DEENADAYALAN N

Abstract Drama

4.7  

DEENADAYALAN N

Abstract Drama

புறக்கணிப்பு என்பது கடவுளின் கருணை

புறக்கணிப்பு என்பது கடவுளின் கருணை

6 mins
408


புறக்கணிப்பு என்பது கடவுளின் கருணை!



ல்லோரும் பரபரவென்று இருந்தார்கள்!


எழுபது வயதை நெருங்கும் ஜெகன்னாதன் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார். அவரது இளைய மகன் இனியன் குடும்பத்தினர், மூத்த மகன் மூர்த்தியின் வீட்டுக்கு வந்திருந்தனர். 


‘கெளம்புங்க.. கெளம்புங்க..’ அவரது மூத்த மகன் மூர்த்தி அவசரப் படுத்திக் கொண்டிருந்தான்.


‘எல்லாரும் எங்கப்பா கெளம்பறீங்க?’ ஆர்வமுடன் கேட்டார் ஜெகன்னாதன்.


(‘ஆமா.. மொதல்ல இந்த பெருசுக்கு சொல்லுங்க.. இல்லன்னா அதோட தலை வெடிச்சிடும்’ – பதினைந்து வயதுப் பேரன் தாழ்ந்த குரலில் சொன்னாலும் தெளிவாக ஜெகன்னாதனின் காதில் விழுந்தது.)


‘எல்லாரும் மலம்புழா டேம் போறம்பா. நாளைக்கு வந்துருவோம். அது வரைக்கும் உனக்கு வேணும்ங்கறதெல்லாம் செஞ்சி ஃப்ரிட்ஜ்ல வெச்சிருக்கோம். நேர நேரத்துக்கு எடுத்து சாப்ட்டுக்கோ.’ என்றான் இளைய மகன்.


எல்லோரும் கிளம்பி விட்டார்கள்!


இப்போதெல்லாம் இப்படித்தான். அவரை எல்லோருமே புறக்கணிக்கிறார்கள்!



ருபது வருடங்களுக்கு முன் வட இந்திய டூர் போனது ஜெகன்னாதனுக்கு நினைவில் வந்தது. இரு மகன்களும் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்த காலம் அது. இருவருக்கும் விடுமுறை வரும் சமயமாய்ப் பார்த்து, குழந்தைகளுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது என்று முன் கூட்டியே ரயில், தங்குமிடம் என்று எல்லாவற்றிற்கும் முன்பதிவு செய்து, அப்போது உயிரோடு இருந்த மனைவி அலமேலுவுடன் சந்தோஷமாய் போய் வந்த காலம் அது. தான் கண்டு களித்ததை விட, தன் குழந்தைகள் கண்டு களித்த சந்தோஷத்தையே அவர் கண்டு களித்தார். குழந்தைகளின் குதூகலமே அவரது குதூகலமாய் இருந்தது.


“இரு குழந்தைகள் என் இரு கண்கள்” என்று எப்போதும் எல்லோரிடமும் ஆனந்தமாய் சொல்லிக் கொண்டிருப்பார். குடும்பமே அவரது உயிராய் இருந்தது.


ஆனால் இப்போது... இவரை விட்டு விட்டு அனைவரும் ஜாலியாய் கிளம்பி விட்டார்கள்!


இப்படி, தான் புறக்கணிப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை!



ப்படித்தான் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால், மீன் குழம்பு வைத்திருந்தார்கள். ஜெகன்னாதனுக்கு மீன் குழம்பு என்றால் உயிர். பசி வேறு! ஒரு பிடி பிடித்து விட்டார். ஆனால் பாழாய்ப் போன அந்த வஜ்ஜிர மீனில் என்ன கோளாறோ தெரியவில்லை. சாப்பிட்ட ஐந்து நிமிடத்துக்குள் வயிற்றுக்குள் சென்றதெல்லாம், நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு, கொட கொட வென்று வாந்தியாய் வெளியே வந்து விழுந்து விட்டன..


எதிர் பாராமல் எடுத்த வாந்தி வீடெல்லாம் சிதறி நாறடித்து விட்டது. எல்லோரும் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஜெகன்னாதன் மேல் எரிந்து விழுந்தார்கள்.

 

‘வயசான காலத்துலே சாப்பிடறதுலே ஒரு கன்ட்ரோல் வேண்டாமா.. அப்பிடியாவது அந்த மீன் கெரகத்தைத் திங்கலேன்னா என்ன?’ – மூத்த மகன்


‘இப்பொ நாங்க எல்லாம் எப்பிடி சாப்பிடறது..’ – பேத்தி ஒரு பக்கம் கத்தினாள்.


