இறை மொழி...
இறை மொழி...
மண்ணையும்
விண்ணையும்
தண்ணீரையும்
கண்ணீரையும்..
சுடும் சூரியனையும்
கடும் குளிரையும்
வான்மழையையும்
வாயுப்புரவியையும்
பனி மலைகளையும்
ஆழ் நீலக்கடலையும்,
உன்னையும்..என்னையும்..
படைத்த இறைவனுக்கு...
நீ படைத்து நீ பேசிடும்
பலருக்கும் புரியாத
உனது மொழிமட்டுமேதான்
புரியுமென நீ நினைத்தால்..
பேரருளான
இறைவனைப்பற்றிய புரிதலே
சற்றும் உனக்கில்லை
என்பது மட்டும்
அணுவளவும் ஐயமின்றி
தெளிவாகப் புரிகிறது...
உனக்கே சில பல
மொழிகள் தெரியுமென
மமதை கொள்ளும்மானிடா..
பேசும் திறனற்றோர்
பேசாத சொற்களையும்
துளியும் பிசகின்றி
முழுவதுமாய் புரிகின்ற..
பேசும் மொழியுள்ளும்
கேட்கும் செவியுள்ளும்
எல்லா அணுவுள்ளும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுக்கு புரியாத
மொழியொன்று
இவ்வுலகிலும்
எவ்வுலகிலும்
இருக்கவே வாய்ப்பில்லை
என்ற உண்மை
உனக்கேன் உறைக்காது போனது??
தரணியில் சிலகாலம் மட்டுமே
வாழ்ந்து மடியப்போகும்
தரமில்லா மானிடா..
மனிதருளுள்ளும்
மொழிகளுள்ளும்
வேற்றுமை காட்டும்
உனக்கு உன்னிலும்
உன் எண்ணத்திலும் மட்டுமே
ஊனமென்ற உண்மை..
முழுமையாக விளங்கிடும்நாள் வரையிலும்...
நீயுமோர் ஐந்தறிவு விலங்கிற்கிணையே என
விளங்கிக்கொண்டுமுடிந்தால்
புரிந்தும் முயன்றும் உன்னை
மனிதனாக மாற்றிக்கொள்..
இரா.பெரியசாமி..