Siva Kamal

Drama

4.5  

Siva Kamal

Drama

ஆண் பயம்

ஆண் பயம்

8 mins
285


சொகுசுப்பேருந்து கிளம்பிவிட்டது.எல்லையைத் தாண்டியதும் நடத்துநர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக வந்து நின்றார். பேருந்தின் உட்புறம் அமைதியானது. நந்தினியின் இருக்கை, தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே முதல் வரிசையில் அமைந்திருந்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை அது. திரையில் நீலம், பச்சை என வண்ணங்கள் மாறி மாறித் தெரியத் தொடங்கின. பிறகு, தெளிவான சித்திரங்களோடு திரைப்படம் ஆரம்பமானது. அது திரையரங்கில் அப்போது ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான ஒரு திரைப்படம். நந்தினிக்கு நீளமான கொட்டாவி வந்தது.

தலைக்கு மேல் அலறப்போகும் வசனங்களை மீறித் தூங்குவதற்கு, அவசியம் பயிற்சி இருக்க வேண்டும். அது நந்தினிக்குக் கொஞ்சமும் வசப்பட்டிருக்கவில்லை. காற்று இன்னும் கொஞ்சம் உள்ளே வரவேண்டி ஜன்னலை முழுதாகத் திறந்துவைத்தாள் நந்தினி.


'ஆயிரம்தான் இருந்தாலும் நான் ஆம்பள. போலீஸாவே இருந்தாலும் நீங்க பொம்பள. முதல்ல பொம்பளயா நடந்துக்கங்க...’ என்று கதாநாயகன், நாயகி முன்பாகக் கையை வீசி வீராவேசமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது பக்கத்து ஸீட்டில் அமர்ந்திருந்த பெண் நந்தினி மீது சரிந்தாள். அவளுக்கு நாற்பது வயது இருக்கும். இந்த அலறலிலும் அவளால் தூங்க முடிவது நந்தினிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `ஆழத் தூங்குவது, நடுக்கடலின் அடிமட்டத்தில் கிடப்பதுபோன்றதான நிலை’ என்று ஏதோ ஒரு புத்தகத்தில் நந்தினி படித்திருந்தாள். அது அநேகமாக ஒரு மனோவியல் புத்தகமாக இருக்கக்கூடும் என்றே, அவளால் தீர்மானத்துக்கு வர முடிந்தது. சமீபகாலமாக மனோவியல் சார்ந்த புத்தகங்களே அவளை வசீகரிக்கின்றன. `ஒரு மனம், ஆயிரம் புத்தகங்களுக்குச் சமானம். ஒரு புத்தகம் எப்படி ஆயிரம் பேர் மனங்கள் பற்றி ஆராய முடியும்?’ என நந்தினி நினைத்துப்பார்த்திருக்கிறாள். ஆனாலும், அந்தப் புத்தகங்கள் அவளுக்குப் போதை அளித்தன. தூக்கம் அறவே வராத இரவுகளில் அவற்றைப் படிக்கிறபோது, அவள் தன்னுடைய மனதோடு மட்டுமே உரையாடினாள் எனச் சொல்லிவிட முடியாது. அவை பல மனங்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்ட இரவுகளாக அமைந்திருந்தன. இப்போது, இந்தப் பேருந்தில் எத்தனை பேர் கடலுக்கு அடியில் கிடக்கிறார்கள் என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று நந்தினிக்குத் தோன்றியது பக்கத்து இருக்கைப் பெண்ணின் கைப்பையில் இருந்த அலைபேசி ஒலித்தது. நந்தினி சன்னல் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள். நிலா கூடவே ஓடி வந்துகொண்டிருந்தது. தலைக்கு மேலே ஆர்ப்பாட்டமான வசனக் கூச்சல்கள், அதற்கும் மேலே அமைதியான நிலா என நந்தினிக்குத் தோன்றியது. இதுபோன்று தொடர்பில்லாத எண்ண ஓட்டம் அமைவதுதான், பயணத்தின் தனித்துவம் என நினைத்துக்கொண்டாள்.


