STORYMIRROR

Arivazhagan Subbarayan

Romance Classics Others

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Others

நான்

நான்

2 mins
186


நான்...!


  எனக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள் என்று தெரியவில்லை. என் அப்பாதான் வைத்தார் என நினைக்கிறேன். ஆனால் இந்தப் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. அசோக் என்பதுதான் என் பெயர். எம். டெக் முடித்துவிட்டு அப்பாவின் பிஸினஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

  தூரத்தில் கடலலைகள் கரையில் மோதி உடைந்து சிதறுவது தெரிகிறது. புலன்கள் என்னும் கரையில் மோதி எண்ணங்களும் இப்படித்தான் சிலசமயம் சிதறுகிறது. பயம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வார். எண்ணங்களற்ற விழிப்பு நிலை என்று அடிக்கடி சொல்வார்.

  சிலசமயங்களில் உணர்வுகளின் அழுத்தத்தில் சரியாக முடிவெடுக்க முடியாமல் போய்விடுகிறது. செல்வியை நான் சந்தித்தபோது மிக அழகாக இருந்தாள். ஐன்னலுக்கு வெளியே தெரிகிறதே அந்தப் புது ரோஜாப்பூ மாதிரி. அந்த ரோஜாச் செடியைத் தோட்டக்காரர் நன்கு பராமரிக்கிறார் போலும். செடியின் மேல் பகுதி சூரிய ஔிக்காக வளைந்து இருக்கிறது.


   இன்று காலையிலேயே வானத்தில் லேசான மேக மூட்டம். மழை வருமா என்று தெரியவில்லை. ஒரு மழை நாளில்தான் செல்வியை நான் சந்தித்தேன். கருப்பு நிறத்தில் குடை பிடித்து அழகாக மயில் போல் நடந்து வந்தாள். கருப்பு நிறம் மட்டும் ஏனோ எனக்குப் பிடிப்பதில்லை. அது சோகத்தை நினைவூட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. 

  சில சமயங்களில் மிகுந்த சந்தோஷத்தையும், பின்னால் ஏதாவது சோகம் வந்துவிடுமோ என்ற பயத்தினால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. செல்வி என்னைப் பார்த்துப் புன்னகைத்தது போல் தோன்றியது. 'நீங்க அசோக் தானே!' ஐ ஐ டி ல நீங்க என்னோட சீனியர்' என்று கை குலுக்கினாள். அவளுடைய உள்ளங்கை இலவம் பஞ்சு போல் மிக மிக மென்மையாக இருந்தது. இலவு காத்த கிளி பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். சிலர் கிளிகளை தான் சொல்வதைத் திரும்பச் சொல்ல நன்றாகப் பழக்கியிருப்பார்கள்.

   நாமும் கிளி போல்தானோ என்று தோன்றுகிறது. சமூகத்திடம் நாம் படித்த பாடங்களைத்தானே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 


சிறு வயதில் பள்ளிக்கூடப் பாடங்கள். அது முடிந்தவடன் வாழ்க்கைப் பாடங்கள். வாழ்க்கையை ஒரு பாடமாகப் பார்ப்பதா? இல்லை விளையாட்டாகப் பார்ப்பதா? 

  கிரிக்கெட் வீரர் சச்சின் தன்னுடைய விளையாட்டில் மேன்மை பெறுவதற்கு எவ்வளவு உழைத்திருப்பார் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சென்னையில் நடந்த கிரிக்கெட் மேட்சுக்கு நானும் செல்வியும் ஒரு தடவை சென்றோம். செல்வி அப்போதெல்லாம் எனக்கு மிகநெருக்கம். என் கைகளை ஆசையாகப் பற்றிக் கொள்வாள். என் கண்களையே பார்த்துக் கொண்டிருப்பாள். நானும் அப்படியே அவள் கண்களை நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். Frozen in time என்று சொல்வார்களே அது போல. ஒரு தியானம் போல.


   தியானம் செய்வதற்கு மிகுந்த முயற்சி தேவை. அது மட்டும் போதாது. ரமண மகரிஷி போல் மூளையின் அமைப்பும் வேண்டும். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரரின் அருகே அவர் தியானம் போல் யாருக்கேனும் அமையுமா தெரியவில்லை. செல்வி என்னுடன் ஒரு முறை திருவண்ணாமலை வந்தாள். அப்பொழுது மிகுந்த சந்தோஷமாயிருந்தேன். 


  தரிசனம் முடிந்து அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். திருவண்ணாமலை வீதிகளில் உலா வந்தோம். அது ஒரு அனுபவம். இறைவன் அருகே புலன்கள் அடங்கி மனது நிம்மதியானது போல் தோன்றியது. திருவண்ணாமலையில் கோயில் பிரகாரத்தில் முழுதாக ஒரு மணி நேரம் தியானம் செய்திருக்கிறேன்.

  இதேபோல் கடற்கரையிலும் நான் செல்வியுடன் உலவியிருக்கிறேன். பானி பூரி என்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். போன மாதம் தினேஷைத் திருமணம் செய்து கொண்டு நியுஜெர்ஸியில் செட்டிலாகி விட்டாள். நியூஜெர்ஸி ஒரு லிட்டில் இந்தியாவாமே! அப்படியானால் பானிபூரி அங்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். 


  பானி பூரிக் கடைகளைக் கொஞ்சம் சுகாதாரமாக வைத்திருந்தால் பரவாயில்லை. எவ்வளவு கிருமிகள்! எவ்வளவு தொற்றுவியாதிகள். ஒரு தடவை பானிபூரி சாப்பிட்டு செல்விக்கு டைஃபாய்டு வந்துவிட்டது. நான் அவளைவிட்டு அகலவில்லை. அப்போது ஒருநாளில் தான் செல்வி என் கன்னத்தில் முத்தமிட்டு என்னைக் காதலிப்பதாகக் கூறினாள். இப்பொழுது அதை நினைக்கக் கூடாது. அவள் இன்னொருவர் மனைவியாகிவிட்டாள். சே சே அது தவறு. தவறுகள் உடனுக்குடன் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று ஸ்கூலில் டீச்சர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் அட்டென்டென்ஸ் எடுக்கும் போது என் பெயரை அசோக் எனக் கூப்பிடுவார். நான் 'எஸ் மேம்' என்பேன். என் பெயர் கண்டிப்பாக அசோக் தான்!

   டாக்டர் பார்த்தசாரதி என்னிடம் 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டார். அதற்கு நான் சொன்ன பதில் தான் இது! எனக்கு schizophreniaயாவாம்!



Rate this content
Log in

Similar tamil story from Romance