சுதந்திரம்
சுதந்திரம்
சுதந்திரம்.
நாடு சுதந்திரம் அடைந்த நாளான இன்று ஆகஸ்ட் மாதம் 15 தேதி நாடு முழுவதும் கொண்டாடி கொண்டு இருந்தார்கள்.
சாமிநாதன் பிறந்த நாளும் அது தான்.அவனுக்கு வயது இப்போது 74.
அறிவு தெரிந்த நாளில் இருந்து நாடே கொண்டாடும் போது அவனுக்கும் இன்று தானே நானும் பிறந்தேன் என்று நினைவிற்கு வரும்.
இன்று சாதாரண தினகூலி வேலை செய்து சம்பாதிக்கும் மக்கள் கூட அவரவர் வசதிக்கேற்ப பிறந்த நாள் விழா கொண் டாடி வருகிறார்கள்.
தினமும் வேலை செய்து சம்பாதித்தாலும்,அதை கொண்டாட அவர்களுக்கு சுதந்திரம் இருந்தது.
ஆனால் சாமிநாதன் அறிவு தெரிந்த நாள் முதல் இந்த செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறான்.உறவினர்கள் யாரும் கிடையாது.கூட வேலை செய்தவனின் பெண்ணை திருமணம் செய்து கொள்ள,பெண்ணை கொடுக்க வந்த போது கூட மறுத்து விட்டான்.
காரணம் இவன் வாங்காத கடனுக்கு
இன்னும் கடன் அடைத்து முடியவில்லை.இனி கல்யாணத்திற்கு ஆசை பட்டு ஒருத்தியை கட்டி கொண்டால் அவள் மீது இருக்கும் கடனை இவன் மேலும் உழைத்து திருப்பி அடைக்க வேண்டும்.இப்போதும் முதலாளியின் கணக்கு பிள்ளையிடம் கேட்டால் இன்னும் உன் மீது பத்தாயிரம் கடன் உள்ளது என்பார்.அவனும் தனக்கு ஒரு நாள் கூலி எவ்வளவு என்று கேட்டு அதை ஒரு வருடத்திற்கு கணக்கு போட்டு பார்த்தால்,இந்நேரம் அவனுடைய பணம் தான் அதிகம் இருக்க வேண்டும்.ஆனால் சூளையில் அவனுக்கு தங்க கொடுத்த குடிசையின் வாடகை,மாத மாதம் கொடுக்கும் அரிசியின் விலை, விறகு என்று கணக்கு போட்டு அவனுடைய வருமானத்தை விட செலவு அதிகம் ஆகி கொண்டே இருந்தது.
அத்தனை கோடி மக்களின் அடிமை வாழ்வை மீட்டு தர காந்தி மகான் வந்தார்.ஆனால் இவனை போல கொத்தடிமையாக வாழ்ந்து வேலை செய்யும் குடும்பங்களை இந்த சூளையில் இருந்து சுதந்திரம் வாங்கி கொடுக்க இனி ஒரு காந்தி மகான் பிறந்து இருக்கிறாரா,அல்லது பிறந்து வருவாரா,இல்லை இனி ஒரு காந்தி மகான் பிறக்கவே மாட்டாரா.
சாமிநாதன் தினமும் அண்ணாந்து பார்த்து நேரத்தை கணக்கிடும் அந்த சூரிய பகவான் கருணை காட்டுவாரா.
இது போல நாட்டில் எத்தனை பேருக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்காமல் இருக்கிறது.அந்த சூர்ய பகவான் வாய் திறந்து சொல்வாரா.