முடிவிலி
முடிவிலி
'உன் உறவே வேண்டாம்'
என்று பிரிகையில் பிறக்கிறது
'பகைமை' என்ற புது உறவு..
உயிர் என்ற சொந்தம்
உடல் விடும் தருணம்
உண்டாகும் மண்ணோடு மக்கும் பந்தம்..
இளமையில் பசுமையான இலை
காய்ந்து கிளை விடும் நிலை
சருகு உரம் ஆகும் வரம்..
பிரசவ வலியின் முடிவு ஜனனம்
கோடை மழையின் முடிவு வானவில்
கூடலின் முடிவு கரு
தேடலின் முடிவு ஞானம்
மெழுகின் முடிவு ஒளி
மையின் முடிவு கவி
மேகத்தின் முடிவு மழை
வேகத்தின் முடிவு விவேகம்
சூழ்ச்சியின் முடிவு சூளுரை
வீழ்ச்சியின் முடிவு பாடம்
நீண்ட பயணத்தின் முடிவு அனுபவம்
ஆழ்ந்த சயனத்தின் முடிவு உற்சாகம்
உறவின் முடிவு நினைவுகள்
கற்பனையின் முடிவு கதைகள்
ஏக இறைவனின் ஆக படைப்புகளில்
முடிவென்பதே இல்லை; அது
முடிவிலியின் மற்றுமோர் பகுதியே..
எனவே நம் வாழ்க்கை புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்தின் முடிவு
அடுத்த அத்தியாயத்தின தொடக்கம்..
துவண்டு போகாமல் எழுதத் துவங்கு
வாழ்க்கை ஒரு படம் அல்ல, பாடம்..!