ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 8
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 8
விபூதி
சிவன் கோவிலை நடுநாயகமாகக் கொண்டு அமைந்தது அந்த ஊர். ஊர் சிறியது தான்.ஆனால் அங்கு வாழும் மக்கள் சிவபக்தியில் சிறந்து விளங்கினர். அந்த ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர் சிவகாமி அம்மாள். சிறுவயதில் பெற்றோர்களுடன் சிவன் கோவில் போவது வழக்கமான ஒன்று.
கோவில் மிகப் பழமையானது. அதனால் சுவர்கள் பாழடைந்து பழுது பார்க்கப் படாமல் இருந்தன. கோவிலின் சிறிய கருவறையைச் சுற்றி ஒரே ஒரு வெளிப்பிரகாரம் மட்டுமே உண்டு. சிவன் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தியும் கொடிமரமும் தாண்டி ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஆல மரத்தை சுற்றி ஒரு மேடை கட்டப்பட்டிருந்தது.
கோவிலுக்கு வருவோர் சிறிது நேரம் அமர்ந்து செல்ல கோவிலைச் சுற்றி மணல் பரப்பாக இருப்பதால் அந்த ஆல மரத்தடி மேடையைத் தான் அனைவரும் பயன் படுத்துவர். பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் நந்திக்கு அருகில் யாகம் வளர்த்து பூஜை செய்வதும், யாக குண்டத்தின் சாம்பலை விபூதி பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவதும் பூசாரிகள் பரம்பரை பரம்பரையாக செய்து வரும் வழக்கம்.
சிவகாமி அம்மாள் சிறு வயதில் இருந்தே அந்த விபூதியை பயபக்தியுடன் வாங்கி நெற்றியில் பூசுவதும் மீதியை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து தினமும் குளித்த பின் அதை நெற்றியில் இட்டுக் கொள்வதும் வழக்கமான ஒன்று. திருமண வயதில் வெளியூர் மாப்பிள்ளை பார்க்க மனமில்லாமல் பெற்றோர்கள் உள்ளூர் மாப்பிள்ளைக்கு சிவகாமியை மண முடித்துக் கொடுத்தனர். இதனால் சிவகாமிக்கு கோவிலுக்கு போவதும் பயபக்தியுடன் விபூதி பிரசாதம் வாங்குவதும் தடையில்லாமல் நடந்தேறியது.
பிள்ளைகள் பிறந்தார்கள்;ஆண் ஒன்று,பெண் ஒன்று என அமைந்ததால் சிவகாமியும் அவள் கணவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். விபூதி மேல் இருந்த நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகம் ஆயிற்று. வருடங்கள் ஓடின. பிள்ளைகள் பெரியவர்களானதும் இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கைக்கு மாறியதால் மேற்படிப்புக்காக வெளியூர் சென்றவர்கள் அப்படியே வேலைக்காக வெளிநாடு சென்று அங்கேயே செட்டில் ஆனார்கள்.
பெற்றோர்களுக்கு சொந்த ஊரை விட்டு வர மனமே இல்லை.சிவகாமி அம்மாளின் கணவர் தனது எழுபதில் இயற்கை எய்தினார். அறுபதைத் தாண்டிய சிவகாமி அம்மாளை தனியே விட மனமில்லாமல் தங்களுடன் அழைத்துச் சென்றனர் பிள்ளைகள்.
சிவன் கோவிலின் பூசாரிக்கும் வயதானது.அவர் மறைவுக்குப் பின் அவர் மகன் கோவில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். காலத்திற்கேற்ற மாற்றங்கள் கோவிலிலும் ஏற்படலாயிற்று.கோவில் மடப்பள்ளியில் விறகடுப்புக்குப் பதிலாக கேஸ் அடுப்பு, எண்ணெய் விளக்குகளுக்கு பதிலாக டியூப்லைட், மணற்பரப்பெல்லாம் பளிங்கு தரை என்று மாற்றம் பெற்றன.
