விடியலுக்காக
விடியலுக்காக
வாழ்க்கை!
இந்த பூமி அழகாக காட்சியளிக்கலாம்!
அதிலும் வாழ முடியாத அளவுக்கு
வறண்ட பாலைவனங்கள் உண்டு!
குளிர்ந்த பனிப்பிரதேசங்களும் உண்டு!
இவற்றை மட்டும் கண்டு
பூமி வாழத் தகுதியற்றது
என எண்ணிடலாமோ?
வாழ்க்கையும் அப்படித்தான்!
கவலைகள் கழுத்தை நெறிக்கலாம்!
கஷ்டங்கள் காலைப் பிடித்து இழுக்கலாம்!
சஞ்சலங்கள் நெஞ்சைப் பிழியலாம்
துயரங்கள் நம்மை அடித்து துவைக்கலாம்!
எந்த சூழலிலும் தைரியம் வேண்டும்!
இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் வேண்டும்!
வாழ்ந்து தான் பார்ப்போமே
வைராக்கியம் வேண்டும்!
அமைதியான இளந்தென்றலை
அனுபவிக்கும் நாம்
கடுமையான சூறாவளியையும்
சந்தித்து தான் ஆக வேண்டும்!
அமைதியான கடலில் தான்
ஆர்ப்பரிக்கும் அலைகளும் இருக்கின்றன!
அவை மண்ணை மட்டும் அரித்து செல்வதில்லை!
அழகான கடல்வளங்களையும்
கரையில் விட்டு விட்டுத் தான் செல்கின்றன!
உயிர் உள்ள வரை உறுதியோடு
போராடுவோம்!
நம்பிக்கையோடு போராடுவோம்!
நம்பிக்கையோடு காத்திருப்போம்!
முடியும் என்ற நம்பிக்கையில்
நாளை விடியலுக்காக!