மோனாலிசா அவனைப் போல்!
மோனாலிசா அவனைப் போல்!
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
பேரன் பிறந்த போது
பேருவகை கொண்டேன்
அறுபதிலும் வாழ்வதற்கு
ஓர் அர்த்தம் கண்டேன்
மகனும் மருமகளும் கூட
பெரிதாய்த் தெரியவில்லை.
உற்ற மற்ற உறவுகளும்
மனமதிலே பதியவில்லை
அவன் முக அழகு போல்
அதுவரை கண்டதில்லை
அந்த அவன் பார்வை
ஆழமாய் என் நெஞ்சில்
அவன் இதழோரப் புன்னகைக்கு
ஈடுமில்லை இணையுமில்லை
இதழ் குவித்துஅவன் சிரித்தால்
மோனாலிசா அவனைப் போல்!
தாயிடம் இருந்த போதும்
தாவி வரும் தளிரவன்
தந்தையையும் தவிர்த்துத் தாவும்
தவ வாழ்வுப் பொக்கிஷம்
கையில் அவன் இருந்தால்
கர்வம் இறுமாப்பு என் உள்ளே
எனக்கும் அவனுக்கும்
இடையிலே ஒரு நயன பாஷை
யாருக்கும் புரியாத
அர்த்த புஷ்டிப் பரிமாற்றம்
பார்க்கும் இடத்திலெல்லாம்
பேரப் பிள்ளையே
கால நேரமின்றி
கண்ணில் நிறைந்தான்
என்னுடய எல்லாமும்
அவனே ஆனான்
இருபத்திநாலு மணி நேரமும்
இன்பம் இன்பம்
நன்றாய்த்தான் போய்க்
கொண்டிருந்தது…
திடீரென இருள்
எங்கும் எங்கெங்கும்
நின்றிருந்த நிலம்
நழுவிச் சாய்த்தது
உச்சி முதல் உள்ளங்கால்
வரை பரவும் பதற்றம்
கதி இழந்த
பறவைக் குஞ்சானேன்
மதி - மயங்கி
மங்கிப் போனது
நான்…
முதியோர் இல்லத்தின்
முகப்பில் விடப்பட்டேன்
வாரம் ஒரு முறை
வருவதாய்ச் சொன்னார்கள்
நேரம் வரும் வரைக்
காத்திருக்க முடியுமா?
பேரன் அவன் நினைப்பில்
பேதலிக்குது மனசு
இப்படி நோகடித்தால்
இக்கிழம் என் செய்யும்?