ஹெவனுக்குப் போகணுமா ?
ஹெவனுக்குப் போகணுமா ?
மொட்டை மாடியில் நானும் அமல்யாவும்.
நான் மடக்கு கட்டில் மேல் அமர்ந்து கொண்டு இருந்தேன்.அமல்யாவும் கட்டிலில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.அன்று டிசம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை.நவம்பர் மாதம் பூராவும் விடாமல் பெய்த மழையால் தரை குளிராக இருந்தது.என் கால்கள் ஜில்லென்று இருந்தது.இரண்டு நாட்களாகத் தான் வெயில் தெரிந்தது.அதனால் என் கால்களை வெயிலில் காட்டிய படி அமர்ந்திருந்தேன்.
"பாட்டி,கால ஏன் கீழே வைக்க மாட்டேங்குறே? தரை ஜில்லுனு இருக்கா?"என அமல்யா கேட்க,
"ஆமாண்டா, இன்னும் மழை இருக்காமே…. சொல்றாங்க…"என்று நான் அங்கலாய்த்தேன்.
"பாட்டி,ஹெவன்ல காஃட் பைப்ப மூட மறந்திட்டார்போல…. அவர் பைப்ப ரிப்பேர் செய்ய ஆள் யாரும் கிடைக்கலையாம்"சிரித்துக்கொண்டாள் பேத்தி.
நானும் விடாமல்,"ஏன் ஒரு ப்ளம்பரை அனுப்பலாமா?" என்று கிண்டலாக சிரித்தபடியே கேட்டேன்.
உடனே அமல்யா,"பாட்டி, ப்ளம்பரை அனுப்ப முடியாது.ப்ளம்பர் செத்தால் தான் ஹெவனுக்குப் போக முடியும்."என்று சொல்லிச் சிரித்தாள்.
இப்போதும் நான் விடாமல்,"அப்படின்னா…ஒரு ப்ளம்பரைப் போட்டுத் தள்ள வேண்டியது தான்"எனச்சொல்லி சிரித்தேன்.
"அய்யோ பாட்டி! அப்புறம் உன்னை ஜெயில்ல போட்டுடுவாங்களே!!"எனச் சொல்லி சிரித்தாள்.மேற்கொண்டு அவள்,"அதுமட்டுமல்ல பாட்டி, நீங்கள் எல்லாம் சாமி கும்பிட்றவங்க.உங்கள மாதிரி சாமி கும்பிட்றவங்கல்லாம் ஹெவனுக்குப் போக முடியாது.அந்த ப்ளம்பர் அங்க போய்,'நான் சாமி கும்பிட்றவன்.உங்களுக்கெல்லாம் வேலை செய்ய முடியாது என்று சொல்லிட்டா?" எனக் கேட்கவும் எனக்கு சிரிப்பு தான் வந்தது.
இதற்குள் என் மகள் டீ எடுத்துக் கொண்டு வரவும் பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டோம்.