தமிழமுது...!
தமிழமுது...!
பொங்கிவரும் காவிரியும்
பூத்துவரும் புதுநீரும்
தங்கமெனத் தகதகக்கும்
கதிரவனின செவ்வொளியில்
சிங்கமென ஓடிவந்து
சிலிர்ப்புடனே மண்நனைத்து
வங்கமதில் கலப்பதைநல்
வியப்புடனே பாரீரோ?
எங்கிருந்தோ வீசுகின்ற
இளந்தென்றல் காற்றினிலே
மங்காத தமிழிசையின்
முழக்கத்தைக் கேட்டீரோ?
அங்கமதைச்சிலிர்க்கவைக்கும்
ஆற்றலது தமிழுக்குண்டு!
பங்கிட்டு வாழ்கின்ற
பண்பாடு தமிழர்க்குண்டு!
தமிழ்மணக்கும் திருநாடாம்
தரணியிலே சீர்நாடாம்
கமழ்கின்ற அமிழ்தும்மைக்
கவர்ந்திழுக்கும் வளநாடாம்
இமைக்காது நோக்கிடுவீர்
இவ்வழகை எந்நாளும்
அமைதியுடன் வாழுமிங்கே
அன்புள்ள இறையுணர்வு!
சாதியில்லை மதமுமில்லை
சங்கடங்கள் எதுவுமில்லை
நீதியுண்டு நேர்மையுண்டு
நெஞ்சினிலே உரமுமுண்டு!
ஆதிமுதல் அந்தம்வரை
அரவணைக்கக் கடவுளுண்டு
தீதின்றி வாழ்கின்ற
திறனுள்ள நெஞ்சமுண்டு!