Siva Kamal

Drama

4.4  

Siva Kamal

Drama

சிறைப்பறவை

சிறைப்பறவை

8 mins
299


கவிதா அந்த ஊருக்கு திருமணமாகி வந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் அந்த ஊரில் ஒரு தியேட்டர் இருப்பதோ ஒரு பார்க் இருப்பதோ அவளுக்குத் தெரியவே தெரியாது.

அவள் தனது அத்தையின் மிலிட்டரி கட்டளைகளை மீறி ஒருபோதும் ஒன்றுமே செய்ததில்லை.

காலை எழுந்ததும் கவிதாவின் கணவர் சந்துருவும் மாமனாரும் ரைஸ்மில்லுக்கு சென்று விடுவர். வீடு திரும்ப இரவு ஆகிவிடும்.

கணவர் சந்துருவின் தங்கை சந்தியா கவிதா செய்யும் வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பதர்காகவே தருணம் பார்த்துக் கொண்டிருப்பாள்.


அன்றும் வழக்கம் போல கவிதா தன் நார்த்தனார் சந்தியாவின் மேற்பார்வையில் தனது அத்தை சொல்லியிருந்த வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.அப்போது அங்கு வந்தாள் மணியம்மா


"கவிதாம்மா நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க என்கிட்ட கொடுங்க நான் செய்றேன் குடுங்க" என்றாள் மணியம்மா


"வேணாம் மணியம்மா என் அத்தை பார்த்தா இதுக்கும் திட்டுவாங்க

,என்ன விஷயம் மணியம்மா இந்நேரம் வந்திருக்கீங்க"


"என்னத்தம்மா சொல்றது, இந்த கழுதை புதுத்துணி எடுத்து கொடுத்தாதான் காலேஜு போவேனு அடம் பிடிக்கிறா,

அந்த மனுஷன் வேற வாங்குற காசு எல்லாம் குடுச்சுட்டு வந்துடுறாரு

அதான் அய்யா கிட்ட ரைஸ்மில்லுல ஏதாச்சும் வேலை இருக்கான்னு கேட்டு போக வந்தம்மா"


"கொஞ்சம் இருங்க மணியம்மா"


"அம்மா இதெல்லாம் வேணாம் எல்லாம் பார்த்தா புது துணி மாதிரி இருக்கு"


"பரவால்ல மணியம்மா இதெல்லாம் புதுத்துணி தான்,ஆசையாசையாய் வாங்கினேன் கட்டிக்கத்தான் வழியில்லை.என் அத்தைய பத்தித்தான் உங்களுக்கு தெரியுமே"


"ரொம்ப நன்றி கவிதாம்மா அவளுக்கு இந்த மாதிரி துணி எல்லாம் போட்டுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை" என்றாள் மணியம்மா விழிகள் மகிழ்ச்சியுடன்.


"மணியம்மா, உங்களுக்கு ஏதாச்சும் ஆசை இருக்கா" என்று சிறிது ஆர்வத்துடன் கேட்டாள் கவிதா


எனக்காம்மா என்று சிறிது யோசித்த மணியம்மா, "எனக்கு கடல் பார்க்கனும்னு சின்னவயசுல இருந்தே ஆசை,அவருகிட்ட கேட்டதுக்கு அதெல்லாம் பார்க்க வெளிநாட்டுக்குப் போனும் ரொம்ப செலவாகும்னு சொல்லிட்டாருமா"


"இந்த 40 வருஷத்தில் நீங்கள் நிஜமா ஒருமுறைகூட கடல் பார்த்ததில்லையா மணியம்மா" என்று ஆச்சரியமாக கேட்டாள் கவிதா


"இல்லம்மா" என்று ஏக்கத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் மணியம்மா


அன்று இரவு முழுவதும் கவிதா அந்த ஊரில் மக்களின் மனநிலை எவ்வளவு சுருங்கிப் போயிருக்கிறது என்றும் மணியம்மாவின் கனவு பற்றியும் சிந்தித்துக்கொண்டே தூங்கினாள்.


