருமத்தை நிறைவு செய்து
மண்மூடிப் போனோம் என நினைத்தாயோ எம்மை ?
மண்ணோடு மண் கலந்து வேர் நுனி நுழைந்து
பின்னும் தன் கடன் முடிக்க
பிறந்தோம் மலர்களாய் மணம் பரப்பி.