இதனால் ஆலமரத்தடியில் அமராமல் மக்கள் யாகம் நடக்கும் இடத்திற்கு அருகில் அமர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். எத்தனை நவீன மாறுதல்கள் வந்தபோதும் யாகம் நடத்துவதும் யாகத்தின் சாம்பலை விபூதிப் பிரசாதமாக வழங்குவதும் மட்டும் மாறவே இல்லை; என்றும் அது மாறாத நிகழ்வாக நடப்பதை ஊர்மக்கள் பெருமையாகப் பேசிக் கொண்டார்கள்.
வெளிநாட்டில் இருந்தாலும் சிவகாமி அம்மாளுக்கு தன் ஊர், கோவில், விபூதி பிரசாதம் இவைகளை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தன் மகன் வீட்டில் இருக்கும் போது மருமகளிடமும் பேரன் பேத்தி இருவரிடமும் இதைப் பற்றி அடிக்கடி பேசுவார்.
மாமியார் மெச்சும் மருமகள் என்பதால் மருமகள் மாமியார் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்வாள். மாமியாரின் ஏக்கத்தைப் போக்க ஒருமுறை அவரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல கணவருடன் சேர்ந்து முடிவெடுத்தார்.
மகன் இந்தியா வர செளகரியப்படாததால் மருமகள், பேரன், பேத்தி இவர்களுடன் சிவகாமி அம்மாள் சொந்த ஊர் வந்தார். மருமகளுக்கும் பேரன் பேத்தி இருவருக்கும் தான் வாழ்ந்த வீட்டைச் சுற்றிக் காண்பித்தார்.மாலை அனைவரும் சிவன் கோவில் சென்றனர். அன்று பிரதோஷம் என்பதால் யாகம் நடந்தது. பூசாரி மகன் சிவகாமி அம்மாவை அடையாளம் கண்டு கொண்டு நலம் விசாரித்தார்.
சிவகாமி அம்மாள் பெருமையுடன் தன் மருமகள், பேரன், பேத்தி மூவரையும் அறிமுகப்படுத்தி கோவிலை சுற்றி வந்து விபூதிப் பிரசாதத்தை என்றும் போல் பயபக்தியுடன் கைகளில் வாங்கிக் கொண்டார். மருமகளும் மாமியார் போலவே விபூதியை வாங்கிக்கொண்டு குழந்தைகளுக்கும் கண் ஜாடை காட்ட அவர்களும் தங்கள் ஐயாம்மையைப் போலவே மிகவும் பவ்யமாக கைகளை நீட்டி விபூதியை வாங்கி கொண்டார்கள்.
ஆலமரத்தடி மேடைக்குச் சென்று அமர்ந்த சிவகாமி அம்மாள் தன் பழைய நினைவுகளில் மூழ்கினாள். குழந்தைகள் இருவரும் சிறிது நேரம் ஆலமரத்தைச் சுற்றி விளையாடினார்கள். மருமகள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்த பூசாரி அவளிடம் கோவிலுக்கு காணிக்கை அனுப்ப வேண்டி தன் பேங்க் அக்கௌன்ட் விவரங்களை கூறிக்கொண்டிருந்தார். மருமகளும் காலத்திற்கேற்ற கோலம் என நினைத்துக்கொண்டே விபரங்களை தன் மொபைலில் சேகரித்து கொண்டாள்.
அந்த நேரத்தில்……. பின்புறம் உள்ள மடப்பள்ளியில் இருந்து சமையல்காரர் நைவேத்திய பாத்திரங்களை கழுவுவதற்காக வெளியே கொண்டு வந்து வைத்தார்.பாத்திரங்கள் அனைத்தையும் குழாயடியில் வைத்தபின் நேரே யாககுண்டம் பக்கத்தில் சென்று யாககுண்டத்தில் இருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு சாம்பலை எடுத்தவர் பாத்திரங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதன் மேல் வைத்து கரகரவென தேய்க்க ஆரம்பித்தார்.