காலையில் வீட்டில் அனைவரும் அவசரமாக திருவிழாவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.உள்ளிருந்து

அத்தை, “கவிக்கழுதை பூ வாங்கி எங்கேடி வச்ச? சனியன், கூப்பிட்டால் காது கேட்கிறதா பார்… ஏய் கவி? ” என்று கத்தினார்.சந்தியாவை அண்ணியை அழைத்து வருமாறு கூறினார்.


சந்தியா சென்று கவிதாவின் அறையின் கதவைத் தள்ளிப் பார்த்தபோது அது உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது. எனவே முகப்பு வாசல் வழியாக வலது முற்றத்திற்குப் போய் , முருங்கை மரத்தில் ஏறி, சன்னலுக்கு மேலே திறந்த வென்டிலேட்டர் வழியாக உள்ளே பார்த்தாள் சந்தியா. பயமும் குறுகுறுப்பும் கலந்த பரவச நிலையுடன் கிட்டத்தட்ட கோழி முட்டை திருடிக் குடிப்பதற்கு இணையானது அது. கவிதா தூங்கிக் கொண்டிருந்தால் தன் அம்மாவிடம் மாட்டிவிடலாம் என்று என்னினாள் சந்தியா.


மாறாக மின் விளக்கை எரியவிட்டு, தரையில் சுவர்மீது சாய்ந்தபடி அமர்ந்து, டைரியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் கவிதா. அவ்வப்போது முகத்தில் பிரகாசத்துடன் வெட்கம் கலந்த சிரிப்பு வந்தது. கொசு கடித்திருக்கக்கூடும் ஒருமுறை கழுத்தையும், பாதத்தையும் சொறிந்து கொண்டாள். கொடியில் அவள் களைந்து போட்ட மஞ்சள் நிறச்சேலை கிடந்தது. பீரோ திறந்து உள்ளே வெள்ளிப்பாத்திரங்களும் புடவைகளும் தெரிந்தன. பெரிய இரட்டைக் கட்டில் மீது அண்ணனின் லுங்கி களையப்பட்டு போடப்பட்ட நிலையில். புடவை காற்றில் அசைய கவிதா திடுக்கிட்டு ஏறிட்டுப்பார்த்தாள். எழுதிக் கொண்டிருந்ததை மூடிவிட்டாள். அவள் பார்த்துவிட்டாள் என்று எண்ணி மூச்சுத்திணறல் அடைந்தாள் சந்தியா. ஆனால் கவிதா மீண்டும் எழுத ஆரம்பித்தாள். கதவுக்கு மறுபக்கம் அத்தை சந்தியாவை கூப்பிடுவது கேட்டது. பிறகு "கவி கவி” என்ற அழைப்பு. கவிதா எழுதி வைத்ததை மூடினாள். கதவைப் பார்த்தாள். கூந்தலைக் காதில் ஒதுக்கி செருகிக் கொண்டாள். ஆனால் எழவில்லை. அத்தை கதவைத் தட்டினாள். கவிதா அவசரமாக எழுந்து, கையிலிருந்த டைரியை பீரோவிற்குள் உள்ளறையில் வைத்துப்பூட்டி, புடவைகளை அள்ளி அதை மூடி, பீரோவையும் பூட்டி, சாவிகளைக் கைப்பையில் போட்டாள். முந்தானையால் வியர்வையை ஒற்றியபடி கதவைத் திறந்தாள்.


புருவத்தைச் சுருக்கியபடி "என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்?" என்றாள் அத்தை.


"புடவை மாற்றினேன் அத்தை"


"இவ்வளவு நேரமா? கூப்பிட்டது கேட்கவில்லையா?’நாங்க திருவிழாவுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள எல்லா வேலையும் செஞ்சுட்டு போய் மில்லை பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு புடவையை சரிசெய்து விட்டு கிளம்பினார் அத்தை.


பைபிளில் பிலாத்து என்ற மன்னர் மட்டுமே இயேசுவுக்கு ஆதரவாக இருந்தார்.எதிர்ப்பு வலுக்கவே ஒருநாள் அவரும் நீரை எடுத்து கைகழுவி சைகை காட்டிய அடுத்த கணமே இயேசு சிலுவையில் அறையப்படுவார்.

