Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 4)

இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 4)

3 mins
197


இதயத்தில் ஓர் இசை...!


பாகம் 4


"அதெல்லாம் சரிப்பட்டு வராது. பகல்ல வாட்ச் மேன் வரட்டும். நைட் நீ வந்து தங்கினால் தான் சரியாக இருக்கும்" மஞ்சு இவ்வாறு சொன்னதும் சற்று எரிச்சல் வந்தது வினிதாவுக்கு.


ஒருவருக்கு அடங்கிப் போவதும், டாமினேட் செய்வதும், சிறு வயதில் நாம் வளர்ந்த சூழ் நிலையைப் பொறுத்தே அமையும். நம்முடைய மூளை எப்போதும் ஃபிளைட் அல்லது ஃபைட் வழியிலேயே செயல் படும். யாராவது நம்மைத் திட்டினால், ஒன்று நாம் எதிர் வாதம் செய்வோம் அல்லது அமைதியாக இருப்போம். நம் எமோஷனல் பிரெய்னில் நியூரான்களின் டிசைன் இப்படித்தான். அனைத்து உணர்வுகளையும், எதிர் வினைகளையும் இந்த இரண்டு செயல்களுக்குள் அடக்கிவிடலாம். வினிதா இயல்பாகவே ஒரு அமைதியான பெண். அவளுடைய எமோஷனல் பிரெய்னும் மஞ்சு விஷயத்தில் ஃபிளைட் mode ல் வேலை செய்வதால், அவளால் தங்கையின் பேச்சைத் தட்ட முடியவில்லை. 


"அப்ப என்னோட வீடு?"


"அத வீடுன்னு சொல்லாத. அங்க என்ன இருக்கு?!"

அங்க அமைதி இருக்குன்னு சொல்ல வந்தவள், அவளுக்கு இதெல்லாம் புரியாது என்று விட்டு விட்டாள்.


"அது வீடு இல்லைன்னா, அங்க இருக்கிறவங்க எல்லாம் மனுஷங்க இல்லியா?"


"ஐயோ வினிதா, நீ மறுபடியும் ஆரம்பிக்காத. நான் சீக்கிரம் கிளம்பணும். வந்து சாவியை வாங்கிக்க", ஃபோனைக் கட் பண்ணி விட்டாள். 'தான் ஏதாவது சொல்லப் போனால் இவள் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை. இவளிடம் தன்னுடைய மதிப்பு இவ்வளவுதான்' என்று தனக்குத் தானே நொந்தவளாய் ஸ்கூட்டியை அடையாறை நோக்கித் திருப்பினாள்.


சென்னையின் காலை நேர டிராஃபிக். பெரிதும் சிறிதுமான வாகனங்கள் ஒன்றையொன்று போட்டி போட்டு முந்திக் கொண்டு சிக்னலில் காத்திருக்க, அந்தக் கொஞ்சூண்டு நேரத்தில் ஒரு பிஸ்னஸ் நடந்தது. ஸ்கூட்டர்களும், பைக்குகளும் சரேலென்று இடைவெளியில் புகுந்து நான்கு சக்கர வாகன ஓட்டிகளை அதிர வைக்க, வெயில் சுரீரென்று அடித்தது. அந்த உலகமகா டிராஃபிக்கில் நீந்தி ஒரு வழியாக வினிதா, மஞ்சுவின் பங்களாவை அடைந்தாள். 


கேட்டைத் திறந்து உள்ளே சென்றாள். போர்டிகோவில் ஒரு பி எம் டபிள்யு வாயைத் திறந்து கொண்டு மஞ்சுவை இன்னும் சில நிமிடங்களில் உள் வாங்க ரெடியாய் இருந்தது. காரின் அருகே டிரைவர் பளிச்சென்ற யூனிஃபார்மில் நின்றிருந்தான்.

இவளைப் பார்த்ததும் புன்னகைத்து குட்மார்னிங் சொன்னான். பதிலுக்கு இவளும் ஒரு குட்மார்னிங்கை உதிர்த்து விட்டு உள்ளே நுழைய மஞ்சு அவசரத்தில் இருந்தாள்.