பக்கத்தில் உள்ள பெண்ணின் அலைபேசி மறுபடியும் அழைத்தது. அகாலவேளையில் ஒருவர் மீண்டும் மீண்டும் அழைப்பதற்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்க வேண்டும் என்ற புத்தியின் அறிவுறுத்தலால், நந்தினி அந்தப் பெண்ணைத் தொட்டு எழுப்பினாள். தூக்கத்திலிருந்து முயற்சித்து பிறகு சட்டென அவளின் கண்கள் விழித்துக்கொண்டன. பதற்றத்துடன் நந்தினியைப் பார்த்தாள்.


“போன் அடிக்குதுங்க.”


“என்னது?” என்றபடி வாயின் ஒருபக்க ஓரத்தைத் தன்னிச்சையாகப் புறங்கை விரல்களால் துடைத்துக்கொண்டாள்.


“உங்க போன்தான். ரொம்ப நேரமா அடிச்சிட்டேயிருக்கு.”


“ஓ... தேங்க்ஸ்” என்றாள் அவள். தூக்கம் முற்றிலுமாகக் கலைந்துபோயிருந்தது.


அலைபேசியை எடுக்க பைக்குள் துழாவினாள். அதற்குள் அது திரும்பவும் அழைப்புப் பாடலைப் பாடத் தொடங்கியிருந்தது.


அலைபேசியின் திரையைப் பார்த்துவிட்டு, “என் வீட்டுக்காரர்” என்று நந்தினியிடம் சொல்லிவிட்டு வாயை அலைபேசியோடு அணைத்து, மறு கையினால் காதைப் பொத்திக்கொண்டு பேசத் தொடங்கினாள். இதற்குள் படத்தில் கதாநாயகிக்குக் காதல் வந்திருந்தது. அவள் ஆடிப் பாட ஆரம்பித்திருந்தாள்.


எப்படியாவது தூக்கத்தை வரவழைத்தாக வேண்டிய முயற்சியை நந்தினி தொடங்கியிருந்தாள். கால்களை இருக்கைக்கு மேலாக மடித்துவைத்து, இருக்கையோடு சாய்ந்துகொண்டாள்; சரிந்துபார்த்தாள்.


“சரி... சரி...” என்பதை மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண் அலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பது கேட்டது.


அவள் பேசி முடித்துவிட்டு இவள் பக்கம் திரும்பினாள்.


“என் வீட்டுக்காரர். ரொம்ப நேரமா கூப்பிட்டிருக்கார். நான் போன் எடுக்கலைன்னதும் பயந்துட்டார். நல்லவேளை நீங்க எழுப்பினீங்க.”


“எப்படி இந்தச் சத்தத்துல தூங்குறீங்க?’’ என்று வார்த்தையாகவும், மீதியைச் சைகையாலும் கேட்டாள்.


“பழகிருச்சுங்க. என் வீட்டுக்காரர் நடுராத்திரி வரைக்கும் டிவி பார்ப்பார். `சத்தமா வெச்சுக் கேட்டாத்தான் கேட்ட மாதிரி இருக்கும்’பார். நாங்களும் சத்தத்துக்குத் தூங்கப் பழகிட்டோம்” என்று சிரித்தாள்.


நந்தினியும் சிரித்தாள்.


“கல்யாணமாகிடுச்சா?” என்று நந்தினியிடம் கேட்டாள்.


“அடுத்த மாசம் கல்யாணம். பத்திரிகை குடுக்கிறதுக்குத்தான் ஊருக்குப் போயிட்டிருக்கேன்.”


“இப்பல்லாம் யாரும் நேர்ல போய் பத்திரிகை குடுக்கிறதில்லையே.கொரியர்ல, வாட்ஸ்அப்ல அனுப்பிடுறாங்க. நீங்க நேர்ல போறீங்களே!”


