கருத்து முனை
கருத்து முனை
குருத்து முனை இல்லாமல் மண்ணில் தாவரங்கள்
விளைவில்லை...
கருத்து முனை
ஆரம்பம்...
புள்ளி அல்லது
பூஜ்ஜியமே...
கருத்துமுனை
தாயிடம்
கருவறையில்
துவங்குகிறது...
கருத்து முனை
எழுதுகோலில்
பதியப்படுகிறது...
கருத்துமுனை
எழுச்சியால்
விதைக்கப்படுகிறது
கருத்து முனை
சூழ்ச்சியால்
விதிக்கப்படுகிறது...
கருத்துமுனை
சர்வாதிகாரத்தால்
தகர்க்கப்படுகிறது...
கருத்து முனை
ஞானிகளால்
தழைக்க வைக்கப்படுகிறது...
கருத்து முனை
வேரூன்றினால்
தியாகங்கள்
அவதாரமெடுக்கிறது...
கருத்து முனை
விஞ்ஞானத்தில்
விருத்தியாகி
வாழ்வாதாரமாகிறது...
கருத்து முனை
பக்தியில் புகுந்து
போலிச்சாமியாரிடம்
அடைக்கலமாகிறது...
கருத்து முனை
காலவதியாகாமல்
இளைஞர்களிடம்
படைக்கலமாகிறது...
இறைவனின்
கருத்துமுனை
அழியாக்கடலலையும்
அணையா கதிர்தீயும்...
மனிதனின்
கருத்து முனை
தீதில்
மானிடப்பதராய் ...
நன்றில்
மங்காப்புகழ் பிறப்பாய் ...
கருத்து முனை
மழுங்கினால்
நற்சிந்தனையால்
கூர்தீட்டு...
கருத்து முனை
கூரானால்
உலகம் வியக்க
வாழ்ந்து காட்டு...