"தேங்க் காட். நல்ல வேளையாக வந்தியே!", சொன்ன மஞ்சு அச்சு அசலாக வினிதாவைப் போலவே இருந்தாள். வயதில் இவளை விட இரண்டு வயது இளையவளாக இருந்தாலும், அந்த அவசரமும், டென்ஷனும் இவளை விட இரண்டு வயது மூத்தவளாகக் காட்டியது. இவளைப் போலவே நல்ல களையான முகம். கூரான நாசி. கண்களில் ஒரு காந்தம் கலந்த திண்மை. 'நான் ஒண்ணும் முட்டாள் இல்லை. எங்கிட்ட வச்சிக்காத' பார்வை. அந்த அம்புப் பார்வைக்குள் எவ்வளவு அன்பு இருக்கிறது என்று வினிதாவிற்கு மட்டுமே தெரியும். ஒரு முறை, வினிதா தங்கியிருக்கும் மீனவ கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு, டெலிவரியின் போது அதிக அளவில் உதிரப் போக்கு ஏற்பட, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அந்த மருத்துவ மனை முடியாது எனக் கைவிரிக்க, மஞ்சுவிற்கு ஃபோன் செய்தாள் இவள் ஃபோன் பண்ணும் போது அதிகாலை இரண்டு மணி. 


"கூட்டிக்கிட்டு வா. ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்"

அந்தப் பெண்ணுக்கு அந்த நேரத்திலும் அவசரமாக அறுவை சிகிச்சை செய்து, பத்து நாட்கள் சிகிச்சையளித்து குணமாக்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். ஃபீஸ் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க வசதியில்லாததால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒரு ரூபாய் கூட வாங்கிக் கொள்ளவில்லை. வினிதா ஃபோன் செய்து தான் அந்தப் பணத்தைத் தன் கையிலிருந்து கொடுத்து விடுவதாகச் சொல்ல,

"நீயே வைத்துக்கொள். அந்தப் பணத்துடன் கூடக் கொஞ்சம் போட்டு ஒரு கார் வாங்கிக் கொள். ஸ்கூட்டியில் வந்து என் மானத்தை வாங்காத", அதுதான் மஞ்சு. 


"நாலு நாள் தான். அதுக்குள்ள வந்திடு", பரிதாபமாகச் சொன்னாள் வினிதா.


"இந்த மாதிரி லக்ஸூரியஸ் வீட்ல சில நாட்கள் இருந்தால் தான் உனக்கு சிட்டியில் வந்து வாழலாம்னு தோணும்"


"எனக்கு என் வீடே போதும்"


"ஓகே ஓகே. ஐயாம் நாட் ஹேவிங் டைம் நௌ டூ ஆர்க்யூ வித் யூ. எனிஹௌ தேங்க்ஸ் கமிங்டா. நீ வரலைன்னா நான் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேன்" என்று ஒரு புன்னகையை உதிர்த்தவுடன் அவளது பி எம் டபிள்யு அவளை உள் வாங்க ஏர்போர்ட்டுக்கு விர்ரினாள். அந்த ஒரு புன்னகைதான், வினிதாவை ஆட்டிக் கொண்டு இருக்கிறது. மஞ்சுவிடம் நல்ல பேர் வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அவளைப் படுத்தி வைக்கிறது. மஞ்சுவின் முகம் கோணக் கூடிய வகையில் எந்தச் செயலையும் செய்யக் கூடாது என்று யோசிக்க வைக்கிறது. ஆனால், எல்லோரிடமும் எல்லா சமயங்களிலும் ஒருத்தியால் நல்ல பெயர் வாங்க முடியுமா? தன்னுடைய குடும்பத்தில், தன்னை ஒரு உதவாக்கரை என்று எல்லோரும் ட்ரீட் பண்ணுவதால், மஞ்சுவிடம் நல்ல பேர் வாங்க மனம் விழைகி‌றதா? அதை மஞ்சு யூஸ் பண்ணிக் கொள்கிறாளா? ஒரு கண்றாவியும் இந்த மனசுக்குப் புரிய வில்லை. 


அரை மணி நேரம் கழித்து, அவள் வேலை செய்யும் ஹோட்டலுக்கு வந்தாள். ரிசப்ஷனில் கூட்டம் அலை மோதியது. நன்கு பரிச்சயமான பல முகங்கள் தென்பட்டன. மேனேஜர் இவளைப் பார்த்ததும்,


"வினிதா, என்ன இன்னைக்குன்னு பாத்து இவ்வளவு லேட் பண்ணிட்டே. இந்தியன் கிரிக்கெட் டீம் மொத்தமும் ஒரு வாரம் இங்க தங்கப் போறாங்க. சீக்கிரம் வா!"


               -தொடரும்



Rate this content
Log in

Similar tamil story from Romance