“என்னோட ஸ்கூல் வாத்தியார் ஒருத்தருக்குப் பத்திரிகை குடுக்கிறதுக்காகப் போறேன்.”


அவள் வியந்துபோவாள் என்பதை நந்தினி யூகித்திருந்தாள்.தன்னுடைய அடுத்த கேள்விக்குள் வரும் முன்பு மீண்டும் அவளுடைய அலைபேசி அழைத்தது.

 

“திரும்பவும் அவர்தான். பேசிட்டு வர்றேன்” என்றாள்.


ஐந்தாம் வகுப்பு எடுத்த ஆசிரியருக்குத் திருமணப் பத்திரிகை கொடுக்க இவ்வளவு தூரம் பயணம் செய்யப்போகிறேன் என்று சொன்னபோது, எல்லோருமே விசித்திரமாகத்தான் நந்தினியைப் பார்த்தார்கள். வேலைபார்க்கும் பன்னாட்டு நிறுவனத்திலும் விடுப்பு அனுமதி கேட்கும்போது, இந்தக் காரணத்தைத்தான் எழுதியிருந்தாள்.


வேறு ஏதாவது காரணம் சொல்லி விடுப்பு கேட்டிருக்கலாம்தான். ஆனால், எதற்காக மறைக்க வேண்டும்? திருமணத்துக்கு ஆசிரியரை அழைப்பது என்பது ஒன்றும் அசாதாரண செயலில்லையே! ‘அதுக்காக, கல்யாணத்தை வெச்சுட்டு இவ்வளவு தூரம் பயணம் போகணுமா?’ என மாப்பிள்ளை வீட்டில் அழுத்தம்கொடுத்தே கேட்டார்கள். நந்தினி வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சமாதானங்களைச் சொல்லிவிட்டே கிளம்பியிருந்தாள்.


நந்தினி ஐந்தாம் வகுப்பு படித்தபோது, அவளுடைய அப்பாவுக்கு சென்னைக்குப் பணிமாறுதல் வந்தது. அந்த ஆண்டோடு ஊரைவிட்டு வந்ததுதான். மீண்டும் இருபது வருடங்கள் கழித்து, இப்போதுதான் நந்தினி அங்கு போகிறாள். இடங்கள் மாறிப்போயிருக்கும். ஒருவேளை மாறன் வாத்தியார்கூட மாற்றலாகி வேறு ஊருக்குப் போயிருக்கலாம்; விசாரிக்கலாம் என்றால், அந்த ஊரில் யாருடைய தொடர்பும் கிடைக்கவில்லை.


இப்போதும் மாறன் வாத்தியாரின் முகம் நன்றாக நினைவிருக்கிறது. ஐந்து அடிதான் இருந்திருப்பார் என யூகிக்க முடிகிறது. யாரையும் சீக்கிரத்தில் கோபித்துக்கொள்ள மாட்டார். அப்படியே கோபம் வந்தால்கூட காது நுனியில் ஒரு கிள்ளு கிள்ளுவார். மாணவிகள் என்றால், மண்டையில் வலிக்காமல் ஒரு குட்டு. அவரிடம் அடிவாங்கியிருக்கிறோமா என்று நந்தினி பலமுறை நினைத்துப்பார்த்தாள். இல்லை என்றுதான் உறுதியானது.


மாறன் வாத்தியார் ஆங்கில வகுப்பு எடுப்பது மிக அருமையாக இருக்கும். தினமும் ஒரு வார்த்தையைக் கரும்பலையில் எழுதி, அதை எந்தவிதத்தில் பேச்சில் பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரியும்படி சொல்லிக்கொடுப்பார். கூண்டில் அடைபட்ட பறவைகள் பேசிக்கொள்வதுபோல, அன்றைய தினம் வகுப்பு முழுவதும் அந்த வார்த்தையைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்.