அதுபோன்ற கைகழுவல்கள் தினமும் கவிதாவுக்கு நிகழ்ந்தது.


கவிதாவுக்கு திருவிழாக்கு செல்ல ஆசையிருந்தும் பேசாமல்  வெளியே கொல்லைப் பக்கம் போனாள். அவள் அங்கு குவிக்கப்பட்டிருந்த பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்.


பக்கத்து வீட்டுக்காரி பார்த்துவிட்டு "என்னக்கா பாத்திரகடை வச்சிருக்கீங்களா" என்று வழக்கம்போல கவிதாவை நக்கல் அடித்தாள்


கவிதா விளக்குப் போட்டது போலச் சிரித்துவிட்டு "நீங்க வேற ஏங்கக்கா" என்றுவிட்டு பாத்திரங்களைக் கழுவ தொடங்கினாள்


மறுநாள் சந்தியா திருவிழாவில் எல்லாரும் கட்டிய சேலைகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.

எதிர்வீட்டு ராணியத்தையும், அத்தையும், பாட்டியும் உட்கார்ந்து முருங்கைக் கீரை ஆய்ந்து கொண்டிருந்தனர்.


"அது டேநைட் புடவை. ராத்திரியில் திருப்பிக் கட்டிக்கொண்டால் போதும். பளபளவென்று இருக்கும். ஞானம் வாத்தியார் பெண்டாட்டி பாசிப்பருப்பு நிறத்தில் ஒன்று கட்டியிருந்தாள். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றாள் சந்தியா

"ஆயிரத்துக்கு குறையாது” என்றாள் ராணியத்தை

“சின்னப்பெண்கள் கட்டினால் நன்றாக இருக்கும்” என்றாள் பாட்டி

ராணியத்தையின் ஓரக்கண் அத்தை யைப்பார்த்து சிரித்து திரும்பியது. “இல்லை பாட்டி, கொஞ்சம் வயதானவர்கள் கூடக் கட்டுகிறார்கள். அன்றைக்குக் கோயிலில் கீழத்தெருவிலிருந்து ஒரு மாமி கட்டிக் கொண்டு வந்தாள்”

“உண்மையாகவா ?”

“பின்னே?”

“மரகதப்பச்சை என்றால் உங்களுக்கு எடுப்பாக இருக்கும்” என்றாள் அத்தை. ராணியத்தையும் அத்தையும் புன்னகைத்தனர்.

“என்னவோ… இந்த வயதில் இனி நான் கட்டிக் கொண்டு எங்கே போகப்போகிறேன்?” பாட்டி கண்ணாடியைத் தூக்கி மேலே விட்டாள்.


அப்போது கவிதா பற்றியும் பேச்சு வந்தது.

“என்ன, எலிசபெத் ராணி புதுப்புடவை வாங்கியிருக்கிறாள் போலிருக்கிறது” என்றாள் ராணியத்தை.


“பாங்குல வேலை பார்த்தவங்குற திமிரு, அதான் இப்படி மினுக்குறா"என்றாள் அத்தை


"இப்போ ஏன் வேலை விட்டு நிருத்திட்டீங்க" என்றாள் ராணியத்தை


“மானம் கெட்ட பிழைப்பு எங்கள் குடும்பத்தில் இல்லை. நாலுபேர் முன்னால் உட்கார்ந்து அரட்டையடிப்பதும் கண்டவன் வாயால் பேச்சு கேட்பதும்…” என்றாள் அத்தை


“ஒரு கீரை இலையைத் தூக்கிப் பார்த்தாள் பாட்டி கோபமாக சந்தியா வைத்திருந்த முருங்கைக் கீரைத்தண்டுகளைப்பார்த்தாள், “என்னடி இது?”உருவாமலே அப்படியே போடுற முகரையைப்பார் போடி…” தண்டுகளைப் பிடுங்கி வீசினாள்


அங்கே தொடர்ந்து அமர்ந்திருக்கும் தகுதியைப் பெறும் பொருட்டு கவிதா பற்றி ஏதாவது கூறவேண்டும் என்று எண்ணிய கணம் டைரி ஞாபகம் வந்தது. “அம்மா, அண்ணி டைரி எழுதுகிறாள்” என்றாள் சந்தியா.அது அந்த வீட்டில் ஒரு பௌதீக சக்தியாக மாறப் போகிறது என்று அவள் அப்போது அறியவில்லை


“என்னது அது?” என்றாள் ராணியத்தை


“டைரி. சிவப்பாக அட்டை போட்ட டைரி. அன்றைக்கு அம்மா கூப்பிட்டபோது உள்ளே தாழ் போட்டுக்கொண்டு அதில் எழுதினாள்”.