கடைசியாக ஒரு வழியாக வேலைக்காரியை வைத்து, துடைத்தெடுத்து, சென்ட் போட்டு சரி செய்தார்கள். வேலைக்காரி கூட முணுமுணுத்துக் கொண்டேதான் செய்தாள்.



ஜெகன்னாதனின் மனம் ஒரு முப்பது வருடம் பின் நோக்கிச் சென்றது. அப்போது அவருடைய மனைவி அலமேலு இருந்தாள். ‘கெளுத்தி’ மீன் வாங்கி வந்து வாஞ்சையாய் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கச் சொன்னார். தானே தன் கைகளால் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு முள்ளாக எடுத்து எடுத்து சின்னவன் இனியனுக்கும் பெரியவன் மூர்த்திக்கும் ஊட்டி விட்டார். குழந்தைகள் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தப் பரவசம் அடைந்தார்.


அப்பொழுது ஒரு மீன்முள் பெரியவனின் தொண்டைக்குள் வசமாக மாட்டிக் கொண்டது. குழந்தை துடித்துப் போய் விட்டான். அதைப் பார்த்து ஜெகன்னாதன் அழுதே விட்டார். உடனடியாக மருத்துவரை நாடி சரி செய்வதற்குள் அவருக்கு உயிர் போய் உயிர் வந்தது. அதன் தொடர்ச்சியாய் அவனுக்கு ஏற்பட்ட மெல்லிய ஜுரத்தை சகிக்காமல் இரவு முழுதும் அவனை மார் மேல் போட்டுக் கொண்டு, தான் தூங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டார்.


ஆனால் இன்று அந்த மகன் கேட்கிறான்..


‘அப்பிடியாவது அந்த மீன் கெரகத்தைத் திங்கலேன்னா என்ன..?’



வ்வளவு ஏன்? போன வாரம் ஜெகன்னாதனின் தங்கையின் மகள் திருமணம் நடந்தது. தாய் மாமன் என்கிற முறையில் இவரைத்தான் அவரது தங்கை எல்லாவற்றிற்கும் முன் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஒப்புக்கு இவரை மணவறையின் முன்னால் ஒரு நாற்காலி போட்டு பெருசுகளோடு பெருசாக உட்கார வைத்ததோடு சரி.


சிற்சில சடங்குகளை எல்லாம் சரி வர செய்யவே இல்லை. இவர் அதை சுட்டிக்காட்ட எத்தணித்த போதெல்லாம் அவரது தங்கை குறுக்கிட்டு, ‘இருக்கட்டும்ண்ணா.. பார்த்துக்கலாம்.’ என்பாள். அல்லது ‘காலம் ரொம்ப மாறிடுச்சி.. இதையெல்லாம் கண்டுக்காதே..’ என்பாள்.

                         

ஒரு கட்டத்தில், திடீரென்று அவரது தங்கையின் மகன், ‘அட.. தொண தொணங்காதே மாமா. வந்தமா.. உன் வயசுக்கு வாழ்த்துனமான்னு இருந்துட்டுப் போ.. க்ருஷ்ணா ராமான்னு இருக்க வேண்டிய காலத்துலே அமைதியா இருந்துட்டுப் போகாமெ எதுக்கு எல்லாத்துலேயும் மூக்கை நுழைக்கிறே..’ என்று அவரை அடக்கி விட்டுப் போனான்.


‘இந்தப் பயலுக்கு நான் எவ்வளவு செய்திருப்பேன் இவன் டைப் ரைட்டிங் டைரக்ட் ஹையர் எக்சாமுக்காக சொளை சொளையா பணத்தை எண்ணிக் கொடுத்து அனுப்பி வெச்சது நான்தான். இந்த படவாப் பய என்ன திமிறு இருந்தா இன்னைக்கு என்கிட்டே வந்து என்னை அடக்கிட்டுப் போவான்?’ என்று ஜெகன்னாதன் பொரிந்து தள்ளினார்.


ஆனால் அதை செவி மடுத்துக் கேட்பதற்குத்தான் அங்கு ஆள் இல்லை!



ன்று ஞாயிற்றுக்கிழமை. ஜெகன்னாதனின் நண்பர் நஞ்சுண்டன் வந்திருந்தார். குசல விசாரிப்புகள் முடிந்து இருவரும் தனியாக வீட்டருகில் இருந்த ஒரு பூங்காவிற்குள் நுழைந்தார்கள். அவரிடம் தன்னுடைய குறைகளையெல்லாம் கொட்டித்தீர்த்தார் ஜெகன்னாதன்.. எல்லாவற்றையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்ட நண்பர் தொடர்ந்து மௌனம் சாதித்தார்.


ஜெகன்னாதனுக்கு கோபம் வந்தது. ‘ஏண்டா இவ்வளவு சொல்றேன்.. ஒன்னுமே பேசாம அமைதியா இருக்கியே.. நீயும் இந்தக் கிழவனை புறக்கணிக்கிறயா…?’


