Ananth Sivasubramanian

Abstract Children Stories Fantasy

5.0  

Ananth Sivasubramanian

Abstract Children Stories Fantasy

கனவா நிஜமா

கனவா நிஜமா

4 mins
522


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஊரில் ராமு மற்றும் சோமு என இருவர் வாழ்ந்து வந்தனர். இருவரும் பால் வியாபாரம் செய்து வந்தனர். ராமு ஒரு நல்லவர், எப்பொழுதும் தூய்மையான பாலை விற்று வந்தார். சோமுவோ ஒரு கெட்டவர், பாலில் கலப்படம் செய்து விற்று வந்தார். அந்த ஊர் மக்கள் ராமுவின் பாலை மட்டுமே வாங்க விரும்பினர். சோமு, ராமு மீது மிகவும் பொறாமை கொண்டார். சோமு ஒரு சதி திட்டம் தீட்டினார். அதன் மூலம் ராமுவின் பெயரை கெடுக்க வேண்டும் என எண்ணினார்.

ஒரு நாள் ராமுவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, சில நாட்களுக்கு மருத்துவர் அவரை ஓய்வு எடுக்கும் படி கூறினார். ராமு சோமுவை நாடி தன் பாலையும் விற்று தரும்படி கேட்டார். அதற்கு சோமு ஒப்புக்கொண்டார். வயிற்று வலி மற்றும் வாந்தி தரும் வேதி பொருட்களை ராமுவின் பாலில் சோமு கலந்தார். அதை வாங்கிய அனைத்து மக்களுக்கும் உடம்பு பிரச்சனை வந்தது. இதை அறிந்த அந்த ஊர் ராஜா, ராமுவிற்கு சிறை தண்டனை விதித்தார்.

ராமு மிகவும் வேதனை அடைந்தார். சிறையில் வாடினார். ஒரு இரவு அவர் சிறையின் மூளையில் மிகுந்த ஒளி தெரிந்தது. ஒரு எந்திரம் சுவரில் இருந்து வெளியே வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், அது மாதிரி எதையுமே இதற்கு முன் அவர் பார்த்ததில்லை. அந்த எந்திரம் மெதுவாக திறந்தது.

அதில் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள். அனந்த், பத்மா மற்றும் அதீந்திரன் அவர்களின் பெயர்கள். அனந்த் பத்மாவின் அண்ணண், அதீந்திரன் அனந்த்தின் உற்ற நண்பன். அவர்கள் ராமுவை பார்த்து வணங்குகிறார்கள், அதற்கு ராமுவும் வணக்கம் சொன்னார். அனந்த் ராமுவிடம், "ஐயா இது என்ன வருடம்?" என்று கேட்டான். ராமுவோ, இது 18053 வது வருடம் என்றார். "நன்றி, இது கிமு வா அல்லது கிபி ஆ?"

ராமுவிற்கு ஒன்றும் புரியவில்லை. அனந்த், "ஐயா இந்த வருடம் இயேசு கிறிஸ்துக்கு பின்னா(கிபி)?" ராமுவிற்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அனந்த் தன்னிடம் இருந்த கார்பன் காலக்கணிப்பு கருவியை எதுத்து காலத்தை கணித்தான். இது கிமு 8000 என அதிர்ந்து போனான். ராமு, அனந்த், பத்மா மற்றும் அதீந்திரனை பார்த்து; "குழந்தைகளே, நீங்கள் யார்? சுவற்றில் இருந்து எப்படி வெளியே வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

"ஐயா நாங்கள் கிபி 2022 ஆம் ஆண்டில் இருந்து வருகிறோம். நாங்கள் ஒரு கால எந்திரத்தை உருவாக்கி அதில் பயணம் மேற்கொண்டோம். இப்பொழுது உங்களை சந்தித்தோம்" என்று அனந்த் கூறினான். "அய்யா உங்களை பார்த்தால் நல்லவர் போல் இருக்கிறீர்கள், ஏன் சிறையில் உள்ளீர்கள்", என்று பத்மா கேட்டாள். ராமு நடந்த சம்பவங்களை கூறினார். அதை கேட்டு, பத்மா "நிச்சியமாக உங்களை நாங்கள் விடுவிப்போம்" என்று கூறினாள்.

நாங்கள் மூவரும் தாகத்தில் உள்ளோம், எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டான் அதீந்திரன். ராமு தன் தண்ணீர் பாணையை எடுத்து வந்து கொடுத்து, "குழந்தைகளே என்னால் இப்பொழுது தண்ணீர் மட்டுமே கொடுக்க இயலும், என்னிடம் வேறு உணவு இல்லை" என்றார். அதற்கு அதீந்திரன், "ஐயா எங்களிடம் நிறைய உணவு உள்ளது, அதை சமைக்க இந்த தண்ணீர் மிகவும் உதவும் மிக்க நன்றி" என்றான்.

அனந்த் தன் நுண்அலை அடுப்பை எதுத்து அதில் பதபடுத்திய உணவை தண்ணியில் கலந்து சமைத்தான். நால்வரும் நன்கு சாப்பிட்டனர். ராமுவிற்கு இந்த உணவு மிகவும் சிறப்பாக இருந்தது. ராமு, "குழந்தைகளே உணவை பதபடுத்த முடியும் என்பதை எனக்கு கற்று கொடுத்ததற்கு நன்றி. நான் இதை இந்த ஊரின் நன்மைக்கு பயன்படுத்துவேன்" என்றார்.

