நீர்க்குமிழிகள்
நீர்க்குமிழிகள்
எனக்கும் எனக்குமான
சிறு இடைவெளியதில்
அந்நிய தேசம் ஒன்று
அன்புடையீர் வாரீரென்று
வந்தனர் சிலர் அன்பு விதைக்க
மற்றவர் சிலர் களையாய் முளைத்தர்
அன்புமில்லை பொய்யுமில்லை நீ
ஏனோ அங்கு வந்து விட்டாய்
காதல் கொள்ள நேரமில்லை
என்று கட்டித்தழுவி நகர்ந்துவிட்டாய்
பிரசவித்தவளின் ஐம்புலன்களும்
சுரக்கும் காம்புதான்
உனை யோசிக்கையில்
என் வெறுப்பும் காதல்தான்
கடிவாளக் குதிரையாய்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அன்பில்லா தேசத்திற்கு
நானோ அமாவாசையிலும்
நிலாக் குளிக்கிறேன்
நீ விட்டுச் சென்ற
தனி மொட்டை மாடியில்
பூவரசம் பூவிற்குள்
மருதாணி வைத்துச்
சென்றது யார்?
உள்ளுக்குள் நாணியே
சருகாகின்றது!
என் உலகம் வந்து பார்
சமுத்திரத்தில் மூழ்கித்
தவிக்கும் மலை போல
முட்ட முட்டக் காதல்!
புரியவில்லையா இல்லை
தேவையில்லையா அன்பு உனக்கு
வேரூண்றாமலே பழுக்க நினைக்கிறாய்
நான் உன்னை விதைத்ததை மறுத்து
இருவேறு நீர்க்குமிழிக்குள்
நம் நாடகங்கள்
உடையாமலே கதை சொன்னால்
ஏது சங்கமங்கள்?
சில கண்ணீர் துளிகள் சிந்தி
உன் முகம் அழித்து நகர்ந்தேன்
ஏதோ ஒரு சாமத்தில்
நினைவுப் பேய்கள் துரத்த
திரும்பி வந்து பார்த்த போது
ஆங்கே உறைந்து கிடந்தது
நான் சிந்திய கண்ணீர் துளிகள்
உன் சாயலில்!