‘அடேய் ஜெகன்னாதா… உனக்கு மட்டும்தான் இந்த மாதிரின்னு நெனைக்கிறயா.. வயசானா எல்லாத்துக்கும் இந்த புறக்கணிப்புகள் சகஜண்டா.. ஏன் நானும் கூட இந்த மாதிரி புறக்கணிப்புகளெ தினமும் சந்திச்சுகிட்டுதான் இருக்கேன்..’ என்றார் நஞ்சுண்டன்.


‘அப்பொ வயசான எல்லாருமே இப்பிடி புறக்கணிப்புகளை சகிச்சுகிட்டு தான் வாழணுமா.. சாகும்போது கூட நிம்மதியா மன நிறைவோட சாகக் கூடாதா?’ ஆதங்கமாய் கேட்டார் ஜெகன்னாதன்.


‘டேய் ஜெகன்னாதா…சாகும்போது நிம்மதியா மன நிறைவோட சாகணும் அப்படீங்கறதுக்காகத்தான் கடவுள் வயசானவங்களுக்கு வயசான காலத்துலே சில புறக்கணிப்புகளைக் கொடுக்கிறார்.’


‘என்னடா பெரிய தத்துவஞானி மாதிரி பேசறே? நீ சொல்றது ஒன்னுமே புரியல...’ 


‘சரி.. நீ சாகும்போது நிம்மதியாகவும் மன நிறைவோடும் தானே சாக விரும்புகிறாய்?’ – நஞ்சுண்டன்.


‘நிச்சயமா.. அதிலென்ன சந்தேகம்?’ - ஜெகன்னாதன்.

‘சரி.. மன நிறைவோடும் நிம்மதியோடும் சாவை சந்திக்க இப்போ.. இந்த நிமிஷம்.. நீ தயாரா?’


ஜெகன்னாதன் யோசித்தார்!


‘நன்றாக யோசி! பிறந்தது முதல் அம்மா, அப்பா, உடன் பிறந்தோர் மேல் பாசம்! பதினைந்து வயது முதல் நண்பர்களின் நட்பு சேர்ந்து கொள்கிறது. முப்பது வயது முதல் மனைவி, குழந்தைள் மேல் காதல், அன்பு, ஆசை, பாசம் தொடர்கிறது. அறுபது வயதுக்கு மேல் பேரன் பேத்திகள் நம் உயிராகி விடுகின்றனர். இத்தனை உறவுகளைத் துறந்து, ஆசா பாசங்களைத் துறந்து, மன நிறைவோடும் நிம்மதியோடும் சாவை சந்திக்க இப்போது நீ தயாரா?’


மேலும் ஜெகன்னாதன் யோசித்தார்!


‘இப்போது உன்னால் முடியாது ஜெகன்னாதா. சாவு என்பதை நாம் சந்திக்கும்போது அதை நிம்மதியாக சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் மனதிற்கு வந்தால்தான் அது சாத்தியம். அப்படி மகிழ்ச்சியாக மரணத்தை வரவேற்கும் பக்குவத்தை நாம் எப்படி அடைவது? ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் நாம் உண்டு நம் வேலை உண்டுன்னு இருக்கணும். பற்று பாசத்தை விட்டொழிச்சிரணும் முடியலைன்னா அட்லீஸ்ட் கொறச்சிக்கணும். தாமரையிலைத் தண்ணீராய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கணும்’ – நஞ்சுண்டன்.


‘அப்படி பற்று பாசங்களை கொறச்சிக்க.. விட்டொழிக்க என்னதான் வழி?’ – ஜெகன்னாதன்.


‘ரொம்ப சிம்பிள்.. நீ பற்றும் பாசமும் வைத்திருக்கிற உறவுகள் பொருள்களை புறக்கணிக்க ஆரம்பிக்கணும்!’ - நஞ்சுண்டன்.


‘இல்லை நஞ்சுண்டா.. என் பேரன் பேத்திகளை, மகன்களை, மருமகள்களை, உறவுகளை புறக்கணிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.’ - ஜெகன்னாதன்


‘சரி. உன்னால் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. போகட்டும். அதே சமயம் அவர்கள் உன்னைப் புறக்கணிப்பதில் உனக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா…?’


ஜெகன்னாதனின் முகத்தில் ஒரு மின்னல் கீற்று தோன்றி மறைந்தது!


‘ஆம் ஜெகன்னாதா.. நீ அவர்களைப் புறக்கணித்து, பற்று பாசங்களைக் குறைத்துக்கொள்வது என்பதை விட, அவர்கள் உன்னைப் புறக்கணிப்பது என்பது உனக்கு இன்னும் சாதகமான விஷயம் அல்லவா? நீ புறக்கணிப்பதால் ஏற்படும் குற்ற உணர்ச்சியிலிருந்தும் உன்னை நீ விடுவித்துக் கொள்ளலாம் அல்லவா!’ - நஞ்சுண்டன்.