பிரிந்தே கிடப்பது கிராமத்துப் பள்ளியும் ஆங்கிலமும் என்பது தெளிவான ஒரு கல்வெட்டாகப் பதிந்திருந்த காலம் அது. இதை மாற்றவே அவர் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஆங்கிலப் பாடப்புத்தகத்தை ஒவ்வொருவராக எழுந்து சத்தமாக வாசிக்க வேண்டும். வாசிப்பது தவறாக இருந்தால் பொறுமையாகத் திருத்துவார்.


மாறன் வாத்தியாருக்கு எப்படியும் அறுபது வயது கடந்திருக்கும். ஓய்வுபெற்றிருப்பார். மகன் அல்லது மகள்களோடு வெளிநாடு எங்கேயாவது சென்றிருந்தால், ஒருவேளை இறந்தேபோயிருந்தால்? அவரைப் பார்ப்பதற்கான கடைசிக்கட்ட முயற்சி எடுத்தோம் என்ற எண்ணமே போதுமானதாக இருக்குமா என நந்தினி நினைத்துக்கொண்டாள். கீறல் வலிபோல கண்களில் வழிந்த நீர், காற்றின் வேகம் பட்டுத் தெறித்தது.


பக்கத்து ஸீட் பெண்மணி நந்தினியிடம் ‘குட்நைட்’ சொல்லிவிட்டுத் தூங்கத் தொடங்கினாள். நந்தினி மீண்டும் நிலாவைப் பின்தொடர்ந்தாள்.


அதிகாலை நகரத்துக்குள் நுழைந்தது பேருந்து. நந்தினி, ஏற்கெனவே ஆன்லைன் மூலம் அங்குள்ள ஒரு விடுதியில் அறையைப் பதிவுசெய்திருந்தாள். விடுதியில், அந்தக் காலையிலேயே சாம்பிராணி வாசனை வந்தது. விடுதி மேலாளர்,அடையாள அட்டையைக் கேட்டார். ``இந்த ஊரிலேயே இதுதான் பாதுகாப்பான விடுதி.நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் தங்கலாம்'’ என்று, எந்தக் கேள்வியும் கேட்காமலேயே நந்தினியிடம் கூறினார்.

லிஃப்ட்டில் நுழையும் முன்பு, `லிஃப்ட் நல்லா வேலைசெய்யும் கவலைப்படாதீங்க.இந்த ஊரிலேயே எங்ககிட்ட மட்டுமே லிஃப்ட் இருக்குமா’ என்று சொல்லி பெருமைப்பட்டு கொண்டார்.

நந்தினி, தான் போகவேண்டிய கிராமத்தின் பெயரைச் சொல்லி, அங்கு போக காலை கார் ஏற்பாடு செய்துதரும்படி கேட்டாள்.

 

“தனியாத்தான் போறீங்களா?” என்றார் மேலாளர்.


நந்தினி `ஆமாம்’ எனத் தலையசைத்தாள்.


"கவலைப்படாதீங்க,டீசன்டான காரை அனுப்பி வைக்கிறேன்."


"இந்த ஊரிலேயே சுத்தமான கார் அதுதானே"என்று கேட்டுவிட்டு

நந்தினி சிரித்தாள்


"இல்லமா, அந்த டாக்ஸி டிரைவர் மாதிரி இந்த உலகத்திலேயே ஒரு யோக்கியன் இல்ல.ஒரு பிரச்னையும் இருக்காது” என்றார்.

“எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டுரலாம். எட்டரைக்கு வண்டி சொல்லிடுறேன். அது வேணுமா, இது வேணுமான்னு கேட்டு யாரும் உங்க ரூம் பக்கம் வர மாட்டாங்க. எதுவும் வேணும்னா இந்த நம்பருக்கு போன் செஞ்சா போதும். கவலைப்படாம ரெஸ்ட் எடுங்க” என்றார்.


சொன்னபடி எட்டரை மணிக்கு அந்த உலக யோக்கியன் வந்தார். கார் புறப்பட்டது.