அத்தையின் முகம் மாறியது. பாட்டியின் வாய் திறந்திருக்க மாறி மாறிப்பார்த்தாள். “நீ எப்படிப்பார்த்தாய்?” என்றாள் அத்தை

“முருங்கை மரத்தில் ஏறிப்பார்த்தேன்” என்றாள் சந்தியா. உடனே அவள் வயிறு பகீரிட்டது. அவசரமாக “சும்மாதான் அம்மா ஏறினேன்” என்று சமாளித்தாள் “அந்த டைரியை அண்ணி பீரோ உள்ளறையில் வைத்துப்பூட்டிவிட்டாள்.”


“டைரியா எழுதுகிறாள்?” என்று ராணியத்தை சந்தியாவை கூர்ந்து பார்த்துக் கேட்டாள்.


அத்தை சிரித்தபடி, “வேறு என்ன, பைசாக்கணக்குதான்.புருஷன இப்பவே கையில போட்டுக்க பாக்குறா ” சந்ரு வரட்டும் பேசிக்கலாம்" என்றுவிட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார்


ராணியத்தை சென்றதும் அம்மா என்று கூப்பிட்டபடி சந்தியா நடந்தபோது கவிதாவின் அறையிலிருந்து அம்மா கூப்பிட்டாள். சந்தியா உள்ளே போனாள். “எங்கேடா அந்த டைரி?"


“கவிதா அதை பீரோவிற்குள் வைத்து பூட்டிவிட்டாளே?”


“பீரோவில் இல்லையே?”


“சேலைக்கு அடியில் ஒரு உள்ளறை இருக்கிறது அம்மா”


அத்தை மேலே கிடந்த புடவைகளைத் தள்ளினாள். உள்ளறை இருந்தது.


“இதுக்கு ஏதுடா சாவி?”


“சாவியை கவிதா கைப்பையில் போட்டுவிட்டாளே?”


“ஓகோ, கையோடு கொண்டு போகிறாளா? சரி வா, சாப்பிடு”

அத்தை துணிகளை உள்ளே போட்டு கதவை அறைந்து ,மூடி பூட்டினாள்


சந்தியா சாப்பிடும்போது வெளியே அத்தையம் பாட்டியும் பேசுவது கேட்டது. பாட்டி திடீரென்று உரத்த குரலில் ”பட்டணத்து பவிஷுக்காரி வேண்டாம்டா என்று தலைதலையாக அடித்துக் கொண்டேன் கேட்டானா? என்ன இழவெல்லாம் எழுதி வைத்திருக்கிறாளோ சண்டாளி” என்றாள். அத்தை அவளைத் தணிந்த குரலில் அடக்கினாள்.

சாப்பிட்டுவிட்டு கையை துப்பட்டாவில் துடைத்தபடி வெளியே வந்தாள். தன் அம்மா ஏதோ பேச ,பாட்டி அக்கறையாகத் தலையை ஆட்டியபடி இருந்தாள். வாய் திறந்திருந்தது. சோடாபுட்டிக் கண்ணாடியில் ஃபேன் சுழல்வது தெரிந்தது. அருகே போக விரும்பினாள் சந்தியா.ஆனால் அவள் அம்மா அதட்டித் துரத்திவிட்டாள். என்ன பேசுகிறார்கள்? அப்படி அவர்கள் சுமுகமாகப் பேசுவதே அபூர்வம் என்று எண்ணிக் கொண்டாள் சந்தியா.


தன் அண்ணன் வந்ததும் ஓடிப்போய் சொல்லிவிடவேண்டும் என்று தேரடியில் காத்திருந்தாள்.