‘உண்மையா சொல்லனும்னா, “பற்று பாசங்”களை விட்டொழித்து “நிம்மதியான கடைசி காலம்” என்னும் கதவினுள் நுழைவதற்கான ஒரு சாவிதான் இந்த ‘புறக்கணிப்பு!’ – தொடர்ந்து சொன்னார் நஞ்சுண்டன்.


ஜெகன்னாதனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.


‘எப்படி குழந்தைகளின் நலனுக்கு சில சமயம் ‘கண்டிப்பு’ என்பது தேவைப் படுகிறதோ – அதே போல – வயதானவர்களின் நலனுக்கும் சில சமயம் ‘புறக்கணிப்பு’ என்பது தேவைப் படுகிறது.’ 


‘இத்தகைய புறக்கணிப்புகள் என்பது, வயதான காலத்தில், மனிதர்களுக்கு, கடவுளாகப் பார்த்து, வழங்கி இருக்கும் வரம்! நம் பிடிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொள்ள இத்தகைய புறக்கணிப்புகள் ஆண்டவனால் அளிக்கப்பட்ட அருள்!’ – நஞ்சுண்டன்.


ஜெகன்னாதனுக்கு இப்போது புரிய ஆரம்பித்தது.


நஞ்சுண்டா.. புரிகிறது. வயதான கடைசி காலத்தில் பற்றற்று தாமரை இலைத் தண்ணீர் போல் இருக்க, சில புறக்கணிப்புகள் என்பது கடவுள் கொடுத்த வரம்தான்!’ – ஜெகன்னாதன்!


இருவரும் புறப்பட ஆயத்தாமானார்கள்.


‘நஞ்சுண்டா.. மன்னிச்சிக்கோடா.. இன்னும் ஒரே ஒரு ஆதங்கம்.. இப்படி நம்மைப் புறக்கணிப்பவர்களை கடவுள் தண்டிக்க மாட்டாரா…?’ – ஜெகன்னாதன்.


‘ஜெகன்னாதா.. நீ இப்போது “கடவுளின் பணி வட்ட” த்திற்குள் நுழைகிறாய். இருந்தாலும் என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன். நம் மனதை புண்படுத்த வேண்டும் என்றே செய்கிற புறக்கணிப்புகளை கடவுள் பார்த்துக் கொள்வார். ஆனால் அத்தகைய நோக்கம் இல்லாமல், நம்முடைய நன்மைக்காகவே செய்யப்படும் புறக்கணிப்புகள், நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு இயல்பான செயலாகவே அமைநதிருக்கும். எனவே அதற்கு கடவுள் தண்டனை அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை’ – நஞ்சுண்டன்.


‘இதையும் கொஞ்சம் புரியும்படி சொல்லேண்டா..’ – ஜெகன்னாதன்.


‘சொல்றேன். ஒரு முறை, மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் டெல்லி-ஆக்ரா டூர் போனேன். அப்போது எனக்குப் பிரயாணம் ஒத்துக் கொள்ளவில்லை. என்னுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு பாதியிலேயே திரும்ப வேண்டியதாயிற்று. அனைவருக்குமே என் மேல் வருத்தம். ‘இனி மேல் இந்த மாதிரி டூர் போகும் சமயங்களில், நீங்கள் உங்கள் தம்பி வீட்டுக்குப் போய் தங்கி விடுங்கள். இல்லையென்றால் சிரமம்!’ என்று சொல்லி விட்டான் மகன்.


மேம்போக்காகப் பார்த்தால், அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறினால் ஏற்பட்ட கோபத்தினால் தான் என் மகன் அவ்வாறு முடிவெடுத்திருக்கிறான் என்று தோன்றும்.


ஆனால் உண்மையில் வயதான காலத்தில் நான் மீண்டும் துன்பப்படக்கூடாது என்று என் மேல் உள்ள அக்கறையினால் கூட அவன் அவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் அல்லவா? இத்தகைய புறக்கணிப்புகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுக்க மாட்டார்.


எனக்கும் நன்மையாய் அமைந்து என் மகனுக்கும் நன்மையாய் அமையும் இத்தகைய நிகழ்வுகள் தான் இந்த உலகத்தை சமநிலையில் நடத்திக் கொண்டு போகிறது!’  என நஞ்சுண்டன் தன் அனுபவத்தை சொல்லி முடித்தார்.


ஜெகன்னாதனுக்கு இப்போது எல்லாம் புரிந்தது! அவர் மனம் நிற்சலனமாக இருந்தது!

                               

  



Rate this content
Log in

Similar tamil story from Abstract