லஞ்சம்
லஞ்சம்
லஞ்சம் வாங்காமல் எப்படி சார் வேலை செய்ய முடியும் என்று கடைநிலை ஊழியர் தன் மேலதிகாரி மணியிடம் கேட்டுக்கொண்டு இருந்தான் .உனக்கு தான் அரசாங்கம் சம்பளம் கொடுக்குது அப்புறம் என்ன என்று பதில் கேள்வி கேட்டார் மணி.
மணி சம்பளத்தை தவிர வேறு எந்த வருமானத்தை எதிர்பார்ப்பது இல்லை .ஆனால் அவர் வீட்டில் நீங்களும் ஏன் லஞ்சம் வாங்க கூடாது என்று கேட்டு நச்சரிப்பார்கள் .அவருக்கு அதில் உடன்பாடு இல்லை .அலுவலகத்தில் எந்த வேலையாக இருந்தாலும் எதையும் எதிர்பார்க்காமல் தாமதமின்றி வேலையை முடித்து கொடுத்து விடுவார் .
பக்கத்து சீட் ராஜன் கைக்கு காசு வராமல் எந்த கோப்பிலும் கையெழுத்து போட மாட்டார்.
மணி ஒருவர் மட்டும் லஞ்சம் வாங்காமல் இருப்பது மற்றவர்களுக்கு உடன்பாடு இல்லை.
அவரை எப்படியாவது தங்கள் வலையில் சிக்க வைக்க வேண்டும் என்று மற்றவர்கள் திட்டம் போட்டனர்.அதற்கேற்ப மணியின் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.
மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை எதிர்பார்த்தார்கள்.மணியால் அதை கொடுக்க முடியாது அவருடைய மகளுக்கு அந்த மாப்பிள்ளையை மிகவும் பிடித்த போனதால் அவருடைய மனைவி எப்பாடு பட்டாவது அவங்க கேட்ட வரதட்சணை
ஏற்பாடு செய்து கொடுக்குமாறு நச்சரித்து கொண்டே இருந்தார் .
அலுவலகத்தில் பக்கத்து சீட் ராஜன் மணியின் நிலையை புரிந்து கொண்டு,இது தான் சரியான சந்தர்ப்பம் என்று காய் நகர்த்த ஆரம்பித்தார். ஒரு கோப்பை கொடுத்து முடித்து கொடுக்க சொன்னார்.அது மிகவும் முக்கியமான கோப்பு,அதுக்கு ராஜன் ஒரு பெரிய தொகை பேரம் பேசி வைத்து இருந்தார்,மணி சின்ன தொகைக்கு சம்மதிக்க மாட்டார் என்று அவர் பெயரை சொல்லி பெரிய தொகை கேட்க ,சம்பந்த பட்டவர்
அதில் பாதியை முன்பணம் கொடுத்து விட்டார்.
மணி ராஜனிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு இருந்தார்.மாதா மாதம் வட்டி கொடுப்பதாக சொல்லி இருந்தார் .ராஜனுக்கு தெரியும் அவருக்கு வட்டி கொடுக்க முடியாது என்று .இருந்தாலும் முயற்சி செய்கிறேன் என்று கூறி இருந்தார் .இன்னும் இரண்டு நாளில் மணி திருமணத்தை உறுதி செய்தாக வேண்டும் .அதனால் ராஜனை பணத்திற்கு அவசர படுத்தினார்.
ராஜன் இவ்வளவு பெரிய தொகை என்னால் ஏற்பாடு செய்ய முடியாது ,ஒரு நண்பரை கேட்கிறேன் அவர் கொடுத்தால் வாங்கி தருகிறேன் என்று சொல்லி விட்டு அடுத்த நாள்
கோப்பு கையெழுத்து ஆக காத்து இருந்த பார்ட்டி மணி கையெழுத்து போட்டு அனுப்பியதும் ராஜன் சொன்ன தொகையை கொடுக்க தயார் ஆக இருந்தார்.ராஜன் அவரை குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லி விட்டு மணியிடம் நண்பர் பணம் தர ஒப்புக் கொண்டு விட்டார் .இங்கு வந்து கொடுத்தால் வேறு விதமாக நினைத்துக்கொள்வார்கள் ,அவரை வெளியில் ஒரு இடத்துக்கு வர சொல்லி இருக்கேன் .அங்கு இப்போது போனால் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி மணியை அங்கு அழைத்து சென்று சம்பந்தப்பட்ட நபருக்கு அறிமுக படுத்தி பணத்தை வாங்கி கொடுக்க
அது கடனாக கிடைக்கும் பணம் என்று நினைத்து கொடுத்தவரிடம் நன்றி சொல்லி உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் சீக்கிரம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூற கொடுக்க வந்தவருக்கு ஒரே குழப்பம் .உடனே ராஜன் எப்படியோ மணிக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்து விட்டது,சீக்கிரம் இங்கு அதிக நேரம் நிற்க முடியாது என்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மணியின் மகளுக்கு திருமணம் நல்லமுறையில் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகி விட்டது.
கடன் வாங்கிய ஒரு லட்சம் எப்படி திருப்பி கொடுக்க போகிறோம் என்று நினைத்தால் மணிக்கு தூக்கம் வரவில்லை.இன்னும் ஐந்து வருடத்தில் ஓய்வு பெற்று விடுவார்.
ஓய்வூதிய பலன்கள் கிடைத்தாலும்,
மகளுக்கு பிரசவம்,அவருடைய எதிர்கால தேவைகள் என்று கணக்கு போட்டால்,அவரால் அந்த கடனை திருப்பி அடைக்க முடியும் என்று தோன்றவில்லை.
ராஜனை பார்த்து விவரத்தை சொல்லி,அவசரத்தில் யோசிக்காமல் கடன் வாங்கி விட்டேன்.என்ன செய்வது என்று புரியவில்லை என்று சொன்னார்.
அப்போது தான் ராஜன்,அதை திருப்பி கொடுக்க வேண்டாம்.இனியும் இரண்டு கோப்புகளில் கையெழுத்து போட்டுக் கொடுத்தால்,உங்களுக்கு பண பிரச்சனை வாழ்க்கையில் வராது என்று அவரை மூளை சலவை செய்ய,இதனால் பின்விளைவுகள் எதுவும் வராதே என்று கேட்டு விட்டு,நிலைமையை சமாளிக்க மணிக்கு வேறு வழி தெரியவில்லை.
மனதளவில் லஞ்சம் வாங்க தயார் ஆகி விட்டார்.
இப்போது நாட்கள் குறைவாக இருக்குறேதே என்று கவலைப்பட ஆரம்பித்து விட்டார்.