அதற்க்கு பத்மா, "ஐயா இந்த டேப்லெட் கருவியை எடுத்து கொள்ளுங்கள், இதில் அனைத்து வேதியியல், பதப்படுத்துதல், மற்றும் சமையல் கலை புத்தகங்கள் உள்ளன. இதை இந்த ஊருக்கும் நாட்டிற்கும் பயன்படுத்துங்கள்." என்று கூறினாள். ராமுவிற்கு மிகவும் மகிழ்ச்சி.

அனந்த் ஒரு ஒளிப் பதிவுக்கருவி ஒன்றை எடுத்தான். "ஐயா, உங்களை சோமு என்று ஏமாற்றினார்? அந்த நாளை நாம் மறுமுறை இந்த ஒளிப் பதிவுக்கருவி மூலம் பார்க்க முடியும்" என்றான். அதற்கு ராமு ஆச்சரியம் அடைந்தார், "உங்கள் உலகத்தின் கண்டுபிடுப்புகள் வியப்பூட்டுகிறது" என்றார். அதற்கு அனந்த், "ஐயா உங்கள் உலகத்தில் கண்டுபிடிப்புகள் தான் சிறந்தது. உங்கள் உலகத்தின் கண்டுபிடிப்புகளை எங்கள் உலகத்தில் சிறிது மாறுதல்கள் செய்து பயன்படுத்திகிறோம் அவ்வளவு தான்" என்றான்.

அனந்த், "இப்பொழுது இந்த காணொளியை பாருங்கள்" என்று ஒளிப் பதிவுக்கருவியை காட்டினான். ராமு, சோமு செய்த சதியை பார்த்து அதிர்ந்து போனார். "இதை இந்த ஊரில் ராஜாவிடம் காட்ட முடியுமா?" என்று கேட்டான், அனந்த்.

"அதற்க்கு அவசியம் இல்லை", என்று சிம்ம குரல் ஒன்று ஒலித்தது. நால்வரும் குரல் வந்த திசையை நோக்கி பார்த்தனர். அந்த ஊரின் ராஜா அங்கு நின்று கொண்டிருந்தார். எனக்கு எல்லாம் புரிந்து விட்டது, "குழந்தைகளே, உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்" என்று ஆசி கூறினார். "உடனே ராமுவை விடுதலை செய்து சோமுவை சிறையில் அடையுங்கள்" என்று ஆணை இட்டார். உடனே, காவலர்கள் சோமுவை சிறையில் அடைத்தனர்.

ராமுவிடம் ராஜா, "உங்களை இத்தனை நாள் சிறையில் வைத்ததற்க்கு என்னை மன்னியுங்கள், அதற்காக நீங்கள் என்னிடம் எதை வேண்டும் என்றாலும் கேட்கலாம்" என்றார். ராமு ராஜாவிடம், "ராஜா அவர்களே, தயவு செய்து சோமுவை மன்னியுங்கள், அவரை விடுதலை செய்யுங்கள்" என்றான். அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ராமு, "மன்னிப்பு மட்டுமே நம்மை சிறந்த மனிதன் ஆக்குகிறது" என்றான். ராஜா சோமுவை விடுதலை செய்தார். சோமு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

நாங்கள் செல்லும் காலம் வந்து விட்டது என்று அனந்த், பத்மா மற்றும் அதீந்திரன் கூறினர். அனைவரும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ராஜா, ஆளுக்கு ஒரு மாயக்கருவி ஒன்றை பரிசாக அளித்தார். அதை பற்றி அனந்த் கேட்டதற்கு, அவர் காலம் உங்களுக்கு அதை கற்று கொடுக்கும் என்று புதிர் போட்டார்! "இந்த மாய கருவி தான் உன்னுடைய 'மை ட்ரீம் லாண்ட் இன் வீனஸ்' பயணத்தில் 'ஜி பி ஸ்' கருவியாக உங்கள் மூவருக்கும் பயன்கொடுக்கும்" என்றார்.

மாய கருவியை பத்திரப்படுத்திக்கொண்டு. கால எந்திரத்தை இயக்க ஆரம்பித்தனர், சில நொடிகளில் அது 2022 க்கு வந்து சேர்ந்தது. அது சென்னை தி நகர் பக்கத்தில் வரும் பொழுது கோளாறு ஏற்பட்டது. எந்திரம் மிகவும் உருள ஆரம்பித்தது, தீ பற்றி கொண்டது. நாங்கள் தீயை அணைக்க முற்பட்டோம். அது எங்களை விழுங்க ஆரம்பித்து விட்டது.

"காலை ஆறரை மணி ஆகி விட்டது, எழுந்திருங்கள்" என்று என் அம்மாவின் குரல் கேட்டது. நானும் என் தங்கையும் தூக்கத்தில் இருந்து எழுந்தோம். எங்களுக்கு இது கனவா இல்லை நிஜமா என்று புரியவில்லை. பத்மா, ராஜா கொடுத்த மாய கருவியை காட்டினாள். நாங்கள் பள்ளியில் அதீந்திரனை சந்தித்து நடந்ததை கூறினோம். அவன் பதிலுக்கு, ராஜா கொடுத்த மாய கருவியை காட்டினான்.

“இது கனவா? இல்லை நிஜமா? தெரிய வேண்டுமா?”, தொடரும்….


Rate this content
Log in

Similar tamil story from Abstract