அவையாகிய நான்!
அவையாகிய நான்!
என்றோ ஓர்
பசுங் காலத்தில்
தாழைக் காட்டில்
இரவல் வாங்கிய வாசத்தை
மூச்சுக் காற்று
மூங்கில் காட்டில்
தொலைத்து அலைந்தது
அக்காடு அதை
இழைத்துக் குழைத்து
துளைக்குள் புதைத்து
இன்று
செவிக்குள் நுழைத்தது
வாசந்தியோ ஹம்சாநந்தியோ
அதில்
தாழையின் வாசமும்
இல்லை
மூச்சின் ஸ்ப ரிசமும்
இல்லை
என்றாலும் ஓர்
பரிச்சியம்
வேற்றுமை போலியோ
வேங்குழல் வேழ்வி யோ?
எல்லையற்ற அண்டவெளி
எங்கும் ஒருநாள்
பவனி வருவேன்
அந்நாளில்
இம்மொழி இருக்குமா
தெரியவில்லை
இல்லாவிட்டால் தான்என்ன?
அன்றும் அறிவுக் கூடில்
மை தோய்த்து
நிதம் மாறும்
உண்மையை
நிழற் கோலம்
போடுவேன்
இயல் மாறி
வினை மாறி
ஒளிச் சாரம்
தீட்டுவேன்
நட்சத்திரங்களென்ன
மொழி கற்றுக்கொண்டா
ஒளிர்கின்றன?
வேகமோ பாரமோ
ஏதோ ஒன்று
முட்டி மோதி
தட்டி விழுந்த
கால இயந்திரத்தில்
காலடி கரைந்தோட
நீரடி பட்டுத்
தெரித்து
தூசித் துகளாகி
இப்பிரபஞ்ச சாகரத்தின்
சாளரத்தின் வழியே
எட்டிப் பார்ப்பேன்
அங்கேயும் வெளியிடம்
அங்கேயும்
அக்கினிக் குஞ்சு
பூமிப் பிஞ்சு
அவையாகிய நான்
நானாகிய அவை!