நண்பேன்டா…
நண்பேன்டா…
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
ஏன் இந்த மாதிரி செஞ்ச? என ரவி கேட்க
நான் செஞ்சது சரி தான். என்னால உன் குடும்பத்துல உனக்கு கெட்ட பெயர் வந்திடக் கூடாதுன்னு தான் அப்படி செஞ்சேன் என்றான் ரவியின் உயிர் நண்பன் ராகுல்.
நான் உன்னிடம் அந்தப் பணமே கேட்கலையே! ஏன் என்னை அந்நியனா நினைக்கிறாயா?
அப்படி இல்லை ரவி. நான் பார்த்து வந்த என்னோட வங்கிப் பணியை சில காரணங்களால தன்னார்வ பணி மூப்பு (voluntary retirement service) கொடுத்து விட்டு வந்தப்ப நீ தான் எனக்கு உன் வணிக நிறுவனத்தில கணக்காளர் பதவி கொடுத்து எனக்கு உதவி செஞ்ச. என்னையும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி பலமுறை சொன்னே. ஆனா எங்கப்பா காலமான பின் எங்கம்மா ஒரு பசு மாட்டையும் அதனோட கன்றையும் வளர்த்து பராமரிச்சி வந்தாங்க. அவுங்களாள அந்த மாடு கன்றை வயசான காலத்தில் கவனிக்க முடியாததால நான் விற்கச் சொல்லியும் எங்கம்மா சம்மதிக்கலை.
அந்தக் காலத்து ஆள். மாடு தான் செல்வம்னு எனக்கு புத்தி சொல்வாங்க. நான் தான் எங்கம்மாவுக்கு துணை. நான் தான் அந்த மாடு கன்றை வளர்த்து வந்தேன். எங்கம்மாவுக்கும் நானே சமைச்சிப் போட்டேன். அண்ணன் ஒருத்தரு தான் என் கூட பிறந்தவர். அதான் உனக்குத் தெரியுமே. அவரு கல்யாணத்துக்கு அப்புறம் இந்த ஊரிலே தனியா வீடு வாங்கி செட்டிலாயிட்டாரு. என் குடும்ப சூழ்நிலை நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்கும் 50 வயசாயிடுச்சி. இனி அந்த மாதிரி எண்ணம் எனக்கில்ல.
சரி ராகுல் அதுக்கும் இப்ப நான் செஞ்ச உதவிக்கான பணத்தை உடனே நீ திருப்பிக் கொடுத்ததற்கும் என்ன சம்பந்தம்?
ரவி நீ என் உயிர் நண்பனாயிருக்கிறதால எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்க. எங்கம்மா காலமான பின்பு அந்த வீட்டில நான் மட்டும் தனியாளா இருந்து வந்தேன். அந்த ஓட்டு வீடு மட்டும் எங்கப்பா வாங்கி வச்ச சொத்து. என் அண்ணன் எங்கம்மாவை நான் கவனிச்சிக்கிட்டதால அந்த வீட்டை என்னையே வச்சிக்கச் சொல்லி பத்திரம் எழுதிக் கொடுத்திட்டார். அந்த ஓட்டு வீட்ல அம்மா காலத்துக்கு அப்புறம் நானும் மாடு கன்றை பராமரிக்க முடியாம விற்று விட்டேன். அப்ப தான் நீ உன் சொந்த பணம் எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து அந்த ஓட்டு வீட்டை இடித்து தளம் போட்ட வீடாய் தரை தளம் முதல் தளம் என இரண்டு தளம் உள்ள வீடாய் எனக்கு வீடு கட்டிக் கொடுத்தாய்.
தரை தளத்தில் நானும் முதல் தளத்தில் உனக்கு தெரிந்த அரசுப் பணியில் இருக்கும் ஒரு தம்பதிக்கும் வாடகைக்கு விட ஏற்பாடு செய்தாய். வாடகை வாங்கி என் ஆயுசு முழுவதும் சாப்பிட வழி செய்தாய். இருந்தாலும் என் மனதில் ஒரு நெருடல். என்ன தான் உயிர் தோழனாய் இருந்தாலும் எட்டு லட்ச ரூபாய் என் நண்பன் எனக்கு கொடுத்தது என்னை கடன்காரனாக உணரச் செய்தது. நான் உன் அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சக ஊழியர்கள் தவறாக நினைக்கக் கூடும் மற்றும் இது என்ன ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயா? இனமாக நான் நினைக்க? எனவே நான் வேலை செய்த வங்கி மூலம் எனக்குச் சேர வேண்டிய வருங்கால வைப்புநிதி மற்றும் இதர பணம் என வந்த பணம் 7 லட்ச ரூபாயுடன் நான் மாடு கன்று விற்ற பணம் மற்றும் என் சேமிப்பு என மொத்தம் 8 லட்ச ரூபாய்க்கான காசோலையை உன் கணக்கில் கட்டி விட்டேன்.
நீ அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டாய் ராகுல். நான் உனக்கு வீடு கட்டிக் கொடுத்த பணத்தை உன்னிடம் பொறுமையாய் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியிருப்பேன். என் வீட்டிலோ அலுவலகத்திலோ அந்தப் பணத்தைப்பற்றிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. என் சொந்தப் பணம் அது. ரவி உன் பெரிய மனது எனக்கும் தெரியும். ஆனால் உன் மகனும் மகளும் வளர்ந்து கல்யாணத்திற்கு நிற்கிறார்கள். இந்த மாதிரி நேரத்தில் நான் உன் பணத்தில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு என் மனசு இடம் கொடுக்கலை. என்னால உன் வீட்டுல பிரச்சனை வரக் கூடாதுன்னு தான் நான் இந்த முடிவ எடுத்தேன். நீ செஞ்ச உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றின்னு சொன்னா அது சாதாரணமாயிடும்.
நீ எனக்கு கண் கண்ட தெய்வம். உன்னை நண்பனா அடைந்ததற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்.
ராகுல் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசாதே. வா நாம இரண்டு பேரும் வழக்கமா சாப்பிடப் போகிற அபிராமி ஓட்டலுக்குச் சாப்பிடப் போகலாம்.
வர்றேன் ரவி. சாப்பிடுகிறதுக்கெல்லாம் நான் கூச்சப்பட மாட்டேன். என் மனசில் இருந்த பாரம் இப்ப தான் இறங்கிச்சி. வா போகலாம்.