இருண்ட ரகசியம்
இருண்ட ரகசியம்
இருண்ட ரகசியம்
பவானி அவசரமாக கிளம்பிக் கொண்டு இருக்கும் போது மேனேஜர்,கூப்பிடுகிறார் என்று சொன்னார்கள்.அது எப்போதும் உள்ள வழக்கம் தான். உள்ளே சென்றால் சம்பந்தம் இல்லாமல் பேசி கொண்டு தன்னை ரசிப்பது அவளுக்கு தெரியும்.
அவர் பேசும் விதத்தில் ஆபாசம் இருக்காது ஆனால் தன்னுடன் கொஞ்ச நேரம் பொழுதை கழிக்க லாமே என்ற அர்த்தத்தில் இருக்கும்.
வேலைக்கு சேரும் போது திருமணம் ஆனவரா என்ற கேள்விக்கு சிங்கிள் என்று எழுதியதை வைத்து கொண்டு மேனஜர் தனக்கு வலை விரிப்பது அவளுக்கு தெரியும்.
அவளை பொறுத்தவரை அவளுடைய ஆசா பாசங்கள்
மடிந்து வெகு நாட்கள் ஆகி விட்டது.இப்போது அவளுக்கு வயது நாற்பது.பதினைந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.பத்தாவது படிக்கிறான்.
அவளுடைய வாழ்க்கை அவனுக்கு வேண்டி தான்.
இரண்டு வயது குறைந்த தங்கை,காதல் திருமணம் செய்ய,அதில் பிறந்த குழந்தை இரண்டு வயது ஆகும் போது ஒரு விபத்தில்,அவர்கள் இறந்து போக,அந்த குழந்தையை வளர்க்க,யாரும் முன் வராத போது,அதை எடுத்து வளர்க்க தொடங்கினாள்.
அந்த பையன் தான் இன்று அவளுக்கு மகன்.துணை எல்லாமே.
திருமண வயதில் பல வரன்கள் வந்தாலும்,தனக்கு ஒரு குழந்தையை வளர்க்கும் பொறுப்பு உள்ளது என்று கூறிய போது,அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை.சில வருடங்கள் ஆகியும்,அவளுக்கு திருமணம் நடப்பதாக தெரியவில்லை.ஒரு கட்டத்தில் திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
அந்த முடிவுக்கு வந்த பிறகு,தன்னுடைய வாழ்க்கையை ஒரு துறவி போல மாற்றி கொண்டு விட்டாள்.
அந்த மேனேஜரிடம் பல முறை தனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்லியும்,அவர் விடுவதாக இல்லை.திரும்ப,அவளிடம் உன் கணவருக்கு என்ன ஆச்சு என்று தான் கேட்பார்.கணவன் இருந்தால் தானே அவரை பற்றி சொல்ல.
அந்த மேனேஜர் மட்டுமல்ல,எந்த ஆணும்,பெண்ணை ரசிக்க ஆர்வம் காட்டும் அளவிற்கு,அந்த பெண்ணை கூட வைத்து வாழ தயார் ஆக இல்லை.சமூகம்,குடும்ப கௌரவம் அதற்கு இடம் கொடுக்காது.அந்த பெண்ணிற்கு மட்டும் எப்படி இடம் கொடுக்கும்,அதை பற்றி எந்த ஆணுக்கும் கவலை இல்லை.
பவானி தன்னுடைய கடந்த காலத்தை பற்றி யாரிடமும் சொன்னது கிடையாது.அது தன்னுடைய சொந்த மகன் இல்லை என்றும் கூறியது இல்லை.
அது ஒரு இருண்ட ரகசியமாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
வழக்கம் போல,மேனேஜர், வழிந்து பேசிக்கொண்டு இருக்க,,தனக்கு நேரம் ஆகி கொண்டு இருக்கிறது என்று சொல்லியும் அவளை விடுவதாக இல்லை.
அவனுக்கு தெரியாமல் மேனேஜர் பேசுவதை,தன்னுடைய செல்போனில்,பதிவு செய்தாள்,அடுத்த நாளும் இதே கதை தொடர,அவள் நேற்று பேசிய மேனேஜர் பேச்சை,அவனுக்கு போட்டு காண்பிக்க,அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.
மேலிடத்திற்கு அதை அனுப்பவதாக பவானி கூற,அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சினான்.
ஒரு வாரத்தில் வேறு கிளைக்கு மாற்றல் கேட்டு அந்த மேனேஜர் தப்பித்து செல்ல,மற்ற பெண்கள்,பவானியிடம்,எப்படி அவனை விரட்டினாய் என்று கேட்க,அது கடவுள் கொடுத்த வரம் என்று சொல்லி விட்டாள்.