கவிதாவின் கணவன் சந்ருவும் மாமனாரும் மில்லில் இருந்து வந்தார்கள்.


சந்ரு சந்தியாவிடம், “என்னடா?” என்றான்.


“ஒன்றுமில்லை”


“வா வீட்டுக்கு, ஊர் சுற்றுவதே பிழைப்பு” என்றபடி வீட்டிற்கு நடந்தார்கள்.


கவிதா கொல்லையில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள்

சிறுதிண்ணையில் நின்றபடி இருவரும் கால் கழுவினர்.


உள்ளே பாட்டியின் உரத்த குரல் கேட்டது.

மாமனார் அத்தையிடம் ஏதோ கூற அத்தை கோபத்துடன், “எனக்கென்ன, நல்லது சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்” என்றாள்.


“இப்போது என்ன சொல்கிறாய்?”


“நான் ஒன்றுமே சொல்லவில்லை சாமீ” அத்தை உள்ளே சென்றுவிட்டாள்.


பாட்டி உட்கார்ந்த இடத்திலிருந்து “நாராயணா, அவள் சொல்வதிலும் காரியம் உண்டு கேட்டியா?

இந்தக்காலம் பழைய காலமில்லை. எங்கள் காலத்தில் வயசு வந்த பொண்ணுங்க தலைகூட நிமிராது. இப்போது போடுகிற வேஷமும் ஆடுகிற ஆட்டமும்… ஜாக்ரதையாக இருந்தால் தோசமில்லை” என்றாள்.


“சரி சரி, எனக்குத் தலைவலிக்கிறது.”


“வந்தால் கேட்டுப்பார். என்ன கேட்கிறோம் அப்படி? என்னம்மா எழுதுகிறாய் என்றுதானே? தப்பாக ஒன்றும் இல்லையென்றால் காட்டுவதற்கு என்ன?” என்று முனகினாள் பாட்டி.


“வாயை மூடுகிறாயா இல்லையா?” என்று மாமனார் கத்தினார்.


பாட்டி “என்னவோ போ” என்றாள்.


கவிதா ஏதோ சத்தம் கேட்டு வந்தவள் எல்லாரும் நிற்பதை கண்டு கண்டதும் நிறுத்திவிட்டு, புடவை சரசரக்க மௌனமாக வந்தாள். கடந்து அறைக்குப்போனாள்.


மாமனார் “சந்ரு, இப்படி வா” என்றார்.


சந்தியா உள்ளிருந்து என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


திடீரென்று பாட்டி“என்னடா சொந்த விஷயம்? குடும்ப மானம் கப்பலேறினால் அது சொந்த விஷயமா?” என்று கத்தினார்.


“ரகசியம் ஒன்றும் இல்லையென்றால் பிரச்சனையே இல்லையே. உனக்கு ஒன்றும் பிரச்னை இல்லையென்றால் நான் தலையிடவில்லை” என்றார் மாமனார்.


பாட்டி உரக்க “குடும்பத்திற்குள் அப்படி விட்டுவிட முடியுமா? எல்லாருக்கும்தானே மானக்கேடு?” என்றார்.


மாமனாரும் கோபமடைந்தார். “இப்போது மானக்கேடுக்கு என்ன நடந்தது? என்னபேச்சு இது?”


“நான் போகிறேன். எனக்கு இதெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது”என்றான் சந்ரு


“வாயை மூடுடா சந்ரு…. போய் அவள் முந்தானையில் ஒண்டிக் கொள். மானம் கெட்ட பிறவி”


“பாட்டி நீங்கள் வாயை மூட முடியுமா இல்லையா?”


“இதோ பார் சந்ரு என்ன இப்போது பிரச்னை? தப்பாக ஏதும் இல்லை என்றால் ஒன்றுமே பிரச்னை இல்லையே? தெரிந்து கொள்ளத்தானே? உனக்குப் பிடிக்கவில்லை என்றால் கேட்கவே வேண்டாம்” என்றார் மாமனார்.


