ஹோலி
ஹோலி
பூஜா கல்லூரி படிப்பிற்காக கோயமுத்தூர் வந்து விடுதியில் தங்கி படித்து கொண்டு இருக்கிறாள்.இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கிறது.பூஜா வின் சொந்த ஊர் டெல்லி.ஆனால் இங்கு வந்த நாள் முதல் ஊருக்கு போக முடியவில்லை.வருடாந்திர விடுமுறை குறைவாக இருப்பதால் அவளால் செல்ல முடியவில்லை.
இங்கும் டெல்லியை சேர்ந்த குடும்பங்கள் உறவினர்கள் வசித்து வந்ததால்,விடுமுறையில் அவர்கள் வீட்டிற்கு சென்று விடுமுறையை செலவு செய்து வந்தாள்.
வருடா வருடம் வரும் ஹோலி பண்டிகைக்கு அவளால் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை.
அந்த நாட்களில் அவளுக்கு இங்கு விடுமுறை கிடைக்காது.அந்த நேரத்தில் தான் அவளுக்கு செமஸ்டர் தேர்வு நடந்து கொண்டு இருக்கும்.
இந்த வருடம் இங்கு இருந்த உறவினர்கள் ஹோலி கொண்டாட முன்னமே ரெயிலில் பதிவு செய்து கிளம்பி விட்டார்கள்.
அவளுக்கு யாருடன் ஹோலி கொண்டாடுவது என்று தெரியவில்லை.விமானத்தில் சென்றால் நிறைய செலவாகும்.விடுமுறையும் சரியாக அமையவில்லை.
இதை பற்றி கூட படிக்கும் அருண்,அவன் தான் அவளுக்கு இருக்கும் ஒரே நண்பன்.அவனுடைய அப்பா இராணுவத்தில் பணி புரிவதால்,வடநாட்டில் கொஞ்ச நாள் தங்கி படித்து கொண்டு இருந்தான்.அதனால் அவனுக்கு ஹிந்தி சரளமாக எழுத படிக்க,பேச தெரியும்.பூஜாவுக்கு அவனுடைய நட்பு மிகவும் பிடித்து இருந்தது.அருண் அவனுடைய அம்மாவுடன்,இங்கு சொந்த வீட்டில் வசித்து கொண்டு,கல்லூரியில் படித்து வந்தான்.
அவனிடம் தன்னுடைய வருத்தத்தை சொல்லி கொண்டு இருந்தாள்.இந்த வருட ஹோலி பண்டிகை யாருடன் கொண்டாடுவது என்று தெரியவில்லை என்று புலம்பி கொண்டு இருந்தான்.
அதற்கு அருண் எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடு சொல்கிறேன் என்று கூறினான்.
வீட்டில் சென்று அம்மாவிடம் இந்த வருடம் ஹோலி பண்டிகை கொண்டாட முடியுமா என்று கேட்டான்.ஏன் என்று அவன் அம்மா கேட்க,பூஜாவை பற்றி அம்மாவிடம் சொன்னான்.
அம்மாவும்,நிச்சயம் கொண்டாடலாம்.அப்பாவும் விடுமுறையில் வருவதாக சொல்லி இருக்கிறார்.பூஜாவையும் வர சொல்ல எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்.உன் வகுப்பு நண்பர்களையும் அழைத்து வா,ஹோலி வட நாட்டு மக்கள் தான் கொண்டாடுவார்கள் என்று நினைக்க வேண்டாம்.அது ஒரு தேசிய பண்டிகை.எல்லா மக்களுக்கும் பொதுவான பண்டிகை தான்.பூஜாவிற்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு வா,சமைத்து கொடுக்கிறேன்.மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று சொன்னார்.அருண் பூஜாவிடம் சொல்ல அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
