எனக்குள் ஒரு சிந்தனை
எனக்குள் ஒரு சிந்தனை
எனக்குள் ஒரு சிந்தனை
புதுவருட தினம்-2021 முடிந்து 2022-ன் ஆரம்ப தினம். காலையில் சீக்கிரமாகவே எழுந்து அழகான-ரங்கோலி-கோலம் முற்றத்தில் போட்டேன். பேத்தி ஓடி வந்து,”பாட்டி ,கோலம் அழகாக இருக்கிறது பாட்டி! வானவில் மாதிரி போட்டிருக்கிறீர்கள்.ஏன் அதன் மேல் பூ போட்டிருக்கிறீர்கள்? இதென்ன வானவில் பூவா ?” எனக் கேட்டாள். அவள் கேள்வி என் சிந்தனைக் குதிரையை தட்டி விட்டது போல் உணர்ந்தேன்.
அவள் கூறியது உண்மைதான் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் உபயோகித்து அந்தக் கோலத்தை போட்டிருந்தேன். நடுவில் மஞ்சள் கலரில் ஆரம்பித்து வட்டவடிவில் அடுக்கடுக்காக வட்டமான ரிங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கியது போல் ஒவ்வொரு கலரில் அடுத்தடுத்து வட்டங்களை வரைந்து இருந்தேன். இந்த வண்ணங்களின் மீது நடுவிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு கலரிலும் ஒவ்வொரு இதழ் விரிந்து படர்ந்தது போல் தாமரை மலர்போல் வரைந்திருந்தேன். இப்போதுதான் எனக்கும் அது வானவில் மலர் போல் தோன்றியது.
சீனியர் சிட்டிசன் என்ற முத்திரையை வாங்கியபின் வாழ்வின் குறிக்கோள், லட்சியம் என்ற கோட்பாடுகளை கடந்த வாழ்க்கையில் எதிர்கால சிந்தனை இன்றி அன்றாட வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் வாழும் நான் காலையில் எழுந்து வானவில் வண்ணங்களைக் கொண்டு மலர் கோலம் போட முடிந்தது எப்படி என்ற கேள்விக்கு விடை கிடைத்தது போல் உணர்ந்தேன்.
வயதான காலத்தில் நம் வாழ்க்கை நம் கையில் இல்லை; ஆண்டவன் விட்ட வழி என்பார்கள். எனவே நம்மைச் சுற்றி உள்ளவர்களின் மூலம் தான் வாழ்க்கை வழித்தடம் செல்கிறது என்பதை உணர்ந்தேன். முந்தின நாள் மாலையில் மாணவர்களுக்கு ஹிந்தி பெண்புலவர் மகாதேவி வர்மா எழுதிய எங்கே அந்த கார்மேகங்கள் என்ற கவிதையை பாடமாக நடத்தியதில் அந்த கவிதையில் கார்மேகங்கள் எங்கே என்ற கேள்வியை பெண்கவி கேட்டிருப்பார்.
கேள்விக்கு பதிலாக அவரே,”மலர்கள் சிரித்துக்கொண்டே சொல்லின எங்கள் நிறங்களில் கார்மேகங்கள் சேர்ந்து விட்டன என்று.” வானவில்லின் வண்ணத்தைக் பற்றி மாணவர்களுடன் அளவளாவினேன். அதன் பலன்தான் காலையில் வானவில் மலராக என் கைகளின் வழியாக முற்றத்தில் வந்து இறங்கியது கோலத்தின் நடுவில்.
இந்த சிந்தனையை உணர்ந்ததும் புரிந்தது இதைத்தான் ஞானம் என்பார்களோ என்று.தயவு செய்து சொல்லுங்கள் என் தலைக்குப் பின்னால் ஏதாவது ஒளி வட்டம் தெரிகிறதா என்று! என்னால் திரும்பிப் பார்க்க முடியாது அல்லவா!!