அத்தை உள்ளே நின்றபடி, “பட்டணத்துல படிச்ச பெண்ணுன்னா கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும். இதெல்லாம் அவருக்குத் தெரியாதா? நீங்கள் என்ன பேசுவது?” என்றாள்.


“நீ உள்ளே போ” என்று மாமனார் கத்தினார்.


“நான் போகிறேன் எனக்கென்ன?” அத்தை சொன்னாள். “என்னவோ பாட்டி புலம்புகிறாரே என்று சொல்லவந்தால் எனக்கெதுக்கு பொல்லாப்பு? நமக்குத் தான் இருக்குதே அடுப்பும் கரிச்சட்டியும்”


கவிதா புடவை மாற்றிவிட்டு வெளியே வந்தாள். வளையல்களை முழங்கையில் இழுத்துவிட்டபடி முகம் கழுவப்போனாள். அவளிடம் வியர்வை மணம் எழுந்தது.


“அண்ணி அப்பா திட்டினார்கள்” என்றபடி சந்தியா பின்னால் போனாள்.


பாட்டி எழுந்து வாசலுக்குப்போய் “இதோ பார் சந்ரு நமது குடும்பத்தில் இதுவரை ஒரு தப்பும் நடந்ததில்லை. ஒருத்தர் கைநீட்டிப்பேசினதுமில்லை….” என்றாள்


“சரி, இப்போது என்ன? நான் கேட்டுவிடுகிறேன்” என்றான் சந்ரு


கவிதா அத்தையையும் பாட்டியையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி உள்வாசலருகே போனாள். சந்ருவைப்பார்த்து “என்ன?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.


“உன் ஹாண்ட் பாகை எடு”


அத்தை சந்தியாவிடம் திரும்பி, “போய் எடுத்து வாடா” என்றாள்.


சந்தியா ஓடிப்போய் எடுத்துவந்தாள்.சந்ரு அதை வாங்கி, திறந்து சிறுசாவியை எடுத்து சந்தியாவிடம் தந்து, “போய் அந்த டைரியை எடுத்து வாடா” என்றான்.


கவிதா குழம்பி, “எந்த டைரி?” என்று பதறினாள்.


அத்தை சந்தியாவிடமிருந்து சாவியைப்பிடுங்கி உள்ளே போய் டைரியை எடுத்து வந்தாள். கவிதா கோபமாக “அது என் டைரி” என்றாள்.


“உன் டைரிதான். நீ அதில் என்ன எழுதியிருக்கிறாய் என்று இவர்கள் அறிய வேண்டுமாம்” “காட்டு ,மனசு அடங்கட்டும்”என்றான் சந்ரு


“மாட்டேன். காட்ட மாட்டேன்” என்றாள் கவிதா, அதுவரை அவளிடமிருந்து கேட்டறியாத குரலில்.


“கத்தாதே. அவர்கள் பார்க்கட்டும். என்னவோ வாயில் வந்தபடி பேசுகிறார்கள். சந்தியா அதைப்படி"


“நான் எதற்குப்படிக்கிறேன்? பெரியவர்கள் படித்து என்ன வேண்டுமோ அதைச் செய்யட்டும்” என்று நீட்டி நீட்டிச் சொன்னாள் சந்தியா.


“மாட்டேன். தரமாட்டேன்” என்றபடி கவிதா அத்தையை நோக்கிப்பாய்ந்து டைரியைப்பிடுங்க முயன்றாள். அத்தை கையை மேலே தூக்கிக் கொண்டாள் .தள்ளியபடி பின்னால் நகர்ந்தாள்.


சந்ரு டைரியை வாங்கிக் கொண்டான். கவிதா அவளுடைய வழக்கத்தை மீறி வெளியே ஓடி சந்ருவைத் தடுத்தாள்.


அத்தை, “நன்றாகப்பார்த்துக் கொள்ளுங்கள். நான் தான் என்னவோ அபவாதம் சொல்கிறேன் என்றீர்களே” என்றாள்


“அதிலே ஒன்றுமே இல்லை” என்று கவிதா அழுதபடி சொன்னாள்“என்னிடம் தந்துவிடுங்கள். படிக்காதீர்கள் தயவு செய்து படிக்காதீர்கள்.”