ஏறி உட்கார்ந்ததும் ஓட்டுநர் பாடலை ஓடவிட்டார். ஓட்டுநருக்கு நாற்பது வயது இருக்கும். எண்பதுகளில் வந்த காதல் பாடல்களின் தொகுப்பாக இருந்தது அவரது பாடல் ரசனை.


முதல் பாடலே நந்தினி மிகவும் விரும்பும் ஒரு பாட்டு. தன்னையும் அறியாமல் நந்தினி மெள்ள முணுமுணுக்கத் தொடங்கி நிறுத்திக்கொண்டாள்.


சட்டென, “பாட்டெல்லாம் வேண்டாங்க” என்றாள்.


“வேறதானும் புதுப் பாட்டு போடட்டுமா?”


“வேண்டாம்” என்றாள் உறுதியாக.


ஓட்டுநர் முன்பக்கக் கண்ணாடி வழியே நந்தினியின் முகத்தைப் படிக்க முயன்றார்.


நந்தினி கண்களை மூடிக்கொண்டாள்.


ஊர் வந்துவிட்டது.


ஓட்டுநரிடம் தான் படித்த பள்ளியின் பெயரைச் சொன்னாள்.புறநகர்ப் பகுதி ஒன்றினுள் நுழைந்ததுபோல இருந்தது.கார் செல்லும்போதே ஒவ்வோர் இடமாக நந்தினிக்கு நினைவு வந்தது. இதற்குப் பிறகு வலதுபக்கம் திரும்ப வேண்டும் என நினைத்தாள். காரும் அதேபோல் திரும்பியது.


பள்ளிக்கூட வாசல் வந்தது. வண்ணங்களை இழந்து நின்றது இன்னும் பழசாய்ப்போன அவளின் பள்ளிக்கூடம்.


நந்தினி படிக்கும்போதே தலைமை ஆசியருக்கு எனத் தனி அறை கிடையாது. கால மாற்றத்தால் இப்போது ஓர் ஓலைக்குடிசையின் வாசலில் `தலைமை ஆசிரியர்’ என்று ஒரு கரும்பலகையில் எழுதிவைத்திருந்தார்கள்.


இப்போது அந்தப் பள்ளிக்குப் பெண் ஒருவர், தலைமை ஆசிரியையாக இருந்தார். தான் அந்தப் பள்ளியின் பழைய மாணவி என்று நந்தினி சொல்ல, அவர் மகிழ்ந்து பேசினார். அவள் படித்த வகுப்பறைகளைக் காட்டுவதற்காக தலைமை ஆசிரியை எழுந்தார். `வேண்டாம்' என அவசரமாக மறுத்துவிட்டு, மாறன் வாத்தியார் பற்றி விசாரித்தாள் நந்தினி.


தலைமை ஆசிரியை சொன்ன தகவல்கள் நந்தினிக்குத் திருப்தியாக இருந்தன.


மாறன் வாத்தியாரின் வீட்டு முகவரி சொல்ல, ஒரு மாணவனை அழைத்தார்.அவன் மாறன் வாத்தியாரின் வீட்டு வழியை சொல்லிவிட்டு தேங்க்ஸ்க்கா” என்றான்.


“நான்தான்டா உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்” என்றுவிட்டு பையில் இருந்து ஒரு சாக்லேட் எடுத்து கொடுத்தாள் நந்தினி.

அதை வாங்கிவிட்டு பையன் வெட்கப்பட்டுச் சிரித்தபடி வகுப்பை நோக்கி ஓடினான்.


இரண்டு தெரு தள்ளி கிழக்குத் தெருவில் மாறன் வாத்தியார் வீடு இருந்தது.


