ஆன்மா...!
ஆன்மா...!
ஆன்மாவின்
வீடு... உடல்!
ஆன்மாவின்
காடு...அகன்று
விரிந்த பேரண்டம்!
தன்னுடைய வீட்டைத்
தானே நிர்மாணிப்பதால்
உடல் செல்லும் காடு
ஆன்மாவின் காடகிடுமா?
ஆன்மாவெனும்
இறை சக்தி
தன்னைத்தானே
உணர்ந்துகொள்ள
உடல் தேவை!
உடல் இயங்க
ஆன்மா தேவை!
'நான்' என்பது
உடலா? ஆன்மாவா?
உடல் என்னால்
உருவாக்கப் படாத போது
அது 'நான்' ஆக
இருக்க வாய்ப்பில்லை!
எனவே, 'நான்' என்பது
ஆன்மாவாகிறது!
'நான்' என்பது
ஆன்மாவெனும்
இறை சக்தியாதலால்
நான், நீங்கள், அவர்கள்,
அவைகள், அகிலம்,
அண்டம் எல்லாம்'நான்' தான்!
எல்லாம் 'நீங்கள்' தான்!
சிறிது சிந்தித்தால்
புரிவது போல் தோன்றினாலும்
உண்மையில்
'நான்'ஐ உணர்ந்தவர்கள்
ரமணர், வள்ளலார்
போல் மிகச்சிலரே!
புரிதலும் உணர்தலும்
வேறு வேறு!
ஈதல் நன்று...புரிதல்!
ஈந்து உவத்தல்... உணர்தல்!
புரிந்ததை
உணர்ந்து விட்டதாக
எண்ணி
இறுமாப்பில்
உணர்தல் மறந்து
நாட்கள் செல்ல
புரிந்ததையும்
மறந்து விடுகிறோம்!
நம்முடைய (ஆன்மாவுடைய)
வீடான உடலின், எண்ணங்களின்
ஆரோக்கியம் பேணுவதும்
ஆன்மாவின் காடாகிய
இந்த உலகத்தின்
நலம் காப்பதும்
ஆன்மாவின் (நம்) கடமை!