“இதோ பார் சந்ரு, நீயே அதைப்படி .உனக்குத் திருப்தியென்றால் சரி. இதோ பாரம்மா, உன் புருஷன் மட்டும் தான் படிப்பான். வேறு யாரும் படிக்க மாட்டார்கள். போதுமா?” என்றார் மாமனார்.


“அது என் டைரி. வேற யாரும் அதைப்படிக்கக்கூடாது” என்று கவிதா கத்தினாள். அவளைப் பார்க்க பைத்தியம்போல் இருந்தது.


பாட்டி எழுந்து “ஏன்? புருஷன் கூட படிக்கக்கூடாத ரகசியம் என்ன உனக்கு?” என்று அதட்டினார்.


“அப்படி அதில் ஒன்றும் இல்லை” கவிதா அழுதபடி சொன்னாள்.


"கவி, இதோ பார், நீ இப்படி அடம் பிடித்தால் எல்லாரும் என்ன நினைப்பார்க்ள்?”


“வேண்டாம் அதை யாரும் படிக்கக்கூடாது”என்று ஒரு புழுவைப்போல அங்கு துடித்தாள் கவிதா


“அப்படி என்ன ரகசியம் பெண்ணுக்கு வேண்டிக் கிடக்கிறது?” என்றாள் அத்தை


“என் தாலி மேல் ஆணையாகச் சொல்கிறேன். அதிலே மனசாட்சிக்கு விரோதமாக ஒன்றுமே இல்லை. என்னை நம்புங்கள்”


“பின்னே, படித்தால் என்னவாம்?” என்று அத்தை கேட்டாள்.


“என் மனதில் பட்டதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். தப்பாக ஒன்றுமே அதில் இல்லை.”


“இதோ பார் கவி, இவர்கள் சந்தேகப்படுவதுபோல் இதில் தப்பாக ஏதும் இல்லைதானே?”


“திருச்செந்தூர் முருகன் மேல் ஆணையாக…”


“அப்படியென்றால் ஏன் பயப்படுகிறாய்? நான் படித்துவிடுகிறேன். பிரச்னை தீர்ந்துவிடும்”


“இல்லை. இதை யாரும் படிக்கக்கூடாது”என்று தன்னுடைய சுயத்தை நிரூபித்துக் கொள்ள துடித்தாள். ஆனால் யாருடைய செவிகளுக்கும் அவள் உணர்வு எட்டவே இல்லை.


சந்ரு கோபத்துடன் “என்ன சொல்கிறாய் என்று புரிந்துதான் சொல்கிறாயா?” என்றான்.


“இல்லை யாரும் அதைப்படிக்கக்கூடாது” என அழுதாள்.


சந்ரு அவளை உற்றுப்பார்த்தான். அவன் முகம் கோணியது. “அப்படியா சங்கதி? அப்படியானால் படித்துப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை”

அவன் டைரியை பிரிப்பதற்குள் கவிதா பாய்ந்து டைரியைப் பிடுங்கிக் கொண்டாள். அத்தை பாய்ந்து பிடிப்பதற்குள் ஓடி சமையலறைக்குள் புகுந்து கொண்டு கதவைச் சாத்திக் கொண்டாள்.

“கவி, கவி” என்று கூப்பிட்டபடி அத்தை கதவைத் தட்டினாள். சந்ருவும் மாமனாரும் பாட்டியும் கதவருகே குழுமிவிட்டார்கள். “கவி கவீ” என்று கூவியபடி சந்ரு கதவை ஓங்கி ஓங்கி உதைத்தான்.

"எங்கள மாட்டி விட்டுறாதடீ" என்று பதற்றத்துடன் கத்தினாள் அத்தை.

பாட்டி வாயைத் திறந்தபடி கையை மட்டும் ஆட்டினாள்.பாட்டியின் தலை ஓணான் போல வெடவெடத்தது. மாமனார் “கதவை உடை” என்று சத்தம் போட்டார்.


உள்ளே மண்ணெண்ணெய் வீச்சம் எழுந்தது. பிறகு குப்பென்று தீ எரியும் சத்தமும் பொசுங்கல் வாடையும் எழுந்தது.


