துணிந்து எழு
துணிந்து எழு
எதிரிகளோடே வாழ்ந்து
ஒவ்வொரு நொடியும்
போராடி ஜெயிப்பது எங்கள்
வயிற்றுக்காக மட்டும் அல்ல
வாழ்வுக்காகவும் தான்!
எதிரியின் பிடியிலிருந்து தப்பித்தோம் இனி பயமில்லை
என்றெண்ணி இறுமாப்பாய்
இருந்து விட முடியுமா என்ன?
கடிபட்ட காயத்தோடே
புண்பட்ட நெஞ்சத்தோடே
கால்கள் ஒடிந்தே போனாலும்
ஒருக்காலும் நம்பிக்கை உடைவதில்லை!
உயிர் உள்ள வரை ஓடுகிறோம்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம்
புண்பட்ட காயத்திற்கு மருந்தில்லை!
பசித்தீக்கு விருந்தில்லை
ஓடிக்கொண்டே இருக்கிறோம்!
உணவுக்காக மட்டுமே!
தினம் தினம் போராடி பிழைக்கிறோம்!
ஒளிந்து வாழ இடமில்லை
ஓய்ந்து வாழ வழியில்லை
உழைத்து போட ஒருவருமில்லை!
முடியவில்லை என மடி சாய்க்க ஆளில்லை!
கொடி பிடிக்க ஆளில்லை !
ஒவ்வொரு நொடியும்
மரணத்தோடு போராடுகிறோம்!
ரணத்தோடே ஓடுகிறோம்!
ஆறுதல் மொழி ஏது?
தேறுதலுக்கு வழி ஏது?
பயந்து வாழுமிடத்தை விட்டு விடவில்லை!
தற்கொலை எண்ணத்தை
தொட்டு விடவில்லை!
படைத்த இறைவனை திட்டி
தீர்ப்பதும் இல்லை!
துன்பத்தை எண்ணி அழுது புலம்புவதும் இல்லை!
மனிதா! எத்தனை வலிமையானவன் நீ!
எங்களைப் பார்!
உடைந்து போகாதே!
ஓய்ந்து போகாதே!
போராடி வாழ்க்கையை
வென்று விடு!
போராட்டமின்றி வாழ்வேது!
எண்ணித் துணிந்து எழு!