வாத்தியாரின் வீட்டு வாசலில், அவர் பெயரையும் செய்த தொழிலையும் சொல்லும் பலகை ஒன்று காணப்பட்டது. முகப்புக் கூரையில் ‘அன்னை பவனம் 1980’ எனக் கிளிப்பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. செருப்பை எங்கே கழற்றுவது என நந்தினி யோசிக்கும் நேரத்துக்குள்ளாகவே ஒரு பெண்மணி உள்ளே இருந்து எட்டிப்பார்த்தாள். அவரின் மனைவியாக இருக்கும்.


“மாறன் சார்..?”


“இருக்காங்க. உள்ள வாங்க. நீங்க யாருன்னு பிடிபடலையே?” என்று கேட்கும்போதே நந்தினியை எடை போட்டாள்.


நந்தினி உள்நுழையும்போதே சொன்னாள், “நான் சார்கிட்ட படிச்சேன்.”


“ஓ! அப்படிச் சொல்லு. இங்கே இரு” என்று தங்க நிறத்தில் பூப்போட்ட சிவப்பு நிற குஷன் நாற்காலி ஒன்றைத் தன் பக்கமாக இழுத்துப் போட்டாள். மற்றொரு பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை நந்தினியின் பக்கம் தள்ளிவைத்தாள்.


உள்ளே இருந்து மாறன் வாத்தியார் வந்தார். நினைத்தது சரிதான் ஐந்து அடிதான் இருந்தார். தோளில் துண்டு தொங்கியது. அதை எடுத்துச் சிவப்பு நிற குஷன் நாற்காலியின் முதுகில் போட்டார். உட்கார்ந்ததும் நந்தினியை அவர் பார்த்த பார்வையில் யோசனையும் கூர்மையும் தெரிந்தன.

 

“வணக்கம் சார். நான் உங்கக்கிட்ட படிச்சேன். என் பேர் நந்தினி.”


வாத்தியார் நந்தினியின் தேர்ந்த தோற்றத்தை அளந்தபடி இருந்தார்.


கத்தரிக்கப்பட்டு தோளில் தொங்கிய முடி, திருத்தப்பட்ட புருவம், மெல்லிய ஒப்பனை, சென்ட் வாசம், வெள்ளை நிறச் சுடிதார் உடையில் நகரச் சாயலோடு இருந்தாள் நந்தினி. நடுநடுவே கொஞ்சம் பெருமையோடு தன் மனைவியையும் பார்த்துக்கொண்டார்.


“நீங்களும் உட்காருங்களேன்” என்றாள் நந்தினி, வாத்தியாரின் மனைவியைப் பார்த்து.


“இருக்கட்டும்” - இழுத்தபடி அவள் தயக்கமாக அவரைப் பார்த்தாள்.


“எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். பத்திரிகை கொடுக்கணும்” என்றதும் வாத்தியாரும் அவரது மனைவியும் ஆச்சர்யப்பட்டனர்.


“சந்தோஷம்... சந்தோஷம். என்னம்மா இதுக்கு இவ்வளவு தூரம் வரணுமா?” என்றார் பத்திரிகையைப் பிரித்து படித்தபடி. அவர் முகத்தில் அளவில்லா பெருமை பரந்து விரிந்தது.


“உங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டிய கடமை இருக்கு சார்” என்றாள் அவள்.


உள்ளே இருந்து ‘ஆச்சி’ என்று குரல் கேட்டது.


“இங்கே வாம்மா” என்று அங்கு பார்த்துக் குரல்கொடுத்துவிட்டு, “என் பேத்தி... மூணு வயசாகுது. பக்கத்துத் தெருவுலதான் என் மகன் வீடு. ஆனா, இங்கேதான் எப்பவும் இருப்பா” என்றார் வாத்தியாரின் மனைவி. சொல்லும்போது அவரின் முகத்தில் அப்படி ஓர் ஆனந்தப் பெருமை.


நந்தினி அப்பாவின் பெயர், வீடு இருந்த இடம், படித்த வருடம் எல்லாவற்றையும் வாத்தியார் விசாரித்தார். நந்தினி நிதானமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள்.