சந்ரு விசித்திரமான குரலில், “கவீ கவீ...” என்று கூறியபடி தோளால் கதவை முட்டினான். ஒரே அலறலாக இருந்தது. சட்டென்று கதவு திறந்தது. உள்ளே ஒரே புகை. கவிதா வியர்வையில் கூந்தல் முகமெங்கும் ஒட்டியிருக்க வெளியே வந்தாள்.


“கவி, நீ….” என்றான் சந்ரு. உள்ளே பார்த்தான். “டைரியையா கொளுத்தினாய்? அடிப்பாவி….”


அத்தை உள்ளே எட்டிப்பார்த்தாள். ”கரிதான் மிச்சம். கைகாரி” என்றாள்.


கவிதா மூச்சு வாங்கினாள். கண்ணீர் உலர்ந்த முகத்தில் இமையில் மயிர் ஒன்று ஒட்டியிருந்தது. யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. 

அமைதியாக இருந்தாள். வாந்தி எடுத்து முடித்துவிட்டவள் போலத் தெரிந்தாள்.

சந்ரு அவளை அடிக்கக் கையோங்கினான். அவள் அமைதியாக நிற்பதைக் கண்டதும் கையைத் தணித்தான். “மூதேவி நாயே” என்றான்.


“என் தாலிமீது ஆணையாக ,மனத்தாலும் கூட நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. அந்த டைரியிலும் எதுவும் தவறாக இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை. என்னை நம்புங்கள்” என்றாள் கவிதா. அவள் குரல் தழுதழுத்தது.


“உன்னை எப்படி நம்புவது?” “எதற்காக அதை எரித்தாய்?” என அத்தை கேட்டாள்.


“அது என் டைரி. அதை வேறு யாரும் படிக்கக்கூடாது” கவிதா அப்படியே சரிந்து முழங்காலைக் கட்டிக் கொண்டாள். “அந்த டைரியில் தப்பாக ஒன்றுமே இல்லை. என்னை நம்புங்கள்” என்றாள். பிறகு முகத்தை முட்டுகள் மீது வைத்துக் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். அவள் தலைமயிர்மீது தாளின் கரித்துகள் ஒட்டியிருந்தது. தோள்கள் குலுங்கின. வாடிய மல்லிகைச்சரம் தொங்கி ஆடியது.

எல்லாரும் சந்ருவையே பார்த்தார்கள். அவர் அவளையே உற்றுப்பார்த்தபடி நின்றார். பிறகு தன் அறைக்குள் போய்விட்டார்.சந்ருவையும் சந்தியாவையும் அத்தை படுக்கும்படிச் சொன்னாள். ஒவ்வொருவராக படுத்துக் கொண்டனர். யாரும் பிறகு எதுவும் பேசவில்லை. கவிதா வெகுநேரம் அழுவது கேட்டது. அவள் ஹாலிலேயே தூங்கிவிட்டாள்.

மறுநாள் சந்ரு அவளை அவள் அம்மா வீட்டுக்குக் கொண்டு விட்டுவிட்டு வந்தான். ஒருமாதம் கவிதாவின் அப்பாவும் அம்மாவும் வருவதும், போவதும், விவாதிப்பதும் எல்லாம் நடந்தது. மேட்டுவீட்டு வக்கீல் கூட ஒருமுறை வந்து வெகுநேரம் சந்ருவிடமும் அப்பாவிடமும் மாமனாரிடமும் பேசினார்.


கவிதாவை பிறகு கூட்டி வரவேயில்லை. அவளை விவாகரத்து செய்துவிட்ட விஷயம் மூன்று வருடம் கழித்து சந்ரு வேறு திருமணம் செய்தபோது தான் புரிந்தது கவிதாவுக்கு.

ஒருவேளை அந்த பெண்ணிற்காவது டைரி எழுதும் பழக்கம் இல்லாமல் இருந்தால் அவளாவது தன் அம்மாவின் வீட்டிற்கு அனுப்பப்படாமல் இருப்பாள் என்று நினைத்து கொண்டாள் கவிதா...


Rate this content
Log in

Similar tamil story from Drama