காதலுக்கு கண்ணில்லை
காதலுக்கு கண்ணில்லை
கண்ணாடியில் ஆயிரம் முறை
என் பிம்பத்தை பார்த்திருந்தாலும்,
உன் கருவிழிக்குள்
எனை கண்ட போதே
அழகாய் தோன்றினேனே..
நான் வீதி வரும் போதே
என் வாசனை நுகர்ந்து
வாரியணைத்து வரவேற்க
வாசல் ஓடி வருவாய்..
என் கொலுசோசைக் கேட்டே
நான் கோபத்திலா இல்லை மோகத்திலா என்று உடன் உணர்வாய்..
என் தேகத் தேடலில் திளைக்கும்
உன் தீண்டல்கள் தினந்தினம்
ஓர் ரகசியத்தைக் கொணரும்
அதிசயம் என்னவோ..
சிறு துயரில் நான் ஆழ்ந்தாலும்
ஒரு துளி கண்ணீர் வழிந்தாலும்
சிரத்தையாய் அருகில் அமர்ந்து
இரு கரம் இறுக்கிப் பிடித்து
உனதன்பு வார்த்தைகளால் ஆறுதல் உரைத்து
என் துக்கத்தை தூரம் செய்வாய்..
அகிலத்தார் அனைவரும்
அழகையும் ஆடம்பரத்தையும்
கண்டு கொண்டாடுகையில்
உனக்குத் தெரிந்ததோ
அகமும் ஆகமமும் தான்..
'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள்
தேவையும் இல்லை என்பேன்
நிறம் அறியாது குணம் கண்டு
உருவம் போற்றாது உணர்வு மதித்து
எனதன்பு உள்ளக்கடலில் மூழ்கி முத்துக் குளிக்கும்,
வாழ்க்கையின் வசந்தத்தை காட்டும்,
காதலின் கண்ணியத்தைக் காக்கும்
கண்பார்வை இல்லா என் கணவனைப் போல..!