அவர் யோசனையோடு தரையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்த்த இடத்தில் சங்கு ஒன்று பதிக்கப்பட்டிருந்தது கீறலாகத் தெரிந்தது.


“உனக்கு, இருபத்தஞ்சு வயசு இருக்குமா?” என்று கேட்டாள் வாத்தியாரின் மனைவி.


`‘முப்பது.’’


“பார்க்க லட்சணமா இருக்க.உன் அழகுக்கும் அறிவுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்குனுமேமா?! இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கியே?. எங்க மகளுக்கு இருபது வயசுலேயே கல்யாணத்தை முடிச்சுட்டோம்” என்றாள்.


“கல்யாணம்னாலே பயமா இருந்தது அதான்.” என்றாள் நந்தினி.


“அது என்ன அப்படி?’’


“நீ போய், குடிக்க கலர் எடுத்துட்டு வா” என்றார் வாத்தியார் வேகமாக.


சுவாரஸ்யப் பேச்சை அறுபடவிட மனமில்லாமல், உள்ளே போகாமலும் நிற்க முடியாமலும் சில நொடிகள் தவித்துப்போனாள் அவரின் மனைவி.


“எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க” என்றாள் நந்தினி. ‘அதான் சரி’ என்பதுபோல் நின்றுவிட்டாள் வாத்தியாரின் மனைவி.


“என்னத்துக்குக் கல்யாணம் மேல பயம்?” என்று தொடர்ந்தாள்


“பயம்னு சொல்ல முடியாது. வெறுப்பு.”


“இப்ப சரியாகிருச்சா?” என்றாள் குசும்பான சிரிப்போடு.


“சரியாகிடும்னு நினைக்கிறேன். டாக்டரும் அப்படித்தான் சொன்னாங்க.


அவர்கள் புரியாமல் பார்க்க, “கல்யாணத்துல ஈடுபாடே இல்லாம இருக்கிறேன்னு எங்க வீட்டுல உள்ளவங்க மனநல டாக்டர் ஒருத்தரைப் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. அவர்தான் சாரை நேர்ல போய்ப் பார்க்கக் சொன்னார்.”


வாத்தியாரின் மனைவி புருவம் உயர்த்தினாள்.


“சார், நல்லா இங்கிலீஷ் எடுப்பார். அதை நான் மறக்கவே இல்லை. அதோடு வேற ஒரு விஷயமும் செய்துட்டார். அதையும் மறக்க முடியலை” - நந்தினிக்குக் குரல் அடைத்தது.

 

தரையில் நீட்டியிருந்த தன் காலை இழுத்துக்கொண்டார் வாத்தியார். முதுகு முன் வளைந்தது. லேசாக வாயைத் திறந்தே வைத்திருந்தார் மூச்சுக்காகவேண்டி.


“உங்களுக்கு மறந்திருக்காது. மறந்திருச்சுன்னும் சொல்லிராதீங்க சார். ஒருநாள் சாயங்காலம் எல்லா பிள்ளைங்களும் போன பின்னாடி என்னை மட்டும் இருக்கச் சொன்னீங்க. அன்னிக்கு நீங்க எங்கிட்ட நடந்துக்கிட்டது தப்புன்னு அப்பவே தெரியும். ஆனா, `யார்கிட்டயும் சொல்லக்கூடாது'ன்னு சொன்னீங்க. இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொல்லலை. டாக்டர் கிட்டதான் முதல்ல சொன்னேன். அவர்தான் உங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னார்.”


அவள் வந்தபோது இருந்ததுபோல் இல்லை. இப்போது வேறு மாதிரி தெரிந்தாள்.


`‘சார், அன்னிக்கு என்ன நடக்கப்போகுதுன்னு குழந்தையா இருந்த எனக்குத் தெரியாது. ஆனா, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இல்லையா?


...இப்ப உங்களுக்கு என் முகம் நினைவுக்கு வருதா சார்?


