பூமிக்குழவி
பூமிக்குழவி
உழவே தலையென்ற உம்பர்
வாக்கும் ஏட்டெழுத்தாச்சு!
காடு கழனியெல்லாம் தலைசாய்த்த காலமும் கனவாச்சு!
ஏரி குளமும் கண்மாயும் ஊருணியும் எங்கே எனத் தேடலாச்சு!
மாரி மாரி மாரி எனவே
கூலிக் கூவி அழைத்துமாச்சு!
பசுமையெலாம் ஓடி ஒளிஞ்சி
கண்ணாமூச்சி காட்டும் ஆட்டமாச்சு!
நிலவளம் நீர்வளம் வற்றி கானல் நீர் காட்டலாச்சு!
இயற்கை அழகெல்லாம் முடிந்து போன பாட்டிகதை போலாச்சு!
ஆண்-பெண் ஒழுக்கமென்ற பேச்சே மகாபாவமாச்சு!
தனிமனித ஒழுக்கமது எங்கே போச்சென்ற கேள்விக்குறியாச்சு!
ஆசிரியப்பணியே அறப்பணியென்ற பொற்காலமும் போச்சு!
அடித்து வெளுத்த வாத்தியைத்தான் தேடும் படலமாச்சு!
அணைத்து வளர்த்த அன்பைத்தான் தொலைத்த திருவிழாவாச்சு!
ஏமாற்றம் ஒன்றே நேர்மைக்குப் பரிசாச்சு!
ஏனிந்த மாற்றம் என்றே எண்ணி எண்ணி சலிச்சாச்சு!
பகவானே வரினும் நேராக்கிட முடியாக் கோணலாச்சு பூமி!
அகத்தினிலே தூய அன்பிருப்பின் பூமியும் சாமியும் நம் வசமாமே!
மாணவரெல்லாம் மாணிக்கமாக வேணும்!
மனிதரெல்லாம் மனதிலுயர வேணும்!
கத்தும் ஓசை காதில் ஏற வேண்டும்!
முத்து முத்தான காலம் மலர வேண்டும்!
ஏரும் தாரும் கலகலக்க வேணும்!
காரும் நீரும் சலசலக்க வேணும்!
இவையெல்லாம் மடமடவென நடந்தேற வேணும்!
உலகத்தாய் வயிற்றில் புத்தம்புது தூயபூமிக்குழவி
உருவாக வேணும்!