நல்லா படிச்சிருக்கேன். நல்ல வேலையில இருக்கேன். ஆனாலும் அழிக்க முடியாத காயமா அது பதிஞ்சுபோச்சு. கல்யாணப் பேச்சு வந்தாலே, பயம், வெறுப்பு, எரிச்சல்னு அது அலைக்கழிச்சது எனக்குத்தான் தெரியும். கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி எங்க வீட்டுல எல்லாரும் சொல்லிட்டே இருந்தாங்க. `முடியாது’ன்னு எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவங்க கேட்கவே இல்லை. ஒருநாள் எனக்கும் எங்க அப்பாவுக்கும் பெரிய சண்டையே வந்தது. சாதாரணச் சண்டை இல்லை. ஆம்பளைங்கிறதால அவரை அடிக்கவே போயிட்டேன். அன்னிக்கு பஸ்ல போகும்போது திரும்பத் திரும்ப உங்க முகம் கண் முன்னாடி வந்துட்டே இருந்தது. சட்டுன்னு பஸ்ஸிலிருந்து குதிச்சுட்டேன். நல்ல அடி. நான் யாருன்னு கண்டுபிடிச்சு எங்க வீட்டுக்குத் தகவல் தெரியவரும் போது ரெண்டு நாள் போயிருந்தது. அந்த ரெண்டு நாளும் சுயநினைவே இல்லாம யாரோட துணையும் இல்லாம ஆஸ்பத்திரியில் இருந்திருக்கேன். அதுக்கு அப்புறமும் ஒரு மாசம் ஆஸ்பத்திரியிலதான் இருந்தேன். இதோ இப்ப வரைக்கும் என்னால வேகமா நடக்க முடியாது.


தூக்கமே வராம கஷ்டப்பட்டு உடம்பு உருக்குலைஞ்சுப்போய், அதுக்கு நீங்க மருந்து மாத்திரை எடுத்த அனுபவம் இருக்கா சார்?


இருட்டைப் பார்த்தாலே பயம் வந்து, அப்புறம் வெளிச்சம் இருந்தாத்தான் சுவாசிக்கவே முடியும்கிற நிலைமை வந்தா, மருந்து கொடுத்து சரிபண்ணுவாங்க. ஆனா, அந்த மருந்தைச் சாப்பிட்டா உடம்புக்குள்ள என்ன நடக்கும்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?


உங்களைப் பற்றி எப்ப நினைச்சாலும் தானாவே கண்ணீர் வரும். அதை அடக்க முடியாம போற அவமானம் எப்படிப்பட்டது தெரியுமா? தப்பே செய்யாத நான் இப்ப வரைக்கும் தொடர்ந்து தண்டனையில் இருக்கேனே சார். நீங்க நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு நந்தினி, வாத்தியாரையே பார்த்தாள்.


அவர் நாற்காலியின் ஒரு மூலைக்குள் பொதிந்துபோனதுபோல இருந்தார்.


வீட்டின் உள்ளே இருந்து கொலுசுச்சத்தம் மெலிதாகக் கேட்டது.


வாத்தியாரின் மனைவி எப்போது தரையில் உட்கார்ந்தாள் என்பதை நந்தினி யோசித்துப்பார்த்தாள்.


உள்ளே இருந்து குழந்தை கையில் சிறிய தட்டுடன் வந்து பாட்டியின் மடியில் உட்கார்ந்தது. நந்தினியையே பார்த்தது. ஒரு கையால் கண்களை மூடிக்கொண்டு விரல்களின் இடைவெளி வழியே நந்தினியைப் பார்த்து வெட்கத்தோடு புன்னகைத்தது.


“இவங்கதான் உங்க பேத்தியா? பள்ளிக்கூடத்துல சேர்த்தாச்சா?” என்று கேட்டாள் நந்தினி.


இருவருமே பதில் சொல்லவில்லை!


Rate this content
Log in

Similar tamil story from Drama